"ஹலோ தலைவரே, தமிழ்நாடு காவல்துறையின் பாரபட்ச நடவடிக்கைக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளான சி.பி.எம். போன்றவையே கண்டனம் தெரிவித்திருப்பதைக் கவனிச்சீங்களா?''”

"ஆமாம்பா, ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் தொடர்பான செய்திக்காக ஜூனியர் விகடன் இயக்குநர்கள், நிருபர்கள் உள்ளிட்டவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் சம்பந்தமாக காவல்துறை காட்டிய திடீர் வேகமும், அதன் போக்கும் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளாலேயே கண்டிக்கப்பட்டி ருக்கு. பத்திரிகையாளர்கள் சார்பிலும் கண்டனக்கூட்டம் நடத்தப்பட்டது. எந்த ஆட்சியாக இருந்தாலும் பத்திரிகை சுதந்திரம் மீது தாக்குதல்ங்கிறது வழக்கமாகவே இருக்குப்பா.''”

"உண்மைதாங்க தலைவரே, கலைஞர் முதல்வராக இருந்தபோது இது போன்ற நடவடிக்கைகள் மீது உடனடியா கவனம் செலுத்துவாரு. முதல்வர் மு.க.ஸ்டா லினும் அப்படி கவனம் செலுத்தணும்ங் கிறதுதான் கூட்டணிக் கட்சிகள் மற்றும் கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கையுள்ளவர்களின் எதிர்பார்ப்பு. மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பத்திரிகையில் செய்தி வெளியிடுவேன்னு சொல்லி, பணம் கேட்டு மிரட்டிய கெவின் என்பவரை கைது செய்திருப்பதாகவும், 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதற்கும், பத்திரிகையில் பணிபுரியும் சிலருடனான பணப்பரிவர்த்தனைக்கும் ஆதாரம் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கு. அதே நேரத்தில், எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்ட ஜூனியர் விகடன் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லைங்கிற தால, இவங்க பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுதுன்னும் போலீஸ் சொல்லியிருக்கு.''”

"ஆதாரம் பற்றி ஆலோசிக்காத இந்த அவசரத்தனம்தான், காவல்துறையை நிர்வாகிக்கும் முதல்வருக்கு நெருக்கடியை உண்டாக்குது. பத்திரிகை சுதந்திரத்தையும் பதம் பார்க்குது. “சென்னை மயிலாப்பூர் தம்பதிகளின் ரெட்டைப் படுகொலையில் போலீஸ் எடுத்த விரைவான நடவடிக்கை சபாஷ் வாங்கியது. போலீஸ் பாதுகாப்போடு இருந்த சிந்தாதிரிப்பேட்டை பா.ஜ.க. பிரமுகர் பாலசந்தர் படுகொலையிலும் காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டு இருக்கு. இருந்தும், பா.ஜ.க. தரப்பு இதைக் கையில் எடுத்துக்கிட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்குது. அதற்கேற்ப குற்றச் சம்பவங்களும் அதிகரிக்குது.''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, சென்னை சிட்டி கமிஷனராக இருக்கும் சங்கர் ஜிவால் பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கார். அப்படி இருந்தும் அவரைப் பற்றியும் தி.மு.க. ஆட்சி பற்றியும் தப்புத் தப்பான தகவலை மீடியாக்களில் கசியவிடுவதில் ஒரு டீம் தீவிரமா இருக்குதாம். ராஜ்பவனுக்கும் டெல்லிக்கும் கூட இங்குள்ள நிலைமை மோசம் என்பது போன்ற ரிப்போர்ட்டுகளை அனுப்பிக்கிட்டு இருக்குதாம். பாண்டிச்சேரியில் ஆசிரமம் உள்ளவரின் பெயர் கொண்ட ஒரு காக்கி அதிகாரியும், அவரைப் போல இந்துத்வா சிந்தனை கொண்டவங்களும் இதில் முனைப்பா இருக்காங்களாம். சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கஞ்சாக் கும்பல் புழங்குவது பற்றி, கமிஷனருக்குத் தெரியும்னு இந்தத் தரப்புதான் கொளுத்திப் போட்டிருக்குங்கிறதை கமிஷனரே கண்டுபிடிச்சிட்டாராம். இதையெல்லாம் முதல்வர் கவனிக்கணும்னு காவல்துறை அதிகாரிகளே சொல்றாங்க.''”

"சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியல் போட்டு குற்றம் சாட்டியிருக்காரே?''”

"அ.தி.மு.க. ஆட்சின்னா தி.மு.க. தலை வர் இப்படி பட்டியல் போடுவதும், தி.மு.க. ஆட்சின்னா அ.தி.மு.க தரப்பில் பட்டியல் போடு வதும் வழக்கம்தான். உண்மை நிலையை கவனத் தில் வைத்து காவல்துறை ஒழுங்கா செயல்பட்டா சட்டம்-ஒழுங்கு சரியாகவே இருக்கும். அதே நேரத்தில், சட்டத்துறை ஒழுங்கா இருக்க மாட் டேங்குதுன்னு பல தரப்பிலிருந்தும் குரல்கள் கேட்குது. எந்த ஆட்சியா இருந்தாலும் சட்டத் துறை அமைச்சர் தரப்பைச் சேர்ந்தவங்க, சிறைத் துறை விஷயங்களில்தான் வெயிட்டா கவனம் செலுத்துவாங்க. ஆனா, இப்ப அதைத் தாண்டி அரசு கூடுதல் பப்ளிக் பிராசிக்யூட்டர் உள்பட பல விஷயங்களிலும் புகுந்து விளையாடுறாங்களாம்.''

Advertisment

"அதெல்லாம் ஹோம் டிபார்ட்மெண்ட் தானே?''”

"சட்டம்-நீதி சார்ந்த பல பணிகளை உள்துறை நேரடியா கவனிச்சாலும், ஏ.பி.பி.க்கள் சம்பந்தப்பட்ட டிரான்ஸ்பர், புரமோஷன் இதை யெல்லாம் சட்டத்துறை அமைச்சகம்தான் கவனிக்கும். எதுவா இருந்தாலும் வெயிட்டா தட்சணை வச்சாதான் கவனிப்பு நடக்குதாம். சி.எம். ஆபீஸ், ஹோம் டிபார்ட்மெண்ட் ரெகமென்ட்டாக இருந்தாலும் பென்டிங்கில் போட்டுட்டு, தட்சணை தரும் ஆட்களுக்குத்தான் காரியம் நடக்குதாம். சென்னையில் டெபுடி டைரக்டர் பொறுப்பில் இருந்தவர் மாறிட்டாரு. அங்கே அதே ரேங்க்கில் ஒருவரை கோர்ட் பர்மிஷன் வாங்கி டெபுடி டைரக்டரா நியமிக்கணும். ஆனா, அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும் ஒருவரை இன்சார்ஜாகப் போட்டிருக்காங்க. காரணம், தட்சணைதான். சட்டக்கல்லூரி, சட்டப் பல்கலைக்கழகம் எல்லாத்திலும் டிரான்ஸ்பர், போஸ்டிங் எல்லாத்துக் குமே தட்சணைதான்னு சி.எம். அலு வலகம் வரை புகார்கள் போயிருக்கு.''”

"இந்த நேரத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை அறிவிச்சிருக்காங் களே?''”

"அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து, கலைஞர் ஆட்சியின்போது பிறப்பிக்கப் பட்ட அரசாணை எண் 354-ஐ அமல்படுத்தணும்னு அரசு மருத்துவர்கள் நீண்ட வருடங்களாக போராடறாங்க. கலைஞர் போட்ட அரசாணையை ஸ்டாலின் கவனத்துக்கு பல வழியிலும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இருப்பினும் இது குறித்து அரசு அமைதியாகவே இருந்து வருகிறதாம். இந்த நிலையில், கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி, அரசாணை 354-ஐ நிறைவேற்ற வலியுறுத்தும் கவன ஈர்ப்பு வேண்டுகோள் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் நடத்தறாங்க. இதற்கு அடுத்த கட்டமாக, ஜூன் 29-ஆம் தேதி சேலம் மேட்டூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அரசு மருத்துவர்கள் அறிவிச்சிருக்காங்க. ஆனால் அந்த அரசாணைக்கு எதிராக ஒரு அரசாணை தயாராகுதுன்னு அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததால், அவர்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்காங்க.''”

