உலகம் முழுவதும் கொரோனா பிடியிலிருந்து விடுபட்டு சற்று ரிலாக்ஸாக இருந்தாலும் சீனாவில் நிலைமை அப்படியில்லை. சமீபத்தில்தான் கொரோனாவில் ஒரே நாளில் 40,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா அதிகம் தாக்கமுள்ள பகுதிகள் கெடுபிடியான விதிகளுடன் ஊரடங்கில் வைக்கப்பட்டுள்ளன. அப்படி ஜின்ஜியாங் மாநிலத்தில் ஊரடங்கிலிருந்து அடுக்குமாடிப் பகுதியில் தீவிபத்து ஏற்பட, அதில் 10 பேர் பலியாகினர். இதையடுத்து ஆட்சியாளர்கள் மேல் அதிருப்தி ஏற்பட்டு, சீனா முழுவதும் போராட்டங்கள் பரவிவருகிறது. கிட்டத் தட்ட 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கில் இருக்கும் மக்கள், நிரந்தர அதிபர் எனக் கூறப்படும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிராகப் போராடிவருகின்றனர். கையில் வெற்றுக் காகிதங்களு டன் சீனர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தி யுள்ளது. போராட்டம்னாலே அதிபர்களுக்குக் கலக்கம்தான்!
கேரள மாநிலத்தில் அதானி குழுமம் ரூ.7500 கோடி செலவில் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்துக்கு அப்பகுதி உள்ளூர் மக்கள், மீனவர் களிடையே எதிர்ப்பு இருந்துவருகிறது. இதனால் தொடர்ச்சியாக இப்பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பணிகள் 3 மாதங்களாக முடங்கிய நிலையில், நீதிமன்றம் சென்று பணிகள் நடைபெறத் தடையில்லை என அதானி தரப்பில் தீர்ப்பு பெறப்பட் டது. எனினும் பொதுமக்கள் துறைமுகக் கட்டுமான லாரிகளை சிறைப்பிடித்தனர். அத்துடன் போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக் கோரியும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸா ருக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட போலீசாருக்கும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸார் 3000 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர். ரோமன் கத்தோலிக்க சபையோ, காவல் நிலையத்திலிருந்தே கற்கள் வீசித் தாக் கப்பட்டதாகவும் நீதிவிசாரணை தேவை யெனவும் முறையிட்டுள்ளது. கார்ப்ப ரேட் திட்டம்னாலே கலகம்தான்!
எழும்பூர் அரசு தாய் -சேய் நல மருத்துவமனையில் ரூ.4 கோடி செல வில் இலவச உணவு வசதியுடன் கூடிய மிகப்பெரிய தங்கும்விடுதி கட்ட திட்ட மிடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். “நூறாண்டுக்கும் மேலாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் தமிழகத்தின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை எழும்பூர் மருத்துவ மனை. அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்கள் அதிகரிக்கவேண்டு மென்ற வகையில் பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் சிசேரியன் பிரசவங்கள் 43 சத விகிதத்திலிருந்து 38 சதவிகிதமாகக் குறைந்தன. இங்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மருத்துவமனையில் தங்கும்போது, உடன்வரும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மரத்தடியிலும், பிற இடங்களிலும் தங்கி அவதிப்படு வதைத் தடுக்கும் வகையில் மருத்துவ மனை வளாகத்தில் மிகப்பெரிய தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள் ளார். அசத்துங்க மா.சு!
எதிர்பாராத வறட்சி, வெள்ளம் போன்ற இயற் கைப் பேரிடர்க் காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்கிவந்தன. அதனை மாற்றிவிட்டு காப்பீட்டு நடைமுறை யைக் கொண்டுவந்தது மத்திய அரசு. காப்பீட்டு முறை வந்ததிலிருந்தே இத்திட்டத்தின்மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அந்த நிதர்சனத் தில் ஒன்றுதான் இது. மகாராஷ்டிர மாநிலம் பர்பாணி மாவட்டம் தாசலா கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண ரௌத். அவர் சமீபத்தில் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் துவரம் பருப்பு விதைத்திருந்தார். இவர் பிரதம மந்திரி ஃபஸல் பீமா திட்டத்தின்கீழ் தனது பயிரைக் காப்பீடு செய்திருந்தார். பயிருக்கு இக்கட்டு வரும் பட்சத்தில் ஏக்கருக்கு ரூ.27.000 காப்பீடு தரப்படவேண்டும். இவரது விளைச்சல் மழையால் சேதமான நிலையில், காப்பீட்டு நிறுவனம் தந்ததோ ஒரு ஏக்கருக்கு ரூ.14.21 ரூபாயும் மற்றொரு ஏக்கருக்கு ரூ.1200-ம்தான். மூன்றாவது ஏக்கருக்கு எதுவும் தரவில்லை. இந்த மூன்று ஏக்கருக்கும் கிருஷ்ணரௌத் கட்டிய பிரீமியம் மட்டுமே ரூ.1800. இது காப்பீடா? பட்டை நாமமா?
இந்திய திரைப்படத் திருவிழாவின் இறுதிநாளன்று திரையிடப்பட்ட "தி காஷ்மீர் பைல்ஸ்'’படத்தைப் பார்த்துவிட்டு, விழாவுக்கு நடுவராக அழைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய இயக்குநர் நடாவ் லாபிட் சொன்ன கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. "திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 14 படங்கள் பரவாயில்லை. "காஷ்மீர் பைல்ஸ்' படம் அப்பட்டமான பிரச்சாரப் படம். அதைப் பார்த்து நடுவர்களாகிய நாங்கள் தொந்தரவும் அதிர்ச்சியும் அடைந்தோம். திரைப்படத் திருவிழாவில் திரையிடத் தகுதியற்ற இழிவான படம்'” என கிழித்தெறிந்துவிட்டார். அவசர, அவசரமாக மேல்மட்டத்தில் என்ன நடந்ததோ, இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதுவர் நவோர் கிலோன், கோவா திரைப்படவிழா நடுவர் குழுவின் தலைவராக இருக்க அழைத்த இந்தியாவின் அழைப்பை, மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்ததாக நடாவைக் கண்டித்திருக்கிறார். கண்டிப்புக்கெல்லாம் அசந்துடுவோமா?!
-நாடோடி