இலங்கையின் டாக் மகாக் வகை குரங்குகள் சுமார் 1 லட்சம் எண்ணிக்கையில் சீனாவின் உயிரியல் பூங்காக்களுக்கு ஏற்றுமதியாக இருக்கிறது. குட்டிநாடான இலங்கையில் 30 லட்சம் குரங்குகள் இருந்தால் என்னாகும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். இவை விவசாயப் பயிர்களை சேதம் செய்வதாக நிறைய புகார்கள் வரத் தொடங்கின.
இதனால் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து சில விலங்குகளை இலங்கை நீக்கியது அதில் குரங்கு, மயில்கள் ஆகியவை அடங்கும். அதாவது, பயிருக்கு இடைஞ்சல் செய்தால் அவற்றைக் கொல்லலாம் என்பதுதான் இதில் மறைமுக செய்தி. இப்படிக் கொல்வதைவிட சீனாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஏற்றுமதிக்கு ஈடாக சீனா பணம் தருமா… அல்லது சீனாவுக்கு நிறைய கடன் கொடுத்திருப்பதால் அதில் கழித்துவிடுமா என்பது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. அதேசமயம், உயிரியல் பூங்காக்களுக்கு எனச் சொல்லப்பட்டாலும், இத்தனை குரங்குகள் சீனாவுக்கு எதற்கு? ஒருவேளை குரங்குகளை ஆபத்துமிக்க ஆராய்ச்சிகளில் சீனா பயன்படுத்தலாம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வானர சேனைக்கே ஆபத்தா!
கடந்த 2017-ஆம் ஆண்டு யோகி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரையிலான ஆறு ஆண்டுகளில் 183 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதிலும் முஸ்லிம்களே அதிகம் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் தாதாவாக இருந்து அரசியலுக்கு வந்த அதிக் அகமது, பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பாலை சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தார். இதில் அவர் நீதிமன்றத்தில் சரண்டரான நிலையில் அதிக் அகமதுவின் மகன் ஆசாத் உள்பட இருவர் ஜான்சியில் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மறுநாள் ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரஃபும் போலீஸ் காவலில் இருக்கும்போதே முகம்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர், போலி என்கவுன்டர், மூலமாக உண்மையான பிரச்சனையை பா.ஜ.க. அரசு மறைக்க நினைக்கிறது. நீதிமன்ற விசாரணையில் பா.ஜ.க. அரசுக்கு நம்பிக்கை இல்லை என விமர்சனம் செய்துள்ளனர். காட்டு தர்பார்ங்கிறது இதுதானோ!
உலகின் வெப்பநிலை அதிகரித்துவரும் சூழலில், 2070-க்குள் ஒட்டுமொத்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடும் சதவிகிதத்தை 0-ஆக மாற்ற இந்தியா முடிவெடுத்துள்ளது. அதேபோல தமிழகமும் இந்திய அரசின் முயற்சிக்குத் துணையாக 2070-க்குள் கார்பன்-டைஆக்ஸைடு வெளியீட்டை 0 சதவிகிதமாகக் குறைக்கத் திட்ட மிட்டுவருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழகத்தின் 11 சுற்றுலாத்தளங்களை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாத இடங்களாக மாற்றும் சோதனை முயற்சியை தமிழகம் மேற்கொண்டுள்ளது. குற்றாலம், கோடியக்கரை, முத்துப்பேட்டை, கொடைக்கானல், பிச்சாவரம், ராமேஸ்வரம், ஏற்காடு, ஊட்டி, ஒகேனக் கல், பழவேற்காடு, திருச்செந்தூர் ஆகியவையே அந்த இடங்களாகும். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுதல் துறை அமைச்சரான சிவ வி.மெய்யநாதன், “"இந்த இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தப் படாது. இங்குள்ள அரசு கட்டடங்கள், தனியார் வியாபார மையங்களில் சூரிய ஆற்றல் பயன்படுத் தப்படும். இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக் கப்படும். இதற்காக ரூ 10 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!
கர்நாடகத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, அம்மாநில முதல்வர் பொம்மை தேர்தலை மனதில்கொண்டு முஸ்லிம்களுக்கு அதுவரை வழங்கப்பட்டுவந்த 4% இடஒதுக்கீட்டை ரத்துசெய்தார். மேலும், அதனை ஒக்கலிகர், லிங்காயத்துகளுக்கு தலா 2 சதவிகிதமாகப் பிரித்தும் கொடுத்தார். இதனையடுத்து கர்நாடக முஸ்லிம் சமூகத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அவர்களுக் காக மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், துஷாந்த் தவே ஆகியோர் ஆஜராக, “இட ஒதுக்கீடு தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தாமல், முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான எந்தத் தரவுகளும் மாநில அரசிடம் இல்லையென” வாதிட்டனர். இதையடுத்து கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். வாதங்கள் அனைத்தையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா, “இட ஒதுக்கீட்டை எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் ரத்துசெய்தது தவறு” என்றதுடன், இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை அரசு உத்தரவின் அடிப்படையில் எந்தத் பணிநியமனமும் வழங்கக்கூடாதென உத்தரவிட்டுள்ளனர். கொடுக்கிறதுக்கும் புடுங்கிறதுக்கும் அதென்ன லாலிபாப்பா!
-நாடோடி