முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின் வசமுள்ள நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை அதிரடியாக குறைத்துள்ளது அரசு. இதனால் மாதம் 15,000 ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர். விவசாயி மகன் என சொல்லிக் கொள்ளும் எடப்பாடி ஆட்சியில் வேளாண்மைத் துறை பணியாளர்களும் இதே ஊதிய குறைப்பை எதிர்கொண்டுள்ளனர். இதனால், எடப்பாடி அரசுக்கு எதிராக பொறியாளர்களும் அலுவலகர்களும் ஏக கோபத்தில் கொந்தளிக்கின்றனர். இந்த ஊதிய குறைப்பு தவறானது என திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கண்ணனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

salary

பொறியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை குறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது?

ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி கடந்த 2006-ல் அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை அறிவித்திருந்தது மத்திய அரசு. அதனடிப்படையில் மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை கலைஞர் அரசு வழங்கியது. கணக்கீட்டு அளவில் பொறியாளர்களின் ஊதியத்தில் முரண் பாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அரசு ஊழியர்கள் போராடியதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பல்வேறு ஆய்வுகளை நடத்தி, மத்திய அரசு பொறியாளர்கள் மற்றும் மாநில அரசின் டாக்டர்கள் ஆகியோரை ஒப்பிட்டு ஊதியம் வழங்க பரிந்துரைத்தது. அதன்படி, ஊதியம் வழங்கியது கலைஞர் salaryஅரசு. ஆனால், அதிலும் முரண்பாடுகள் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தலைமையில் 2013-ல் அப்போதைய ஜெயலலிதா அமைத்த குழு, ஊதியத்தை குறைக்க பரிந்துரைத்தது. இதனை எதிர்த்து அரசிடம் வைக்கப்பட்ட எங்களது கோரிக்கை ஏற்கப்படாததால் நீதிமன்றம் சென்றோம். நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து தீர்வு காணுமாறு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதன்படி அமைக்கப்பட்ட முருகேசன் கமிட்டி, எங்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியம் சரியானது என்று பரிந்துரைக்க அதனை ஏற்று ஊதியத்தை குறைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி. குறைப்பதற்காக குறிப்பிட்டுள்ள காரணங்கள் உண்மைக்குப் புறம்பானவை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் பொறியாளர்களின் சம்பள குறைப்பு அநீதியானது.

Advertisment

ஆய்வறிக்கை-பரிந்துரை இவற்றின் அடிப்படையில்தானே ஊதிய குறைப்பு செய்யப்பட்டுள்ளது?

மத்திய அரசில் உதவி செயற் பொறியாளர் என்பது தொடக்க நிலை பதவி. அதுவே மாநில அரசில் உதவி பொறியாளர்தான் தொடக்க நிலை பதவி. மத்திய அரசின் டிப்ளமோ கல்வி தகுதியுடன் பணிபுரியும் பொறியாளர்களுடன் எங்களை ஒப்பிட்டு, இரு பதவிகளும் ஒன்று என அரசாணையில் சொல்லியிருப்பது உண்மைக்கு புறம்பானது. மதிப்பீடுகளை தயாரிப்பதும் பணிகளை மேற்பார்வையிடுவதும் பொறியாளர்களின் முக்கியப்பணி என்கிற நிலையில், பதவியின் பெயரை வைத்து ஊதியம் நிர்ணயிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் எங்களுக்கான ஊதியம் குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது. இது போன்று பல அநீதிகளை விவரிக்க முடியும்.

நீதிபதி முருகேசன் கமிட்டியிடம் நீங்கள் முறையிட்டிருக்கலாமே?

Advertisment

ஆணையத்தின் பரிந்துரைகள் இன்னும் வெளியிடப் படவில்லை. ஆனால், அரசாணையில் சொல்லப்பட்டுள்ள சில வரிகளை கவனிக்கும்போது நிதித்துறையிலிருந்து கொடுக்கப்பட்ட தகவல்கள் பொருத்தமற்றவையாக இருக்கிறது. நேரடியாக அதனை விளக்குவதற்கு எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.

மனுதாரர் என்கிற முறையில் ஆணையத்தின் பரிந்துரைகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமே?

உண்மைதான். ஆனால், எங்களுக்கு கொடுக்கப்பட வில்லை.ஆணையத்தின் பரிந்துரைகளை எங்களுக்கு வழங்கி அரசு தன்னுடைய பதில்களையும் வெளியிட்டு நியாயமான முடிவை எடுத்திருக்க வேண்டும். அதனை செய்யவில்லை.

salary

மற்ற துறைகளில் உள்ள பதவிகளோடு முரண்பாடிருந்ததால்தான் ஊதியம் குறைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்களே?

இது முற்றிலும் தவறானது. ஏனெனில், நேரடி நியமனம் பெறும் ஆர்.டி.ஓ.க்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவருமே எங்களைப் போன்றே கல்வித் தகுதி பெற்று தமிழக அரசின் தேர்வாணையம் மூலமாகவே நியமனம் பெறுகிறார்கள். ஆனால், அவர்களைவிட எங்களுக்கு ஊதியம் குறைவாக இருந்ததால் அது சரி செய்யப்பட்டது. அதை ஏற்க மறுத்து தற்போது ஊதியத்தை குறைத்திருப்பது ஏற்புடையதல்ல.

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளிலுள்ள பொறி யாளர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா?

மேற்கண்ட துறைகளோடு ஊரகவளர்ச்சித்துறை, வேளான் மைத்துறை, மின் ஆய்வுத்துறை, தொழிலாக பாதுகாப்புத் துறை,போக்குவரத்துறை,சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளும், மின்வாரியம், வீட்டுவசதிவாரியம், குடிசைமாற்று வாரியம், குடிநீர்வாரியம் உள்ளிட்ட வாரியங்களிலும் பணிபுரியும் 15,000-த்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள்.

உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

அரசிடமும் ஆணையத்திடமும் நியாயம் கிடைக்காததில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பட்டதாரி பொறியாளர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகிறோம். கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வெள்ளச் சேதப் பணிகள் முடிந்ததும், பேரணியாக சென்று முதல்வரிடம் முறையிட திட்டமிட்டுள்ளோம்.

-இளையர்