ஆதரவற்ற முதியோர், ஊனமுற்றோர், விதவை, கணவனால் கைவிடப் பட்டவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட முடிவெடுத்து, அதன்படி 22.1.1962-ஆம் ஆண்டுமுதல் மாதம் 20 ரூபாய் ஓய்வூதியம் வழங்கத் தொடங்கியது இந்த நிலையில் 31.10.2007-ல் நக்கீரன் இதழில் ஆண் வாரிசுகள் இருந்தும் வறுமையில் வாடும் முதியோர்களின் நிலை குறித்து நேரடி கள ஆய்வு செய்து "முதியோர் வாழ்க்கை முதல்வரின் பார்வைக்கு' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. மறைந்த முதல்வர் கலைஞர் நமது கட்டுரையைப் படித்துவிட்டு அதை முழுமையாக கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆண் வாரிசுகள் இருந்தும் வறுமையில் வாடும் 60 வயதைக் கடந்த முதியோர்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். தற்போது இந்த உதவித் தொகை மாதம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டில் ஜெ. தலைமையிலான தமிழக அரசு மாநிலம் முழுவதும் 30 லட்சத்து 35 ஆயிரம் பேர் நிதி உதவி பெற்றுவந்த நிலையில் 5 லட்சத்து 81 ஆயிரம் பயனாளிகளை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. பிறகு வறுமைக் கோட்டு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று உத்தரவிட்டது. வறுமை கோட்டு பட்டியல் முறையாக எடுக்காததால், உண்மையில் வறுமையில் வாடும் ஏழை முதியோர்கள் உதவித்தொகை பெறமுடியாத நிலையில் இருந்து வருகிறார்கள். இது ஒரு பக்கம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள மெத்தப் படித்த அதிகாரிகள் அரசு 7 லட்சம் கோடி கடனில் உள்ளது. எனவே சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று முதியோர்கள் தலையில் கைவைத் துள்ளது. அதன்படி உதவித்தொகை பெறும் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளின் ஆதார் எண்களின் அடிப்படையில் அவர்கள் வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் நகைக் கடன் பெற்றிருந்தாலோ, பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சொத்துக்களை விற்றி ருந்தாலோ, வாங்கியிருந்தாலோ அவர்கள் பெயரில் இரண்டு கேஸ் சிலிண்டர்கள் பதிவு செய்யப்பட்டி ருந்தாலோ... இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டது
இதற்காக பத்திர பதிவுத்துறை, வங்கிகள், கேஸ் கம்பெனிகள் போன்ற முக்கிய துறைகளில் உதவித்தொகை பெறும் முதியோர்களின் ஆதார் எண்கள் அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்ட பட்டியல் தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழி யாக ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் வறிய நிலையில் உள்ளவர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட் டத்தில் உதவித்தொகை பெற்றுவந்த 9000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இப்படி 32 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான பேர் தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் உள்ள இறையூர் கிராமத் தைச் சேர்ந்த 75 வயது பெரியவர் மாணிக்கம், "எனது சொந்த ஊர் கரூர் மாவட்டம் செம்பாரப்பட்டி. குடும்ப வறுமை காரணமாக கடலூர் வந்துவிட்டோம். ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் டயர் பொருத்தப்பட்ட மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் பழுதடைந்தால் அதை சீர்செய்து கொடுப்பது, டயர் பஞ்சர் ஆனால் அதை ஒட்டிக் கொடுப்பது போன்ற வேலையை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக செய்து மனைவி பிள்ளைகளை காப்பாற்றி வந்தேன். கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை ஆலையும் மூடப்பட்டு விட்டது. வருமானம் இல்லை. இந்த நிலையில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் மனுச் செய்து மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று வந்தேன்.
