கவர்னர் பெயரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை! ஆடியோ ஆதாரம்!'’ என்னும் தலைப்பில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, நான்கு மாணவிகளிடம் கவர்னர் லெவல் வி.வி.ஐ.பி. என்று குறிப்பிட்டு, பாலியல் தேவைக்காக செல்போனில் பேசிய விவகாரத்தை, 2018 ஏப்ரல் 8-10 இதழில் முதன்முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன்.
2024 மார்ச் 20-22 இதழில் "‘உண்மையை மறைத்த கக்கன் பேத்தி!' என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையில், நிர்மலாதேவி வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டுகிறது என்று நக்கீரனில் குறிப்பிட்டிருந்தது போலவே, கடந்த 6 வருடங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றம் நடத்திய விசாரணை முடிவுக்குவந்து, உடல்நலக்குறைவு காரணமாக நிர்மலாதேவி ஆஜராகாத நிலையில் ஏப்ரல் 26ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு, ஏப்ரல் 29ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு விபரங்களுக்குள் போவதற்குமுன் நிர்மலா தேவி வழக்கை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்!
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் செயலாளர் ராமசாமி, அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் 16-4-2018 அன்று அளித்த புகாரில், ‘மூன்றாமாண்டு இளங்கலை கணிதவியல் வகுப்பில் பயிலும் 6 மாணவிகள், கடந்த 19-3-2018 அன்று கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் தந்தனர். அதில், கணிதத்துறை உதவிப் பேராசிரி யர் நிர்மலாதேவி, அவரது செல்போனிலிருந்து அந்த 6 மாணவிகளின் செல்போனுக்கும் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி வந்ததாக வும், 18-3-2018 அன்று மாணவி (பெயரைக் குறிப்பிட்டு) ஒருவரது செல்போனுக்கு போன் செய்த நிர்மலாதேவி, தவறான முறையில் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி கட்டாயப் படுத்தியுள்ளார் என்றும், அவ்வாறு நிர்மலா தேவி சொல்படி நடந்தால், அதிக மதிப் பெண்களோடு, அதிக பணமும் கிடைக்கு மென்றும், இது அருமையான வாய்ப்பு, தவறவிட்டால் திரும்பக் கிடைக்காது என்றும் பேசியிருந்ததை மாணவிகள் குறிப்பிட்டிருந் தனர். நிர்மலாதேவி தன்னுடைய சுயலாபத் திற்காக மாணவிகளின் படிப்பை பாழ்படுத்துவ தோடு, கல்லூரியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திய தால் நடவடிக்கை எடுக்கவேண்டும்.’ என்று முறையிட்டிருந் தார் கல்லூரியின் செயலாளர் ராமசாமி. இவ்வழக்கினுள் (எதிரி 1) நிர்மலாதேவியுடன், (எதிரி 2) மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் (எதிரி 3) ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் எவ்வாறு கொண்டுவரப் பட்டனர்?
20-4-2018 முதல் 25-4-2018 வரை 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி.-யால் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தியபோது ‘முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரில், கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் செய்ய செல்போன் மூலம் பேசி கட்டாயப்படுத்தினேன்.’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நிர்மலாதேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடு மைத் தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில்நுட்ப முறைகேடு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.
அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் விசாரணைக் குழு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை. அப்போது சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி வேண்டுமென்றே விடு வித்ததாகக் கேள்வி எழுப்பியிருந்தது. இந் நிலையில்தான், சந்தானம் விசாரணைக் குழு அறிக் கையை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன் றத்தில் இரண்டு கட்டங்களாக 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சியங்கள், வாதங்கள் எனக் கடந்த 6 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்ற நிலையில், பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் உவஎஒ கணேசன் வழக்கு தொடர்ந்தார். ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில் ‘நிர்மலா தேவி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் ஏப்ரல் 29ஆம் தேதி தீர்ப்பளிக்க வுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிர்மலாதேவி வழக்கில், ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பில், நிர்மலாதேவி குற்றவாளி என்பது உறுதிசெய்யப்பட் டுள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். நிர்மலா தேவியைப் பொறுத்தவரை, அவர் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு நேரடியாக அழைக்காவிட்டாலும், மாணவிகளோடு அவர் பேசியதன் நோக்கம், பாலியல் தொழிலுக்கு ஆசைகாட்டி மாணவிகளை அழைப்பதாகவே இருப்பதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வழக்கில், கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் நோக்கத்தோடு நிர்மலா தேவி பேசியிருப்பதை முதன்முதலில் ஆடியோ ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியது நக்கீரன் என்ற வகையில் இத்தீர்ப்பு, நக்கீரனின் புலனாய்வுக்கு கிடைத்த வெற்றியாகும். மேலும், நிர்மலா தேவியால் பாதிக்கப்பட்ட மாணவிகள், அதுகுறித்து வெளியே சொல்வதற்கு அச்சப்பட்ட சூழலில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் குரலாக ஒலித்தது நமது நக்கீரனே. அம்மாணவிகளுக்கான நீதிக்காகத் தொடர்ச்சியாக இவ்விவகாரம் குறித்து துணிச்சலாக செய்திகளை வெளியிட்டு, இதற்காக அரசு அதிகாரத்தின் பல்வேறு அடக்குமுறைகளையும் எதிர்கொண்டது. அந்த வகையில், இந்தத் தீர்ப்பு, நக்கீரனின் நேர்மையான, துணிச்சலான செயல்பாட்டுக்கு மற்றுமொரு மைல் கல்லாகும்!
இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரிடம் கேட்டபோது, "அவர்கள் இருவருமே பல்கலைக்கழகத்தோடு தொடர்புடையவர் களாக இருப்பதாலும், அவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களும் அரசு ஊழியர்களாக இருந்ததாலும், காட்டிக்கொடுக்கக்கூடாதென்ற எண்ணத்திலோ, வேறு காரணங்களாலோ பிறழ் சாட்சிகளாக மாறிவிட் டார்கள். அதன் காரணமாகவே இவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், இவர்களின் விடுதலைக்கெதிராக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும். அப்போது அவர்கள் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும்'' என்றார் உறுதியாக.
தமிழ்நாடு அரசின் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினரின் புலனாய்வு இன்னும் கடுமையாக இருந்திருந்தால், நிர்மலாதேவியின் ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த கவர்னர் லெவல் வி.வி.ஐ.பிக் கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும்கூட சிக்கி யிருக்கக்கூடும். கடந்தகால ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமாக, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேல்மட்ட வி.வி.ஐ.பி.க்கள் சேர்க்கப்படாமல், ஒப்புக்கு கீழ்மட்டத்தில் இருவரை மட்டும் வழக்கில் சேர்த்து கணக்கு காட்டியிருப்பதாகவே தெரிகிறது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டில் இப்போது தப்பியவர்களோடு மேலும் பலர் சிக்கக்கூடும். நிர்மலா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, தண்டனை குறித்த முழு விவரமும் வரும் இதழில் விரிவாகப் பார்க்கலாம்.
___________
இறுதிச் சுற்று!
தருமபுரம் ஆதீனத்துக்கு ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டல் விடுத்து, கைதான மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரத்தின் ஜாமீன் மனுவை 29-ந் தேதி திங்கள்கிழமை 2-வது முறையாக சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ள காரணத்தால் ஜாமீன் தள்ளுபடி.
-கீரன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், மாலத்தீவு செல்வதாக அறிவிப்பு வந்தது. திடீரென அதை ரத்து செய்துவிட்டு கொடைக்கானல் செல்ல முடிவுசெய்தார். அதனடிப்படையில் ஏப்ரல் 29-ஆம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார் முதல்வர். அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானல் கிளம்பினார். பாம்பார்புரத்தில் இருக்கும் தமாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4-ஆம் தேதி வரை தங்கவிருக்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன் கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கொடைக்கானல் வந்த முதல்வர், கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கிச் சென்றார். அந்த பாராளுமன்றத் தேர்தலில் 39 தொகுதி களை தி.மு.க. கைப்பற்றியது. அதேபோல் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கிச்சென்றார். அந்தச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்த ராசியை எண்ணியோ, இந்த முறையும் தனது ஓய்வை கொடைக்கானலில் அமைத்துக்கொண்டிருக்கிறார் முதல்வர். இந்த முறையும் சென்டிமெண்ட் வேலை செய்யுமா!
-சக்தி