திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டி யம் அருகே பாலசமுத் திரம் அரசு மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தோளூர்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோபி என்பவரது மகன் மௌலீஸ்வரன், பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், கடந்த 10ஆம் தேதி, பள்ளி வளாகத்தில் குழுவாக அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்பொழுது சக மாணவர்கள் விளையாட்டிற்காக சிறு கற்களைத் தூக்கிப் போட்டு விளையாடியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மௌலீஸ்வரன் தான் கற்களை வீசியதாகத் தவறாக எண்ணி, அவரை 3 மாண வர்கள் கூட்டாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மௌலீஸ்வரன் வலி தாங்காமல் கதறியும் அவர்கள் விடாமல் தாக்கியதால் படுகாயம் அடைந்துள்ளான். தகவலறிந்து ஆசிரியர்கள் அங்கு வந்து படுகாயமடைந்த மாணவனை ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தியதால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மௌலீஸ்வரன் கொண்டுசெல்லப்பட்டான். அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தங்கள் மகன் உயிரிழந்த செய்தி கேள்விப் பட்டு அதிர்ச்சியடைந்த மௌலீஸ்வரனின் பெற்றோரும், உறவினர் களும், பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவ னின் இறப்புக்கு நியாயம் கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். பதட்டத்தைத் தணிக்க பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, மௌலீஸ்வரனைத் தாக்கிய 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இந்தச் சூழலில், பணியின்போது கவனக் குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமை யாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டார். இந்த கொலைச் சம்பவத்தில் சாதிய மோதல் இருந்ததா என்பது குறித்து விசாரித்தபோது, கொலை செய்யப்பட்ட மாணவனும், அவனைத் தாக்கிய மாணவர்களும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதில் வேறு எந்தவித முன்விரோதமும் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், விளையாட்டு விபரீதமாக முடிந்து, ஒரு மாணவனின் உயிர் பறிபோனதால், அப்பகுதியிலுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்களிடையே பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.