நக்கீரன் இதழில் "அ.தி.மு.க.வை தோற்கடித்த அ.தி.மு.க.' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுரை தொகுதியில் போட்டி யிட்ட டாக்டர் சரவணனுக்கு செல்லூர் ராஜூ சரியான ஒத்துழைப்பு தராமலும், தன் ஆதரவாளர்களை தேர்தல் வேலை செய்யவேண்டாமெனக் கூறியும், உள்ளடி வேலைகளால் அ.தி.மு.க.வை மூன்றாம் இடத்திற்கு போகச் செய்துவிட்டாரென அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் கொந்தளித்ததை கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 7ம் தேதி, பரமக்குடி அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியின் இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்த எடப்பாடி, சென்னைக்கு திரும்ப மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை வரவேற்க செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வந்தனர். அதோடு, வழக்கத்திற்கு மாறாக கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக வந்திருந்தனர். பெரும்பாலானவர்களின் கைகளில் செல்லூர் ராஜூவை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து மாற்றவேண்டுமென்ற ஒற்றை புகார் மனு இருந்தது! அங்கு எடப்பாடியைச் சந்தித்தவர் கள், "மதுரை அ.தி.மு.க.வின் கோட்டை. அதில் ஓட்டையைப் போடும் செல்லூர் ராஜூவை உடனடியாக மாற்றாவிட்டால் கட்சியை ஒழித்துவிடுவார்' எனக் கூறிவிட்டு, புகார் கடிதத்தை அவரிடம் கொடுத்தனர். எடப்பாடிக்கு பயங்கர ஷாக்!
அங்கிருந்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகியும் செல்லூர் ராஜூவின் முன் னாள் உதவியாளருமான இராமசுப்ர மணியனை பார்த்து, "என்னப்பா விஷயம்?'' என்று எடப்பாடி கேட்க, "போன தேர்தலில் வேண்டுமென்றே அ.தி.மு.க.வை ஜெயிக்கவிடா மல் செய்தது நம்ம கட்சிக்காரங்க தான். அந்த சதியை செய்தது செல்லூர் ராஜூதான் தலைவரே. நக்கீரனில் வந்தது எல்லாமே இந்த கடிதத்தில் இருக்கு தலைவரே. கட்சியை காப் பாத்துங்க தலைவரே!'' என்று சொன்னவரிடம், "நான் பார்த்துக்கறேன்'' என்றிருக்கிறார்.
நாம் அவரிடம் என்ன நடந்ததென விசா ரிக்க, "சார் என் பெயர் இராமசுப்ரமணியன். மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி லீலாவதியின் மருமகன். மாஜி செல்லூராரின் பி.ஏ.வாக இருந்துள்ளேன். அதன்பின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக இருக் கிறேன். இம்முறை அ.தி.மு.க.வின் வேட் பாளராக டாக்டர் சரவணன் அறிவிக்கப் பட்டதிலிருந்தே செல்லூரார் தனது ஆதர வாளர்களை வேலை செய்யவிடவில்லை. அ.தி.மு.க.வின் தோல்வி குறித்து நக்கீரனில் வந்த கட்டுரையில் குறிப்பிட்டது அனைத்தும் உண்மை சார்.
செல்லூர் ராஜூ போன்ற அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களே கட்சிக்கு எதிராக வேலை செய்தார்கள். தென் மாவட்டம் முழுவதுமே இப்படி நடந்தது. மதுரையைப் பொறுத்தவரை அ.தி.மு.க.விற்கு செல்வாக்கான இடங்களிலுள்ள பகுதி செயலாளர்களை மட்டும் அழைத்து தனியாகக் கூட்டம் போட்டு சரவணனுக்கு வேலை செய்ய வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டார் செல்லூரார். அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். பிரிந்தபிறகு இவர் முழுக்க முழுக்க ஓ.பி.எஸ். ஆதரவாளராகவே செயல்பட்டார். எடப் பாடியை அடிக்கடி ஒருமையில் பேசுவார். "அண்ணே, என்னயிருந்தாலும் அவர் நம்ம தலைவர் இல்லையா?' என்றதற்கு என்னைத் திட்டி வெளியே அனுப்பிவிட்டார். அதிலிருந்து என்னை ஒதுக்க ஆரம்பித்தார் சார்.
மதுரையைப் பொறுத்தவரை நகர் பகுதியில் 150 வட்டச் செயலாளர்களும், 25 பகுதிச் செயலாளர்களும் இருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேல், இத்தேர்தலுக்கு பிறகு மிகவும் அதிருப்தியில்தான் இருக்கிறார் கள். யாரையுமே வேலை செய்யவிடவில்லை. அப்படியே வேலை செய்தால், "அவருக்காக விழுந்துவிழுந்து வேலை செய்றியாமே? அந்தாளு ஜெயிச்சுட்டு வேற கட்சிக்கு போயிரு வார்யா. அப்புறம் என்கிட்டதான் நீ வரணும்' என்று கடிந்து கொள்வார். இதையெல்லாம் மீறி வேலை செய்த வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர் களை ஒதுக்கிவிட்டார் அவர்களை கட்சி வேலை எதற்கும் கூப்பிடுவதில்லை. இதனால் மிகவும் அதிருப்தியாகி புகார்க் கடிதத்தோடு வந்தார்கள்.
இப்படியே தொடர்ந்தால் மதுரையில் அ.தி.மு.க. என்ற கட்சியே இல்லாமல் போய்விடும். ஏன், தென்மாவட்டம் முழுவதுமே மாவட்ட செயலாளர்கள் சசிகலா, ஓ.பி. எஸ்.சுக்கு ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார்கள். அ.தி.மு.க. தோற்றாலும் பரவாயில்லை என்று அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்துகொண்டே இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். அது இந்த தேர்தலில் வெளிப்பட்டது. இவ்வளவு நடந்தும் கட்சித் தலைமை கண்டுகொள்ளாமல் இருந்தால் இந்த செல்லூர் ராஜூ போன்ற ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் மாவட்ட செயலாளர்களே அ.தி.மு.க.வை அழித்து விடுவார்கள். எனவே அனைத்து நிர்வாகிகளும் சென்னை தலைமை அலுவலகத்திற்கு படையெடுத்து எடப்பாடியிடம் முறையிட விருக்கிறோம்'' என்றார்.
இந்த எதிர்ப்பு மதுரை நகர் முழுவது முள்ள அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் செல்லூர் ராஜூ மீது தொடர்கிறது. செல்லூர் ராஜூவை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. எடப்பாடிக்கு கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் தொடர் நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியிருக் கிறார்கள் அ.தி.மு.க.காரர்கள்.