ம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, இந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் மதவெறி போன்றவற்றை எதிர்த்து, தனது எதிர்ப்பைக் காட்டும்விதமாக இந்திய ஆட்சிப் பணியை வேண்டாமென தூக்கியெறிந்தவர் கேரளாவைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன். கலைவாணர் அரங்கில், தி.மு.க. மாணவரணி சார்பில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் தேசிய அளவிலான மாநாட்டில் பேசிய கருத்தாழமிக்க உரையின் சாராம்சமான பகுதிகள்:

ree

"என்னை அறிமுகம் செய்த நபர், நான் பதவியிலிருந்து விலகியதாகச் சொன்னார். ஒரு மாநிலமே நீக்கப்பட்டுவிட்டது. அந்த மாநிலமே இல்லை இன்று. என்னவிதமான கூட்டாட்சியைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? மாநிலங்கள் நீடிக்கும்போதுதான் கூட்டாட்சியே வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் சில அடிக்கோடிடப் பட்ட விதிகள் இருக்கின்றன. அதன்படி மாநிலங்கள் நிரந்தரமானவை. எல்லைகள் மாற்றப்படலாம். புதிய மாநிலங்கள் உருவாகி வரலாம். ஆனால் ஒரு மாநிலம் இல்லாமல் போகவோ, நீக்கவோ முடியாது. ஆனால் அது நடந்தது.

எந்தக் காரணமுமின்றி காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் கைதுசெய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டிலேயே சிறைவைக்கப் பட்டனர். மொத்த மாநிலத்திலுமுள்ள மக்களுக்கும் இன்டர்நெட், தொலைபேசி தடைசெய்யப்பட்டன. இவையனைத்தும் அரசியலமைப்புச் சட்டங்களின் பெயரில் நடந்தன.

அரசியலமைப்பில் என்ன எழுதியிருக்கிறது என கவலைப்படவேண்டாம். நிர்வாக உத்தரவுகள் மூலம் அவற்றைக் கடந்து செல்லும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. நாங்கள் மக்களைக் கைதுசெய்யலாம். அவர்களைத் தடுத்துவைக்கலாம். அதிகாரம் எங்களிடம் இருந்ததன்காரணமாக, நாங்கள் விரும்பும் எதையும் செய்துகொள்ளலாம். அந்த நேரத்தில் எங்களை நீதிமன்றத்தில்கூட நிறுத்தமுடியாது. இந்த நாட்டின் அடிப்படை குடிமகனாக, போட்ட ஆட்கொணர்வு மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. நான் பணியிலிருந்தபடி இவைகளைத்தான் செய்ய விரும்பினேனா என்ற கேள்விகள் எழுந்தன.

நான் ஒன்று சொல்லவிரும்புகிறேன். அரசியலமைப்புச் சட்டம் நம்மைக் காப்பது தான். நாம் அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் வரையில்தான் அது நடக்கும். நாம் அரசியலமைப்புச் சட்டத்துக்காகவும் அதன் கொள்கைகளுக்காகவும் போராடும் வரையில்தான் நம்மைக் காக்கும். அதன்மூலம் நாம் பயனடைய முடியும்.

இந்திய ஆட்சிப்பணியாளராக, நாங்கள் மக்களை அதிகாரம் உடையவர்களாக மாற்றச் செயலாற்றுபவர்கள். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த, தகுதியுடையவர்களாக ஆக்கமுடியும். கல்வி, தொழில், விளையாட்டு, எதில் வேண்டு மானாலும் மேம்பட்டவர்களாக ஆக்கமுடியும். ஆனால் அது நடக்கவில்லை.

