10 முறை நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை நடைபெற்ற போட்டி தொடரில் ஏழாவது தோல்வியாக மிகப் பரிதாபமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றிருக்கிறது. இனி கடவுள் நினைத்தால்கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிக்கட்ட சுற்றுக்கு கொண்டுபோக முடியாது என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தமிழ் நாட்டு அணி என்றாலும் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி அணியில் விளையாடுகிறார். சேலத்தைச் சேர்ந்த நடராஜன் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியில் இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த மற்றொரு வீரரான முருகன் அஸ்வின் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியில் விளையாடுகிறார். இன்னொரு தமிழரான வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடுகிறார். வாஷிங்டன் சுந்தர் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார்.
இப்படிப்பட்ட தமிழக வீரர்களை வைத்து ஒரு கிரிக்கெட் அணியை வெற்றிகரமாக உருவாக்க எல்லா வாய்ப்புகளும் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே வட இந்திய வீரர்களையும் வெளிநாட்டவரையும் வைத்து உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்கள்தான் இடம்பெற்றார்கள். ஒன்று முரளி விஜய், இரண்டாவது ஜெகதீசன், மூன்றாவது சாய் கிஷோர். இதில் ஜெகதீசன் தனது அறிமுக போட்டியிலேயே நன்றாக ஆடி 30க்கு மேல் ரன் குவித்தார். இயல்பிலேயே விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனான ஜெகதீசன் அடுத்த போட்டிகளுக்கு தேர்வாகவில்லை.
அதற்கு என்ன காரணம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி யிடம் கேட்டபோது, அவர் கிரிக்கெட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என சொன்னார். அதற்கு தமிழக கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த், தோனி பொறுப்பில்லாமல் பேசுகிறார் என திட்டினார். ஜெகதீசனுக்கு வாய்ப்பளித்தால் தோனியின் விக்கெட் கீப்பர் வேலை பறிபோகிவிடும் என்பதால் அவர் ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த மற்ற அணிகளில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் கலக்குகிறார்கள். வாஷிங்டன் சுந்தர் ஸ்பின் பவுலராக இருந்தாலும் முதல் 6 ஓவரிலேயே பந்து வீசி எதிரணியை சிதறடிக்கிறார். சேலத்தைச் சேர்ந்த நடராஜன், நடப்பு ஐ.பி.எல். தொடரிலேயே எதிராளிகளின் ஸ்டெம்புகளை சிதறடித்தும், அதிக யார்க்கர் பந்துகளை வீசியவர் என்ற சாதனையில் இந்தியாவின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவையே மிஞ்சிவிட்டார்.
டெல்லி அணியின் கேப்டனான தமிழர் ஸ்ரேயஸ் அய்யர் ஒவ்வொரு மேட்சிலும் 50 ரன்களை அடித்து அந்த அணியை பாயிண்ட் டேபிளில் உச்சிக்கு கொண்டு வந்துள்ளார். தினேஷ் கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தால் கலக்கி வருகிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அட்டகாசமான ஸ்பின் பவுலிங்கால் டெல்லி அணிக்காக கலக்கி வருகிறார். இப்படிப்பட்ட தமிழக வீரர்களை அதிகமாகக் கொண்ட ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உருவாக்கப்பட்டிருக்குமே யானால் அந்த அணியை தோற்கடிக்க எந்த அணியாலும் முடியாது என தமிழக கிரிக்கெட் வல்லுநனர்கள் விமர்சிக்கிறார்கள்.
இதுபோதாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயதுக்கு உட்பட்ட அணியில் கிரிக்கெட் விளையாடிய தமிழக வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. பெங்களுரு அணியில் தேவ்தத் படிக்கல், ராஜஸ்தான் அணியில் ராகுல் திவாட்யா போல பல இளம் வீரர்கள் ஐ.பி.எல். அணிகளில் நிறைந்து அந்த அணிகளுக்கு வெற்றி தேடித் தருகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தோனி, ஷேன் வாட்சன், பிராவோ என முக்கிய வீரர்கள் 35 வயதை தாண்டியவர்கள் என சென்னை அணியின் பலவீனங்களை எடுத்து சொல்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
இந்தமுறை சென்னை அணி மோசமான தோல்விக்கு மேலும் சில காரணங்கள் உள்ளது. இம்முறை போட்டி இந்தியாவில் நடைபெறவில்லை. அத்துடன் அம்பயர் கள் எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். என்கிற முறை ஐபிஎல் போட்டிகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த ஐ.பி.எல். போட்டிகளின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரான சீனிவாசன் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தார். அவரது சொல்படி தோனி உள்பட முக்கியமான வீரர்களுக்கு அம்பயர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள். இப்பொழுது சீனிவாசனுக்கு பதில் கங்குலி தலைவராகியுள்ளார்.
அவர் இந்திய அணியில் தோனியால் பாதிக்கப்பட்டவர். அவர் வந்தவுடன் ஐபிஎல் போட்டிகளில் டி.ஆர்.எஸ். என்கிற முறையை கொண்டு வந்தார் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்