thimil

(14) விஷம் கொடுத்து கொல்லப்பட்ட வீரன்?

மாடுபிடி வீரர் ஒருவருக்கு, கோவில் கட்டி வணங்கிவரும் வியப்பான நிகழ்வை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்...

நாங்கள் எடுத்த "பேட்டைக் காளி' வலைத்தொடரில் பாண்டி என்கிற கதாபாத்திரத்தை படைத்திருப்போம். பாண்டி முல்லையூரைச் சேர்ந்த சிறந்த மாடுபிடி வீரன். கொல்லேறு கண்டாலும் பயம் அறியா வீரன். மாட் டைப் பிடிக்கும்போது, மாடு குத்துவதால் வரும் தழும்புகளை தனக்கு கிடைக்கும் விருதாக நினைப்பவன். மாடுபிடி வீரர்களுக்கு பாண்டி ஒரு ஹீரோ மாதிரியானவன். அதனாலேயே பாண்டியை மணக்க ஊரில் பல பெண்கள் ஆசைப்படுகின்றனர். பாண்டி தாமரைக்குளம் என்கிற ஊரின் பண்ணையார் மாட்டைப் பிடிப்பதால் சூழ்ச்சி வலையில் சிக்கி கொல்லப்படுகிறான்.

Advertisment

பாண்டி கதாபாத்திரத்தை வடிவமைப்பதற்காக சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன், மதுரை விக்ரமங்கலம் பகுதியில் வாழ்ந்த அழகாத்தேவர் என்கிற மிகப்பெரிய மாடுபிடி வீரரின் நிஜ வாழ்க்கையி லிருந்து சம்பவங்களை எடுத்துக் கொண்டோம். மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள விக்கிரமங்கலம், மேலசொரிக்கான்பட்டியில் அழகாத்தேவருக்கு கோயில் கட்டி அப்பகுதி மக்கள் இன்று வரை வணங்கிவரு கிறார்கள். மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்கு செல் லும் முன் அழகாத்தேவர் கோவிலில் வணங்கி விட்டுச் சென்றால் காயம் படாது என்று நம்புகிறார்கள். கோவில் கட்டி வணங்கும் அளவிற்கு அந்த மாடு பிடி வீரன் செய்தது என்ன?

சுமார் நான்கு தலைமுறைகளுக்கு முன், விக்கிரமங்கலத்தில் அழகாத்தேவன், சமயன் என்ற இரு நண்பர்கள் இருந்தனர். ஜாதி வேறுபாடுகளைக் கடந்ததாக இருந்தது அவர்கள் இருவரின் நட்பு. பிடிபடாத மாடு களைப் பிடிப்பதில் பெயர் பெற்றவன் அழகாத்தேவன். சமயனும் அழகாத்தேவனும் ஜல்லிக்கட்டுகளில் இறங்கினால், சமயன் வாலெடுப்பார். அழகாத்தேவன் திமில் ஏறுவார். அழகாத்தேவன் மாடு பிடிப்பதில் பல நுட்பங்களை தன் ஊர் மக்களுக்கு கற்றுக் கொடுத்தார். இப்படி தொடர்ந்து ஜல்லிக்கட்டு களில் இறங்கி சுற்றுவட்டார கிராமங்களில் புகழ்பெற்று விளங்கினார். விக்கிரமங்கலத்தின் அருகாமையில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்தைச் சேர்ந்த மாடுகளை அழகாத்தேவன் பிடிப்பதால், அந்த கிராமத்தினருக்கு அவருடன் பகை ஏற்படுகிறது. அவரைக் கொல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கும் ஒரு குழுவினர், பொதுவாக வாடியில் இடதுபக்கம் பாயும் ஒரு மாட்டை வலதுபக்கம் பாயும்படி கன்னுக்குட்டி யிலிருந்து பழக்குகிறார்கள். அந்த கன்று வளர்ந்து காளையானதும் கீழக்குயில்குடி யில் நடத்தப்படும் ஜல்லிக் கட்டில் அவிழ்க் கிறார்கள். இடதுபக்கம் பாயும் காளையை பிடிப்பதற்காக வலது வாடிக்கட்டையில் நின்ற அழகாத்தேவனை வாடியிலிருந்து வெளியே வந்த காளை குத்தி விடு கிறது. அழகாத்தேவன் குடல் சரிந்து விழு கிறார். இருந்தாலும் சரிந்த குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி ஒரு துண்டை எடுத்துக் கட்டிக்கொண்டு காளையை பிடிக்கிறார். மாடு பிடிமாடு ஆகி றது.

Advertisment

tt

சமயன், அழகாத் தேவனை தூக்கிக் கொண்டு ஊருக்கு வரும்போது அழகாத் தேவன் தாகமாக இருப்பதாகக் கூற, அவரை இறக்கி வைத்துவிட்டு அருகில் இருக்கும் குளத்தில் இருந்து சமயன் நீர் எடுத்து கொடுத்தார். சமயன், அழகாத்தேவனை இறக்கி வைத்த குளத்தின் வழியே இப்போதும் கூட யாராவது சென்றால் ஒரு கல் எடுத்துப் போட்டு விட்டுப் போவது வழக்கம். அதற்குப் பின் அழகாத் தேவன் இறந்துபோகிறார்.