தற்போது எனக்கு வயது 75. இந்த முதியோர் உதவித்தொகையை நம்பி வாழ்ந்து வந்தேன். தற்போது அதில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று கேட்ட போது உங்களது சொந்த ஊரான செம்பாரப் பட்டியில் நிலம் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் உங்களுக்கு வருமானம் அதிகமாக இருப்பதாக அரசு நிறுத்த சொல்லிவிட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
எங்கள் பூர்வீக ஊரான செம்பாரப்பட்டியில் எனது உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் என ஐந்து பேர். எங்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற பூர்வீக நிலம் மூன்று ஏக்கர் நிலத்தை எங்களது பிள்ளைகள் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டார்கள். எங்களுக்கு வயதாகி விட்டது. நாங்கள் இறந்த பிறகு அந்த சொத்தை பங்குபிரிப்பதில் பிரச்சனை வரும். அதனால் உயிரோடு இருக்கும்போதே அந்த கொஞ்ச சொத்தையாவது எங்களுக்கு எழுதி கொடுங்கள் என்று பிள்ளைகள் கேட்டனர். அதை பிரித்து பத்திரப்பதிவு செய்து கொடுத்தோம். அந்த நிலத்தில் ஒன்றும் பெரிய வருமானம் இல்லை. இதை காரணம் காட்டி உதவித்தொகையை நிறுத்திவிட்டார்கள். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளேன். தற்போது மருந்து மாத்திரைகள் வாங்குவதற்குக்கூட பணம் இல்லை'' ’ என்கிறார் பரிதாபமாக.
இதே தாலுகாவில் உள்ளது இருளம்பட்டு கிராமம். இந்த கிராமத்திலுள்ள பட்டியல் இனத் தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பாலாயி. வயது 75. "எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. மகள் சிறு வயதாக இருக்கும்போதே என் கணவர் இறந்துவிட்டார். கூலி வேலை செய்து மகளை வளர்த்து திருமணம் செய்துகொடுத்தேன். மகளின் கணவர் கடந்த ஆண்டு கொரோனாவின்போது திடீரென்று இறந்துபோனார். மகள் 3 பிள்ளைகளை யும் வைத்துக்கொண்டு படும் சிரமம் கொஞ்சநஞ்சமல்ல. தள்ளாத வயதில் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.
அரசாங்கம் எனக்கு ஆயிரம் ரூபாய் விதவை உதவித்தொகை வழங்கி வந்தது. அதையும் தற்போது நிறுத்திவிட்டார்கள். வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேட்டபோது பத்திரப் பதிவுத்துறையில் சொத்து விற்பனைக்கு கையெழுத் துப் போட்டதாக கூறுகிறார்கள். அதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. நான் பிறந்தது விருத்தாசலம் அருகிலுள்ள பரவளுர் கிரா மம். என் கூட பிறந்தவர்களுக்கு பொதுவில் ஒரு வீட்டுமனை இருந்தது. அதை அவர்களது பிள்ளை கள் பாகப்பிரிவினை செய்துகொள்ள, பெண் வாரிசு என்ற அடிப்படையில் என் கையெழுத்தும் போட் டால் தான் பாகப்பத்திரம் பதிவுசெய்யப்படும் என்று கூறியுள்ளனர் அதிகாரிகள். எனது சகோதரர் மகன்கள் என்னை வந்து அழைத்துச் சென்று கையெழுத்துப் போடச்செய்தார்கள். அதை காரண மாக காட்டி உதவித்தொகையை நிறுத்தி விட்டார் கள். என்னைப் போன்ற ஏழைகளைக் கைவிட லாமா அரசு?''’என்று ஏக்கமாகக் கேட்கிறார் பாலாயி,
ஏன் இந்த குளறுபடி என்று இதே துறையிலுள்ள சில அதிகாரிகளிடம் கேட்டோம். "அரசுக்கு யாரோ சிலர் தவறாக வழிகாட்டியுள்ளனர். அரசு உண்மையிலேயே பெரும் வசதிபடைத்த பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்கவேண்டுமானால், முதியோர் உதவித் தொகை வாங்கும் பயனாளிகள் ஆதார் எண்களை அவர்கள் வைத்திருக்கும் வீடு, மனை, நிலம் ஆகிய சொத்துக்களின் பட்டா சிட்டாவில் இணைக்கு மாறு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் உதவித் தொகை பெறும் பயனாளியின் ஆதார் எண்ணை இணைய வழியில் பரிசோதித்தால் அவர்களுக்கு எந்தெந்த இடங்களில், ஊர்களில் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாலும் வெளியே தெரிந்து விடும், அப்படிப்பட்டவர்களை நீக்கிவிடலாம்.
தற்போது திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக் கிறவர்களில் ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்பட் டுள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் 5 லட்சத்து 81 ஆயி ரம் பேரை நீக்கி முதியோர்கள், மாற்றுத்திறனாளி கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்தது. அதே வேலையை தற்போதைய தி.மு.க. அரசும் செய்து முதியோர்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.