1990-கள் வரை தமிழக தியேட்டர்களில் ஒரு சூசக நடவடிக்கை இருந்தது. விவகாரமான படங்களை வெளியிடுவதற்கென்றே ஊருக்கு ரெண்டு தியேட்டர்கள் இருக்கும். "தாம்பத்யமும் குழந்தை பிறப்பும்' என்பது போன்ற விழிப்புணர்வு படங்கள் திரையிடப்படும். இந்தப் படத்தின் இடைவேளை விடப்பட்டதும் "மாப்ள... இண்ட்ரோல் விட்டுட்டான். எந்திரி எந்திரி' என தியேட்டரே அலர்ட்டாகும். யாருமே இருக்கையை விட்டு எழமாட்டார்கள். தியேட்டர் ஸ்கிரீன் முன்பாக ஒரு குண்டு பல்பு தொங்கும். அந்த குண்டு பல்ப்பை எரியவிட்டு, ரசிகர்களை உஷார் செய்வார்கள் தியேட்டர்காரர்கள். அடுத்தநொடியே அந்தப் படத்திற்கு சம்பந்தமில்லாத வகையில் ஆபாச துண்டுப் படமாகிய "பிட்டுப் படம்' திரையில் ஓடும். அது ஓடி முடிந்ததும், இடைவேளைக்குப் பிறகான படத்தைப் பார்க்க பெரும்பாலும் ரசிகர்கள் இருக்கமாட்டார்கள்.
சென்னையில் கோடம்பாக்கம், புரசைவாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களுக்குச் சென்று இந்தப் படங்களைப் பார்ப்பார்கள். அதிலும் ஊர்ப்புறங்களில் "தெரிஞ்சவங்க பார்த்துடக் கூடாதே'னு துண்டுல உருமா கட்டி பாதி மூஞ்சிய மறைச்சிக்கிட்டுப் போவாங்க. ஆனா... இன்னைக்கி... செல்போன் மூலம், இணைய வசதியை பயன்படுத்தி "உள்ளங்கையிலயே உலகம்' பார்க்க முடியுது.
உலகின் மழைக்காடுகளில் மிகவும் புகழ்பெற்ற அமேசான் காட்டுக்குள்ளயும் செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலம் பாலியல் படங்கள் புகுந்து பாடாப்படுத்துதாம்.
ட்விட்டர் என்ற பெயரில் இருந்து இப்போது எக்ஸ் தளம் ஆகியிருக்கும் சமூக வலைத்தளத்தின் சேர்மன் எலன் மஸ்க் தனது "ஸ்டார் லிங்க்' நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் மூலமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரேசில் நாட்டிற்குட்பட்ட அமேசான் காட்டுக்குள் இருக்கும் கிராமக்களுக்கு இண்டர்நெட் இணைப்பு கிடைக்கச் செய்தார். சுமார் இரண்டாயிரம் பேர்கள் இணைப்புப் பெற்று, செல்போன் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.
இதனால் வெளி உலகம் அறியாமலிருந்த அந்த மக்கள் இப்போது தூரம் தொலைவில் இருக்கும் தங்கள் உறவினர்களிடமும், அவசர உடல் உபாதைகளுக்கு மருத்துவர்களிடம் பேச முடிகிறதாம். குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வியறிவும் பெறுகிறார்கள். ஆனால் காட்டுவாழ் மக்களில் சீனியர்களுக்கு இது பெரும் கவலையைத் தருகிறதாம்.
சில தினங்களுக்கு முன் இதை சர்வதேச பத்திரிகை செய்தியாளர்கள் வெளிஉலகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
"எங்களோட கலாச்சார பழக்கவழக்கங்களில் அதிர்ச்சியடையச் செய்கிற அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். இளைஞர்கள் செல்போனுக்கு அடிமையாகி, சோம்பேறிகளாகிவிட்டார்கள். க்ரூப் சாட்டிங்கில் ஆபாச வீடியோக்களை கூச்சமில்லாமல் பகிர்ந்துகொள்கிறார்கள். அதிலும் ஆபாச வீடியோக்களைப் பார்த்துப் பார்த்து, அவர்களின் நடவடிக்கைகளில் மோசமான மாறுதல் ஏற்படுகிறது. தாம்பத்யத்தில் பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள்' என வேதனைப்பட்டிருக்கிறார்கள் மாருபோ எனும் பழங்குடியினர் சங்கத்தின் பெரியவர்கள்.
நவீன விஞ்ஞானத்தை புறக்கணிக்க முடியாது; அது எல்லா மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
"விஞ்ஞான வளர்ச்சியின்றி மனிதன் வாழமுடியாது' என்பது போலவே "விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் வாழமுடியாது' என்றும் சொல்லத் தோன்றும்.
ஆனால்...
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
-என சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் பாடிவைத்தார்.
விஞ்ஞானம் தீதாவதும்; நன்றாவதும் விஞ்ஞானத்தின் கைகளில் இல்லை, விஞ்ஞானத்தை கையாளும் நம் கைகளில்தான் உள்ளது.
வேற என்னத்தச் சொல்ல முடியும்?