கீழக்குயில்குடியினர் அந்த குளத்தில் விஷம் கலந்து அழகாத்தேவனை கொன்றதாகக் கூறுகிறார்கள் சிலர். அழகாத்தேவனுக்கு வைத்தி யம் பார்க்க கீழக்குடியில் இருந்து வந்த வைத்தி யன் மருந்துக்குப் பதில் விஷம் வைத்துக் கொன்ற தாகக் கூறுகிறார்கள் மற்றொரு தரப்பினர். ஆயினும், அழகாத்தேவன் சூழ்ச்சியால் கொல் லப்பட்டார் என்பதை அந்த மக்கள் நம்புகிறார்கள். இப்போதுவரை கீழக்குயில்குடி ஊருடன் அவர்கள் எந்த உறவும் வைத்துக்கொள்வ தில்லை. பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை. அன்னம், தண்ணீர் புழங்குவதில்லை. அழகாத்தேவன் தான் இறப்பதற்கு முன், தனக்கு ஒரு சிலை வைக்கச் சொல்லி இறந்து போனார். அழகாத்தேவன் வம்சத்தில் வந்தவர்கள் அவருக்கு சிலை வைத்து கோவில் கட்டி இன்றுவரை வணங்கி வருகிறார்கள்.

சிவராத்திரி அன்று கிடா வெட்டி அன்னதானம் போட்டு திருவிழாவும் நடத்துகிறார்கள். அழகாத்தேவன் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருக்கும் மாடுபிடி வீரர் களுக்கு காவல் தெய்வமாக ஆகிப்போனார். இன்னொரு கதையும் கூட அழகாத்தேவன் பற்றி சொல்லப்படுகிறது. அது மிக அழகிய காதல் கதையாக இருக்கிறது. அழகாத் தேவனுக்கு கீழக்குயில்குடியில் ஒய்யம்மாள் என்கிற அழகிய பெண்ணை திருமணம் முடிக்க பெண் பார்க்கச் சென்ற போது, "நான் வளர்க்கிற ஏழு ஜல்லிக்கட்டு மாடுகளையும் அடக்குற ஆம்பளைக்குத்தான் நான் கழுத்த நீட்டுவேன்'' என ஒய்யம்மாள் சொல்லிவிட... இந்தப் போட்டிக்கு அழகாத்தேவனும் சம்மதிக்கிறார்.

6 மாடுகளை அடக்கிவிட்ட நிலையில் ஏழாவது மாட்டை அடக்கும்போதுதான்... அழகாத்தேவன் குத்துப்பட்டு குடல் சரிகிறார். தங்கள் வீட்டு மாடுகளை அடக்கி, தங்கள் தங்கையையும் அழகாத்தேவன் திருமணம் செய்துகொள்ளவிருப்பது ஒய்யம்மாளின் சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்... அழகாத்தேவனுக்கு வைத்தியம் செய்யச் சென்ற வைத்தி யரை தங்கள் கைக்குள் போட்டு மருந்துக்குப் பதிலாக விஷத்தை வைத்து கட்டும்படி ஏற்பாடு செய்துவிடுகிறார் கள். இதனால்தான் அழகாத்தேவர் இறந்தார் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இருப்பினும், நான் முதலில் சொன்ன கதைதான் "பேட்டைக்காளி' படப்பிடிப்பின் போது எனக்குச் சொல்லப்பட்டது. தலைமுறை, தலைமுறை யாக இந்தக் கதை இன்றும் சொல்லப்பட்டு வருகிறது.

சூழ்ச்சியால் இறந்த ஒரு மாடுபிடி வீரனை தெய்வமாக வணங்கும் மக்களின் வழக்கம் வியப்பூட்டுவதாகவே இருக்கிறது.

மாடுகளில் இத்தனை வகைகளா...?

(ஆட்டம் தொடரும்...)

________

உயிரைக் காக்கும் ரப்பர் குப்பி!

பொதுவாக பழக்கு வாடியில் பயிற்சி எடுக்கும்போது காயம்படாமல் இருக்க மாட்டுக் கொம்புகளில் ரப்பர் ட்யூப் கட்டி அவிழ்ப்பது வழக்கம். புதுக்கோட்டை வன்னியன் விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டில், வீரர்களுக்கு காயம்படாமல் இருக்க கொம்புகளில் ரப்பர் குப்பிகள் அணிவித்து காளைகளை அவிழ்த்ததாக செய்தி அறிந்தோம். இது மிகச்சிறந்த சிந்தனை.

ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகள் ஏற்படுவதை, ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் முக்கிய காரணமாகக் கூறுகிறார்கள். காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் வைக்கும்போது மாடு முட்டினால் கூட காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகிவிடும். இவையெல்லாம் அரசு கவனத்திற்கு செல்லுமாயின், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மேலும் முறைப்படுத்தப்பட்டு நன்முறையில் மேம்படும்.