"ஓய்வூதிய விவகாரத்திலும் அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு தெரியுதே?''”

"நிதி நெருக்கடி காரணமாக, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த தி.மு.க. அரசு ஆலோசித்தது. இதற்கு அரசு ஊழியர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்குது. இந்த நிலையில் மே மாத இறுதியில், அனைத்துத் துறைகளிலும் ஓய்வு பெறுபவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருது. இவர்களுக்கான ஓய்வூதிய பலனை 1 வருடம் கழித்து மாற்றிக்கொள்ளும் வகையில், பாண்ட் பேப்பராக அவர்களுக்குக் கொடுக்கும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்த அரசு ஊழியர் சங்கங்கள், "எங்களுக்கு பணமாகத்தான் ஓய்வூதிய பலன்கள் கொடுக்கப்படணும். இதற்காக கோர்ட்டுக்குப் போகவும் தயார்னு வரிந்துகட்டத் தொடங்கிவிட்டன.''”

rr

"காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்தே ஆகணும்னு டெல்லி தீவிரம் காட்டுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, சீனப் பணியாளர்களுக்கு விசா வாங்கிக்கொடுத்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்தே ஆகணும்னு அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கு தாம். இது ப.சி.யை கவலையில் ஆழ்த்தியிருக்கு. அதேநேரம், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பைக் கோட்டை விட்டால், கட்சியில் உள்ள அத்தனை பேரையும் ஏதாவது வழக்கைப் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள் என்று கரு தும் காங்கிரஸ் சீனியர் தலைவ ரான சோனியா, கட்சியை மறு கட்டமைப்புக்கு உட்படுத்த ணும்னு நினைக்கிறாராம். அது தொடர்பான திட்டங்கள் அங்கே ஆலோசிக்கப்பட்டு வருது.''”

"அதனால்தான் காங்கிரஸிடம் அதிரடி மூவ்கள் தென்படுதா?''”

"உண்மைதாங்க தலைவரே, வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தே தீரணும்னு காங்கிரஸ் தலைமை, முனைப்போட செயல்பட ஆரம்பிச் சிடுச்சி. நாம் ஏற்கனவே அக்கட்சியின் சிந்தனையாளர் மாநாடு பத்திப் பேசிக்கிட் டோமே, அதில் கட்சியின் வெற்றியைக் குறிவச்சி, அர சியல் விவகார குழு, டாஸ்க் ஃபோர்ஸ் குழு, யாத்திரைக் குழுன்னு புதிதாக 3 குழுக் களை உருவாக்கி இருக்கிறார் சோனியா. அந்த குழுக்களில், ராகுல்காந்தி உள்பட கட்சியின் சீனியர்கள் பலரையும் உறுப் பினர்களாக அவர் நியமிச்சிருக் கார். அதேசமயம் அந்த 3 குழுக் களும் சோனியாவின் தலைமை யிலேயே செயல்படும்னு அறி விக்கப்பட்டிருக்கு.''”

"ஆமாம்பா, இதில் அரசியல் விவகாரக்குழு மட்டும் ராகுல்காந்தியின் மேற்பார்வையில் செயல்படப்போகுதே?''”

"அதுவும் உண்மைதாங்க தலைவரே, இந்த அரசியல் விவகாரக் குழுவிற்கு முதல் அசைன்மெண்ட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் சோனியா. அதாவது, ஜூலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில், ஆளும் கட்சியான பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளரைத் தோற்கடிக்க, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் செயல்திட்டத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். அதனால் ராகுல் தரப்பு, இப்பவே பல வியூகங்களை பரபரப்பா வகுத்துக்கிட்டு இருக்குது. அதேபோல் டாஸ்க் ஃபோர்ஸ் குழுவில், தி.மு.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணிபுரிந்து, எடப்பாடி பக்கம் போன சுனிலையும் உறுப்பினராக நியமித்துள்ளார் சோனியா. ஏற்கனவே பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தில் பணியாற்றியவர் சுனில்.''”

