'இந்து' என்.ராம் துணிச்சலாக வெளியிட்ட ரஃபேல் விமான பேரம் தொடர்பான ஆவணங்கள் குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை யை உறுதிசெய்வதில் மற்றொரு மைல்கல். 1981-ஆம் ஆண்டில் எஸ்.பி.குப்தாவுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நடைபெற்ற வழக்கில் நாட்டின் பாதுகாப்பைத் தவிர வேறு எதுவுமே ரகசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ரஃபேல் விமான ஊழல் தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீது, அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது. அதாவது, பத்திரிகைகள் ஆளப்படுவோருக்காக சேவை செய்யவேண்டுமே தவிர, ஆள்வோருக்காக அல்ல என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, ரஃபேல் விமான பேரம் தொடர்பான ஆவணங்களை பிரசுரிப்பது அரசு ரகசிய காப்புச் சட்டத்தை மீறுவது ஆகாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

s

இந்தத் தீர்ப்பின் மூலம் ரகசியம் என்ற தீ ஜுவாலைகள் பொதுநலனை சுற்றிவளைக்க முடியாது என்பது உறுதியாகி இருக்கிறது. அளவுக்கு அதிகமான தீவிரத்தன்மையுடன் உண் மைகளை ஒடுக்க முயற்சிப்பது, அரசு நிர்வாகத்தில் வெளிச்சமற்ற தன்மைக்கே காரணமாக அமையும் என்று இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை பெறுவதற்காக மனிதகுலம் நடத்திய போராட்டங்களின் வரலாறை சுருக்கமாக குறிப்பிட்டுவிட முடியாது. எனினும், நமது அரசியல் சட்டம் இந்த உரிமைகளுக்கு போதுமான அளவு பாதுகாப்பு அளித்துள்ளது. அதை உண்மையான பாதுகாவலனாக நமது உச்சநீதிமன்றம் பாதுகாத்துள்ளது.

ரஃபேல் ஊழல் தொடர்பான திருடப்பட்ட ஆவணங்களை பிரசுரித்தால் தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து என்ற மத்திய அரசின் கோரிக் கையை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இதன்மூலம், நமது அரசியலமைப்புச் சட்டம் போற்றிப் பேணும் பேச்சுரிமை மற்றும் கருத் துரிமையின் தொடர்ச்சியான பத்திரிகை சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம், அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையை தனித்தன்மையாக கொண்டிருக்க வேண்டும் என்பதையும், அரசு நிர்வாகம் மக்களுக்கு தவறான தகவல்களை அளித்தால் அதைத் தடுத்துநிறுத்த வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கு உண்டு என்பதையும் உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

Advertisment

nram

வியட்நாம் போர் என்பது வீணான தோற்கப் போகிற சண்டை என்பதை அறிந்தும் அமெரிக்க வீரர்களையும் ராணுவ தளவாடங்களையும் இழந்தது குறித்து மக்களுக்கு தவறான தகவல்களை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இதுதொடர்பான ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. இதை எதிர்த்து அமெரிக்க அரசு, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி ஹூகோ பிளாக் தெரிவித்த கருத்துகளையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அங்கீகரித்துள்ளது.

Advertisment

ரஃபேல் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முன் இரண்டு தேர்வுகள் இருந்தன. அரசு ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று நீண்ட சிறைத்தண்டனை உள்பட கடுமை யான தண்டனைகளை வழங்குவதா? ஒரு பத்திரிகையாளன் தனது புலனாய்வுத் திறமையை பயன்படுத்தி சேகரித்த ஆவணங்களை, அரசியல் சட்டப் பிரிவு 19(1) (ஏ) வழங்கியுள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை பாதுகாப்பதற்காக வெளியிட்டதை ஏற்பதா? என்ற இரண்டு தேர்வுகளில் உச்சநீதிமன்றம், பேச்சு சுதந்திரத்தையும் கருத்துரிமையையும் தேர்வு செய்தது.

ரஃபேல் ஊழல் தொடர்பான தேசப்பாது காப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் திருடப்பட்டதாக மத்திய அரசு கூறியதை, பொதுநலனுக்காக உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. அதாவது, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமைக்காக மத்திய அரசின் எல்லா கோரிக்கைகளையும் புறந்தள்ளலாம் என்பதே கொள்கை. குற்ற விசாரணையின்போது என்னைப் பாதுகாக்கத் தேவையான ஆவணங்களை கெஞ்சியோ, கடன் வாங்கியோ, திருடியோ பயன் படுத்தலாம் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த ஆவணங்களை எப்படிப் பெற்றேன் என்பது முக்கியமில்லை. அவை எந்த அளவுக்கு வழக்கிற்கு பொருத்தமானவையாக இருக் கின்றன என்பதுதான் முக்கியம். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, புலனாய்வு இதழியலை பாதுகாத்திருக்கிறது. அதாவது, ஒரு பத்திரிகையாளன் தனக்கு கிடைத்த தகவல்கள் பொருத்தமானவையாகவும் பொதுமக்களின் நலனுக்கானவை எனும்பட்சத்தில் செய்தி கொடுத்தவரைப்பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் உறுதி செய்திருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள். அவை பலவீனப்படுத்தப்பட்டால் ஜனநாயகத்துக்குத்தான் ஆபத்து. எதிர்ப்பு என்பது துரோகம் ஆகாது. அது ஜனநாயகத்தை பாதுகாக்கும் தசை நார் ஆகும். தலைக்குமேல் வழக்குகள் என்ற கத்தியுடன் பத்திரிகைகள் இயங்கும் நிலை கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து. இறுதியில் நாட்டுக்கே கேடாக முடியும்.

ரஃபேல் ஊழல் தொடர்பான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் பேச்சு சுதந்திரத்தையும், கருத்துரிமையையும் உயர்ந்த பீடத்தில் அமர்த்தியிருக்கிறது.

தமிழில் : ஆதனூர் சோழன்d

ஆர்.கே.ஹண்டூ - (டைம்ஸ் ஆஃப் இந்தியா)

(கட்டுரையாளர் உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞர்)