பீடியைப் பற்றவைப்பதற்கு நெருப்புத் தர மறுக்கப்பட்டாலும், பயணிக்கும் போது ஒருவர் கால்மீது மற்றொருவர் கால் பட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல், அரிவாள்கள் உயரும் கலாச்சார நிகழ்வுகள் தென்மாவட்டங்களில் சகஜமானதுதான். ஆனால் காலம் மாறிவருகிறது... குற்றப் பின்னணி உடையவர்கள், பழிக்குப் பழி வாங்குபவர்கள் இப்பொதெல்லாம் அரிவாளுக்குப் பதில் குண்டுகளை வீசத் தொடங்கிவிட்டனர்.

b

கடந்த ஆகஸ்டு 16 அன்று மணக்கரை ரவுடி துரைமுத்துவின் வெடிகுண்டு வீச்சுக்குப் பலியான காவலர் சுப்பிரமணியனின் உடலடக்கத்திற்கு நெல்லை வந்த டி.ஜி.பி. திரிபாதி. வெடிகுண்டுத் தயாரிப்பில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனை எதிர்கொள்ள போலீசாருக்குப் பயிற்சியளிக்கப்படும் என்றார்.

""ஒருமாதம்கூட ஆகவில்லை. நாங்குநேரி இரட்டைக் கொலை தென்மாவட்டங்களை ஆடிப்போக வைத்துவிட்டது. மணக்கரை வெடிகுண்டு வீச்சின் வீரியத்தைக் காட்டிலும் நாங்குநேரியில் வீசப்பட்ட எரிகுண்டு, ஆளைச் சிதைப்பதுடன் வீசப்பட்ட பகுதியின் பொருட்களையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகிற அடுத்த டைப்'' என்கிறார்கள் வெடிகுண்டுச் சோதனை யாளர்கள். சகஜமாகப் புழங்கும் பட்டாசுரகங்களைப் பிரித்து, அதிலுள்ள வெடிமருந்தைச் சேகரித்து திருப்பதி லட்டு சைசில் பேப்பர் துண்டுகளையும் சணலையும் சுற்றித் தயாரிக்கப்படுகிற நாட்டு வெடிகுண்டு சாதாரண ரகம். விளைந்த வயல்வெளிகளை நாசம் செய்கிற காட்டுப்பன்றிகள், நரிகளை விரட்டுவதற்கு இந்த ரக வெடிகுண்டு களை வீசுவார்கள்.

Advertisment

நாட்டு வெடிகுண்டிற்கும் கட்டுப்படாமல் மிருகங்களின் அழிப்பு நடவடிக்கையிருந்ததால் அதனினும் வீரியமாக, தீப்பெட்டி தயாரிப்பிற்கு உதவுகிற நைட்ரேட்டுடன் வெடிமருந்து சீனிக் கற்களின் துண்டுகளை சேர்த்து அடுத்த கட்ட தொழில்நுட்பத் தயாரிப்பானது. இந்த ரக வெடிகுண்டு விலங்குகளின் மீது வீசப்பட்டு வெடிக்கும்போது அவைகளைக் காயப்படுத்திவிடும்.

b

இதையடுத்து வந்திருப்பதுதான் வேக்குவம் டைப் வெடிகுண்டுப் புழக்கம். சாதாரண வெடிமருந்துக்குப் பதிலாக கிணறு தோண்ட, பெரும் பாறைகளைப் பிளக்கப் பயன்படுகிற டெட்டனேட்டர்களைப் பிரித்து அதன் வெடிமருந்துக் கலவையோடு நைட்ரேட், கூர்மையான வெள்ளைச் சீனிக் கற்கள், செருப்புத்தைப்பதற்குப் பயன்படும் கூரிய சிறிய ஆணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும். இலக்கைக் குறிவைத்துத் துல்லியமாக வீசும்போது வேக்குவம் காரணமாக எழும் பிரஷ்ஷரால் சிதறும் வெடிகுண்டின் கூரிய பொருட்கள் ஆளை செதில் செதிலாக சிதைத்துவிடும்.