"பிரசாந்த் கிஷோரை முழுசா காங்கிரஸ் ஓரங்கட்டிடுச்சே?''”

ff

"உண்மைதாங்க தலைவரே, இடையில் கொஞ்சநாள், காங்கிரஸ் தரப்போடு தொடர்பில் இருந்தார் பிரசாந்த் கிஷோர். அவரைத் காங்கிரசுக்கான தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கவும், அவரைக் கட்சியில் இணைத்துக் கொள்ளவும் சோனியா விரும்பினார். ஆனால், பிரசாந்த் கிஷோர், காங்கிரஸின் தலைவராக ராகுல்காந்தியையும், செயல் தலைவராகத் தன்னையும் நியமிக்கணும்னு டிமாண்ட் வைத்தார். ஆனால், சோனியா, மன்மோகன்சிங் உள்பட கட்சியின் சீனியர்கள் அனை வரும், அவரை செயல் தலைவராக ஏற்றுக்கொள்ள விரும்பலை. இதனால், காங்கிரசுக்கும் தனக்கும் சம்மந்தமில்லைன்னு அவர் பேட்டி கொடுத்தார். இந்த நிலை யில்தான் சுனிலை காங்கிரசுக்குள் கொண்டு வந்திருக்கிறார் சோனியா. தற்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் கமிட்டியில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரணும்னு ரூட் போடும் அசைன்மெண்ட் டாஸ்க் ஃபோர்ஸ் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கு. அதனால் வரும் தேர்தலில் பா.ஜ.க.வை .முறியடிக்கும் மும்முரத்தில் காங்கிரஸ் இருக்குது. ஆனா, காங்கிரஸ் சீனியர் தலைவரான கபில்சிபல், கட்சியிலிருந்து ராஜினாமா பண்ணிட்டு, சமாஜ்வாடி கட்சி ஆதரவோடு ராஜ்யசபா தேர்தலில் சுயேட்சை வேட் பாளரா களமிறங்கி சோனியா தரப்பை அதிர வச்சிருக்காரு.''”

rr

"அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர் தேர்வு ஒரு வழியா முடிவுக்கு வந்திருப்பதைப் பற்றிய தகவலை நான் பகிர்ந்துக்கறேன். ஜெயலலிதா இருந்தவரை எந்த தேர்தலா இருந்தாலும் அதிமு.க.வின் வேட்பாளர் லிஸ்ட்தான் முதலில் வரும். அவர் தன்னிச்சையா முடிவெடுத்து அறிவிச்சிடுவாரு. இந்த முறை அ.தி.மு.க.வுக்கு இரண்டு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்பதால் சட்டமன்றத் தேர்தலில் தோற்ற சீனியர்கள் மல்லுக்கட்டுனாங்க. அதோடு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஃபைட்டும் சீரியஸா இருந்தது. சசிகலா தரப்பின் ஊடுருவலைத் தடுக்க பல ஆலோசகனைகளும் நடந்தது. நம்ம நக்கீரன் ஏற்கனவே சொன்னபடி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் எல்லாரும் முட்டி மோத, இதில் சி.வி.சண்முகம் ரேஸில் முந்தி, சீட் வாங்கிட்டாரு. இன்னொரு சீட், ராமநாதபுரம் மாவட்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர் தர்மருக்கு கொடுக்கப்பட்டிருக்கு. இது ஓரளவு கட்சிக்குள் அமைதியை நிலைநாட்டும்னு நினைக்கிறாங்களாம். ஆனாலும் சீட் எதிர்பார்ப்பில் இருந்த மற்ற சீனியர்கள் செம டென்ஷனில் இருக்குறாங்களாம்.''”