இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவியல் பாய்ச்சல்களில் ஒன்று ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். அதாவது, மனித உழைப்பு தேவைப்படும் வேலைகளை எப்படி ரோபோட்டுகள் நிறைவேற்றுகிறதோ, அதேபோல மனித அறிவு தேவைப்படும் வேலைகளில் இந்த செயற்கை நுண்ணறிவு உதவும். மனித உழைப்புக்கும், அறிவுக்கும் இனி வேலையில்லை.
அதாவது, ஒரு வேலையை எப்படிச் செய்வது என நிரல் எழுதிக் கொடுத்துவிட்டால் கணினிகளே அந்த வேலைகளைச் செய்துவிடும். இதனால் எதிர்காலத்தில் மனிதனுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதற்கான நுழைவாயிலாக செயற்கை நுண்ணறிவு அமைந்திருக்கிறது என்கிறார்கள் இத்துறை அறிஞர்கள். இந்தத் துறையில் மூன்று பெரும் அறிஞர்கள் யோசுவோ பெங்கியோ, யான் லெகன், ஜெஃப்ரி ஹிண்டன். இதில் ஜெஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்துக் காக செயற்கை நுண்ணறிவை வளர்த்தெடுத்த அறிஞர். "ஏ.ஐ. தொடர்பாக நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் தொடர்பாக வருத்தமடைகிறேன். அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்றிருக்கிறார். பண்றதையும் பண்ணிட்டு பசப்புறதைப் பாரு!
செயற்கை நுண்ணறிவு சாட்போட் மூலம் இயக்கப்படும் சில இணையதளங்களை கூகுள் கண்டறிந்து நீக்கியுள்ளதாகச் செய்தி வருகிறது. அதாவது உண்மை கலந்த போலிச் செய்திகளை வெளியிட்டு இந்த இணையதளங்கள் வருமானமும் ஈட்டியுள்ளன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆபாசப் பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் முட்டியிட்டுப் பிரார்த்தனை செய்ததாகவும் ஒரு செய்தி பரவியது. இந்தப் புகைப்பட உருவாக்கங்களின் பின்னணியில் இருந்தது செயற்கை நுண்ணறிவே. மேலும், எதிர்காலத்தில் அதிகாரத்தின் மேல் நாட்டமுள்ள தரப்புகள், இத்தகைய செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உண்மையிலிருந்து எளிதில் பிரித்தறியமுடியாத போலிச் செய்திகளை அதிகம் வெளியிடலாம். ஒரு கட்சி மற்றொரு கட்சியை பின்னுக்கிழுக்க இத்தகைய முயற்சிகளில் இறங்கலாம். ஆனால் அதே செயற்கை நுண்ணறிவின் மூலம் போலிச் செய்திகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என தொழில்நுட்பத்துக்கு ஆதரவாக வாதிடும் அறிஞர்களையும் காணமுடிகிறது. அக்மார்க் போலி செய்திகளின் காலம் வரப்போகுதாம்!
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்பை மட்டும்தான் பறிக்குமா…..? இல்லை வேறு அபாயங்களும் இருக்கின்றன. சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். குரலில் ஒரு ஆடியோவை வெளியிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பைக் கிளப்பினார். பதிலுக்கு தி.மு.க.வும் அண்ணாமலை குரலிலேயே ஒரு ஆடியோவை வெளியிட்டு பட்டையைக் கிளப்பியது. அதாவது ஒருவரின் குரல் பதிவு சமூக விரோத சக்திகளுக்குக் கிடைத்தால், அவர்கள் அதைவைத்து நம் குரலில் பேசுவதைப் போன்றே செயற்கைக் குரலை தயார் பண்ணிவிடலாமாம். இந்த நுட்பத்தை வைத்து, தொலைபேசி, மொபைல் அழைப்புகளில் ஒருவர் பேசுவதைப் போன்றே அவரது உறவினர்கள், நண்பர்களிடம் பேசி பணம் பறிக்கும் மோசடிகள் அரங்கேற ஆரம்பித்துள்ளது. இப்படி ஏமாற்றும் முயற்சியில் 83 சதவிகிதம் பேர் பணத்தை இழந்திருக்கின்றனர். ஏமாற்றுபவர்கள் தந்தை-தாய் குரல், கணவன்-மனைவி குரல், பிள்ளைகள் குரலைக்கூட விட்டுவைப்பதில்லையாம். உங்கள் வங்கி அட்டையின் பன்னிரண்டு இலக்க எண்கள் சொல்லுங்கள் எனக் கேட்டு ஏமாற்றுவதைப்போல, இனி இந்தக் குரல் ஏமாற்று மோசடிதான் கிரிமினல்களின் இலக்காக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஜாக்கிரதை மக்களே!
கடந்த வருடம் மட்டும் ஊடகங்களில் பணிபுரிபவர்கள் மீதான தாக்குதல் 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது உலக அளவில். குறைந்தபட்சம் ஊடகங்களில் பணிபுரிபவர்கள் 65 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தாக்கப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகம். ஜனநாயகம் மற்றும் நீதிக்கான அடித்தளம் ஊடகச் சுதந்திரம். சோவியத்தில் அதன் ராணுவத்தைப் பற்றி எதிர்மறையாக செய்தி எழுதுபவர்களுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை என சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. பெண் பத்திரிகையாளர்களில் 4-ல் 3 பங்கு பேர் ஆன்லைனில் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நாலில் ஒரு பங்கு பெண் பத்திரிகையாளர்கள் உடல்ரீதியாகவே தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்தியா இந்த ஆண்டு பத்திரிகைச் சுதந்திரப் பட்டியலில் 11 இடங்கள் பின்னுக்கு இறங்கி 161-வது இடத்தைப் பிடித்துள்ளது.
-நாடோடி