பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை துருக்கியை ஒரு குலுக்கு குலுக்கியது நிலநடுக்கம். கிட்டத்தட்ட துருக்கியில் மட்டும் 50,000 உயிர்களைச் சாப்பிட்ட நிலநடுக்கம், ஹாட்டே மாகாணத்தைச் சேர்ந்த யாஸ்மினை வெகுவாகப் பாதித்தது. யாஸ்மினின் கணவரும் இரு குழந்தைகளும் அந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்துபோயினர். இரண்டுமாத கைக்குழந்தை வெடின் என்னவானாள் என்பதே தெரியவில்லை.

news

சில நாட்களுக்குப் பின் கட்டட இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டது என்பதும், அது அதானா பகுதியைச் சேர்ந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது என்பதும் யாஸ்மினுக்குத் தெரியவந்தது. அது தன் குழந்தையாய் இருக்குமோ எனும் நப்பாசையில் அதானாவுக்குச் சென்றார். மீட்கப்பட்ட குழந்தை உடல்நலம் தேறிய நிலையில், அதனை யாரும் உடைமை கோரி வராததால் அங்காராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அதானாவில் யாஸ்மினின் கதையைக் கேட்ட மருத்துவர்கள் விவரங்களை உயரதிகாரிகளுக்குச் சொல்ல, உண்மையிலே யாஸ்மின், வெடினின் தாய்தானா என்பதை அறிய மரபணுச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உண்மை உறுதியாக, அமைச்சரே நேரில் வந்து தாய் யாஸ்மினிடம் அவரது குழந்தையை ஒப்படைத்திருக்கிறார். நிலநடுக்கத்தில் பிரிந்த தாயும் குழந்தையும் ஒன்றுசேர 54 நாட்களாகியிருக்கிறது. மனதை உருக்கும் கதைதான்!

மீண்டும் ஒருமுறை பா.ஜ.க.வினரின் தில்லுமுல்லுகளைத் தோலுரித்திருக்கிறது "ஆல்ட் நியூஸ்.காம்.' ஒரு செய்தி உண்மை யானதா, போலியா என்பதைக் கண்டறிவதற் கான முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்று ஆல்ட் நியூஸ். ஒரே ஐ.பி. அட்ரஸைப் பயன்படுத்தி பா.ஜ.க.வினர் 34 போலி இணைய தளங்களை நடத்தியிருப்பதை அந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதில் ஐ.பி. என்பது (Internet Protocol) என்பதைக் குறிக்கும். "பிர் ஏக் பார் மோடி சர்க்கார்.காம்' (மீண்டும் ஒரு முறை மோடி சர்க்கார்.காம்) என்ற இணையதளம் குறித்து ஆல்ட் நியூஸ் செய்தி நிறுவனத்தின் அபிஷேக் என்பவர் ஆராய்ச்சி களை மேற்கொண்டார். அதில், இந்த ஒரே முகவரியை வைத்துக்கொண்டு 34 இணைய தளங்களை நடத்தியது வெளிவந்துள்ளது. ஜார்க்கண்ட் 2019.காம், கரகரகுபார்.காம், ஒளிரட்டும் புதுவை.காம், வளர்ச்சிப் பாதையில் தமிழகம்.காம் என பல்வேறு பெயர்களில் இவை இயங்கிவந்துள்ளன. பலசமயங்களில் தங்க ளுக்கு ஆகாத பிறரைப் பற்றி அவதூறு பரப்பும் களங்களாகவும் இந்த வலைத்தளங்கள் திகழ்ந்துள்ளன. இந்த உண்மை அம்பலமான நிலையில் தற்போது 34 இணையதளங்களில் பல முடக்கப்பட்டுள்ளன. ஒரே ஐ.பி. ஊரெல்லாம் வதந்தி!

Advertisment

முன்பெல்லாம் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட் டும். அதற்கேற்ப தொலைபேசிதான் சகலமுமாக இருந்தது. அதன் குடுமியும் ஆளும்கட்சியின் கையிலிருந்தது. இப்போதெல்லாம் திறன் பேசிதான் கோலோச்சுகிறது. இதனை ஒட்டுக்கேட்க உளவு மென்பொருள் தேவை. அப்படி இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றிடம் விலைபேசி வாங்கப்பட்ட பெகாசஸ், இந்திய அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியது. அதனை சமாளித்த கையோடு புதிய வேவு மென்பொருளை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிகிறது. "பைனான்சியல் டைம்ஸ்' சொல்லும் தகவலின்படி, இந்திய அரசு ரூ.1000 கோடி செலவில் உளவு மென்பொருளை வாங்கத் திட்டமிட்டு, நான்கு நிறுவனங்களை பரிசீலித்து வருகிறது. இன்டெல்லக்சா, பிரிடேட்டர், குவாட்ரீம், காக்நைட் எனும் நான்கு வெவ்வேறு நிறுவனங்களும் இஸ்ரேலைச் சேர்ந்தவை. நான்கில் எது பெஸ்ட் என கடைசிக்கட்ட ஆலோசனையில் இந்திய அரசு இருப்பதாக அப்பத்திரிகை தெரிவிக்கிறது. ஒட்டுக் கேட்குறதுக்கு 1000 கோடியா!

news

Advertisment

ர்நாடக மாவட்டம் பேளூர், சென்னகேசவா கோவில், ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனால் சோழருக்கு எதிரான வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது என்பது வரலாறு. மேலும் இக்கோவிலில் ஏப்ரல் மாதத்தில் ரத உற்சவத்தின்போது நடைபெறும் திருவிழாவில் மௌலவி ஒருவர் கலந்துகொண்டு குர்ரானிலிருந்து சில பகுதிகளை வாசிப்பார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு அடையாளமாகத் திகழும் இந்த நடைமுறை அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இந்த நடைமுறையை கர்நாடக பா.ஜ.க.வினர் உடைத்திருக்கிறார்கள். இந்த வருட சென்னகேசவா ரதோத்சவ விழாவில், மௌலவி சஜ்ஜாத் பாஷா கத்ரி சாஹேப்புக்கு கோவில் கமிட்டியினர் பணமும் தானியங்கள் வழங்கப்பட்டதும் நன்றி அறிவிப்பு மட்டுமே செய்தார். வழக்கம்போல, குர்ரானிலிருந்து சில பகுதிகளை வாசிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க.வினர், “"இதெல்லாம் பழைய நடைமுறை. அது தவிர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி'’என்கின்றனர். “இந்த சடங்கைத் தவிர்த்ததன் மூலம், இந்து-முஸ்லிம் உறவையும் தவிர்ப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள் பா.ஜ.க.வினர்” என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. அரசியல்வாதிக்கும் ஊர் ரெண்டுபட்டாத்தான் கொண்டாட்டம்!

-நாடோடி