Advertisment

நாங்குநேரி பழிக்குப் பழி தொடர் கொலையில் முதலில் நம்பிராஜனைக் கொன்றவர்கள் அரிவாள்களை மட்டுமே பயன்படுத்தினர். அதற்குப் பழியாக அந்தக் கும்பலை தீர்த்துக்கட்ட நம்பிராஜனின் தந்தை அருணாசலம் தரப்பு கடந்த மார்ச் 19 அன்று பட்டப்பகலில் நாங்குநேரியிலுள்ள மதி ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த செல்லச்சாமி தரப்பினர் மீது வெடிகுண்டு வீசி நிலைகுலையச் செய்து வெட்டியதில் ஆறுமுகத்தையும் ஆள் மாறாட்டமாக கடைப்பணியாளர் சுரேஷையும் வெட்டித் தீர்த்திருக்கிறது. அந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது வீரியமான டைப் என்றாலும் சாதாரண ரகம்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகே அதைவிடப் பவர் ஃபுல்லான அலுமினியம், சல்ஃபர் கலவை எரிவெடிகுண் டைப் பயன்படுத்தியிருக்கிறது செல்லச்சாமி தரப்பு.

கடந்த செப்-25 அன்று சண்முகத்தாய், சாந்தி இருவரின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் வெடிகுண்டை வீசி அதகளப்படுத்தியதில் பற்றிய நெருப்பு அங்குள்ள சோபா செட்கள், பிற வகைகளில் பற்றி எரிந்து நாசப்படுத்தியிருக் கிறது. இந்த ரகக் குண்டுகளின் வீரிய வெடிமருந்துக் கலவையாடு நைட்ரேட் சஃல்பர் மற்றும் அலுமினியம் போன்ற கலவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை வீச்சின் வேகத்தில் நெருப்பைக் கக்குகிற தன்மை கொண்டவை.

e

இதில் உற்றுக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் நாங்குநேரி இரட்டைக் கொலையில் எதிர்பாராத இருவரின் சரண்டர்.

நம்பியின் தந்தை அருணாச்சலம் தரப்பில் நடத்தப் பட்ட மதி ஹோட்டல் கொலையில் சம்பந்தமேயில்லாமல் கொல்லப்பட்ட சர்வர் சுரேஷின் தந்தை சொரிமுத்து, தூத்துக்குடி பார் ஒன்றின் பணியாளர். தன் மகன் அநியாயமாகக் கொல்லப்பட்டதற்கு அருணாசலத்தின் தரப்பைப் பழிவாங்குவதற்காக செல்லச்சாமி தரப்புடன் இணைந் தவர். வெடிகுண்டுகளில் பழக்கம் கொண்ட தன்னுடன் பணியாற்றும் கண்ணன் என்பவரையும் இந்த ஆபரேஷனில் இணைத்துக் கொண்டவர். போலீசின் விசாரணையில் இல்லாத இவர்கள் செப் 30 அன்று திருச்சி கோர்ட்டில் திடீரென்று சரணடைந்தது புலன் விசாரணை அதிகாரிகளின் புருவங்களை உயர வைத்திருக்கிறது.

நெல்லை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனிடம் இதுகுறித்துப் பேசியதில், ""நாங்கு நேரிச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில், வெடிமருந்துக் கலவையோடு பெட்ரோலையும் இணைத்து வீசியிருக்கிறார்கள். அதனால்தான் தீப்பற்றி எரிந்திருக்கிறது. அந்தக் குண்டுகளை அவர் களே தயாரித்திருக்கிறார்கள்'' என்கிறார்.

குற்றவியல் துறை வழக்கறிஞரான பிரம்மாவோ, ""ஆழமான விசாரணையிருந்தால் வெடிகுண்டின் உற்பத்தியாளர்கள் யார்? அவர்களுக்கு இதுபோன்ற மூலப் பொருட்கள் எப்படி வந்தது என்று தெரிய வரும். ஆனால் நடைமுறை அப்படியில்லை. தயாரிப்பாளர்களை விட்டுவிட்டுப் பயன்படுத்துவோர் மீதே நடவடிக்கை களைக் கொண்டுபோவதால் வெடிகுண்டுத் தயாரிப்பாளர்கள் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார்.

நாங்குநேரி வெடிகுண்டு வீச்சுக்கு அடுத்த இரண்டாம் நாள், அந்நகரின் தெற்கேயுள்ள காவல்கிணறு நகரின் பூட்டப்பட்ட மலர்ச்சந்தையில் ஒரு கும்பல் வெடிகுண்டுச் சோதனை நடத்தியிருக்கிறது. இந்த வெடிகுண்டு சோதனையை நடத்தியவர்கள் இதுவரையிலும் சிக்கவில்லை. வெடிகுண்டு கலாச்சாரத்தால் அடிமடியில் நெருப்பைக் கட்டியிருக்கின்றன தென்மாவட்டங்கள்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்