இங்கே, அனைவருக்கும் நல்லது என்னவென நாங்கள் தீர்மானிப்போம் என அவர்கள் முடிவுசெய்தனர். அதைக் கேள்வி கேட்பவர் எவரானாலும், தேசத்துக்கு எதிரானவர் என முத்திரை குத்தப்பட்டனர். அர்பன் நக்ஸல், காலிஸ்தானி, ஜிகாதி என அழைத்தது. ஒருவரை மௌனமாக்கச் சிறந்த வழி, அவரை சட்ட விரோதமானவராக்குவது. அவரை மதிப்பற்றவராக ஆக்குவது. பின் நீங்கள் பேசுவீர்கள். யாரும் அதைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

Advertisment

rr

சமீபகாலமாக முதலில் நீ யார் என்பதைச் சொல் என கேட்கப்பட்டது. இந்த அடையாளங்களில் படிநிலைகள் வரத் தொடங்கின. இதனால் மக்கள் முரண்பாடு களைக் காணத் தொடங்கினர். நாம் நமது எண்ணற்ற அடையாளங்களில் எந்த இடைஞ்சலையும் காணாதபோது, இந்த அடையாளங்களைக் கொண்டாடிக் கொண்டிருக் கையில் இது நடந்தது.

இந்தியனாக இருப்பதற்காக மலையாளி, தமிழன், பீகாரி போன்ற அடையாளங்களைக் கைவிடத் தேவையில்லை. ஒரே நேரத்தில் இரண்டாகவும் இருக்கலாம். நல்ல தமிழனாக இருப்பது நல்ல இந்தியனாக இருப்பதும்தான். நல்ல இஸ்லாமியனாகவும் நல்ல இந்தியனாகவும் இருக்கலாம். ஆனால் இந்த அடையாளங்களை ஒன்றுடனொன்று மோதவிடுகையில்… பிரச்சினை கள் எழுந்தன.

இந்தியனாக இருப்பதற்கு சில மாதிரி இருக்கிறது. அதற்கு சில குணாதிசயங்கள் இருக்கின்றன. நான் குறிப்பிட்ட மொழியைப் பேசும்போது, நான் சில உணவுகளைச் சாப்பிடும்போது, நான் சில கலாச்சாரங்களைப் பின்பற்றும்போது, நான் சில மதங்களைப் பின்பற்றும்போது… இதுதான் இந்தியனாக இருப்பது என்று மாற்றப்படுகையில், அதைப்போல் நீங்களும் மாறியாக முயற்சிக்கவேண்டும். நீங்கள் இப்போது அப்படியில்லாமல் இருக்கலாம். குறைந்தபட்சம் அதை ஏற்றுக்கொள்ளவாவது வேண்டும். நீங்கள் எல்லோரும் என்னைப்போல் இருக்க முயற்சிக்கவேண்டும் என நமக்கு உணர்த்தப்படுகிறது.

பல சமயங்களில் சில விஷயங்களை நாம் தவறாகப் பொருள் கொண்டுவிடுகிறோம். காலகாலமாக இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கிறது என நினைத்துக்கொள்கிறோம். அது உண்மை யில்லை. இந்தியாவில் ஜனநாயகம் 70 ஆண்டு களாகத்தான் இருக்கிறது. வரலாற்றில் பார்த்தால் முழுக்க ராஜாங்கங்கள்தான் நீடித்திருக்கின்றன. ஆதிக்க இயல்புடைய அரசுகள் நீடித்திருக்கின்றன. நமது வாழ்க்கை காலகட்டம் முழுவதும் ஜனநாயகத்தில் கழிந்திருப்பதால், அது நிரந்தர மானதென எண்ணத் தலைப்படுகிறோம்.

ஜனநாயகம் நிலையற்றது. அது நீடிக்க, அதற்கு பெருமளவு ஆற்றல் தேவை. அதற்குத் தூண்கள் தேவை, ஊடகம், நீதி, சட்டமியற்றல், கேள்வி கேட்கும் மக்கள் தேவை. மிக முக்கியமாக, கேள்வி கேட்கும் குடிமகன்கள். குடிமகன்களிடம் இந்த கேள்வி கேட்கும் உத்வேகம் இல்லாது போனால் ஜனநாயகம் நீடிக்காது.''

Advertisment