உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் நாதுசிங். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த இவருக்கு ஒரு மகன், நான்கு மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்வித்து குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றினார் நாதுசிங். கையில் காசும் கொஞ்சம் தாராளமாகப் புழங்கியதால் நிறைவாகவே இருந்தார். என்ன… வயசு மட்டும்தான் கொஞ்சம் அவரைப் படுத்தியெடுத்தது. நாதுசிங்குக்கு இப்போது வயசு 85. ஒரு வருடத்துக்கு முன்னால் மனைவியும் இறந்துவிட தனிக்கட்டையானார்.
நான்கு மகள், ஒரு மகன் இருந்தும் யாரும் தந்தையைக் கவனித்துக்கொள்ள முன்வரவில்லை. சரி போகுது, என ஒரு முதியோர் இல்லத்தில் சென்று சேர்ந்துவிட்டார். முதியோர் இல்லத்தில் சேர்ந்து ஏழு மாதங்களான பின்பும் அவரை மகனோ, மகளோ பார்க்க வரவில்லை. விரக்தியின் உச்சத்துக்கே போன நாதுசிங், தனது வீடு... நிலம் உள்ளிட்ட 1.5 கோடி சொத்தை மாநில அரசுக்கு எழுதி வைத்துவிட்டார். தான் இறந்தபிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும்படி உயில் எழுதிவிட்டார். நாதுசிங் வேறென்ன செய்திருக்கமுடியும்?
இந்திய நாடாளு மன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு குழுக்கள் உண்டு. இந்தக் குழுக்களின் உறுப்பினர் களாக எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். இதற்கான அறிவிப்பை மக்களவை, மாநிலங்களவையின் செயலாளர்கள், அந்த அவைத்தலைவரின் ஒப்புதலுடன் அறிவிப்பார்கள். தற்போது மாநிலங்க ளவையின் தலைவராக துணை ஜனாதி பதி ஜகதீப் தன்கர் உள்ளார். சமீபத்தில் நியமிக்கப்பட்ட 20 மாநிலங்களவைக் குழுக்களில், ஜகதீப் தன்கரின் அலுவலக ஊழியர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்தவிதத்தில் 8 ஊழியர்கள் உறுப்பினர்களாக நியமன மாகியுள்ளனர். இதையறிந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நடை முறையை மீறிய இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இப்படி தன் அலுவலக ஊழியர்களை நிய மிப்பதன் மூலம் குழு நடவடிக்கை களைக் கண்காணிக்க துணை ஜனாதிபதி முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆளுநராக இருந்தபோது மாநில அரசைக் கவனித்து, மத்திய அரசுக்கு அறிக்கை தந்ததால், அதை கண்காணிக்க வேண்டிய அவசியமிருந்திருக்கலாம். நாடாளுமன்றத்தில், துணை ஜனா திபதிக்கு ஏன் இந்த வேலை என விமர்சனம் எழுந்துள்ளது. பழக்க தோஷம் மாறலையோ!
லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங் கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, பல்வேறு மேடைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பா.ஜ.க.வை விமர்சித்துப் பேசிவரு கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மேடையில் பேசிய ராகுல், “"அந்நிய மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற் படுத்தியதாக இந்திய அரசு குற்றம்சாட்டுகிறது. எனது நாட்டின் பெயரை நான் எப்போதும் சீர்குலைத்ததில்லை. அப்படி நான் எப்போதும் செய்யமாட்டேன். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்தியாவின் நற்பெயரை சீர்குலைப்பவர் யாரென்றால் நம் இந்தியப் பிரதமர்தான். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் எதுவும் நடைபெறவில்லையென அவர் கூறுவது வழக்கம். அப்படியானால் அந்தப் பத்தாண்டுகளில் இந்தியாவுக்காக பாடுபட்டவர்கள் பற்றி என்ன சொல்வது? அவர் களை பிரதமர் அவமதிக்கவில்லையா?'' என கேள்வியெழுப்பியுள்ளார். பா.ஜ.க.வினரோ ராகுலின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், கேம்பிரிட்ஜில் ராகுல் பேசும்போது, பாகிஸ்தானை தாயகமாகக் கொண்ட அப்பல்கலைக்கழக துணைவேந்தர் அருகில் நின்றதை வைத்து மட்டம் தட்டிப் பேசிவருகின்றனர். நெத்தியடிப் பேச்சு!
வங்கதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரோஹிங்கியா அகதிகளின் 2000 வீடுகள் சாம்பலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான மியான்மரில் 2017-ல் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அடைக்கலம் தேடிவந்தனர். இவர்கள் காக்ஸ் பஜார் மாவட்டத்தின் பாலுகாலி முகாமில் எளிய மூங்கில் குடிசைகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மார்ச் 6-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல குடிசைகளுக்கும் தீ பரவியது. கிட்டத்தட்ட 2000 குடிசைகள் தீ விபத்தில் சாம்பலாகின. எனினும், தீ விபத்து ஏற்பட்டதுமே அங்கு வசித்தவர்கள் குழந்தைகளுடன் குடிசையைவிட்டு அகன்றதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. கிட்டத்தட்ட 12,000 பேர் தற்காலிகமாக பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் 35 மசூதிகளும், 21 கல்வி மையங்களும் சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே இந்த அகதிகளை திரும்பவும் ரோஹிங்கியாவுக்கு அனுப்ப வங்க அரசு முயற்சித்து வந்தது. அந்த முயற்சி தோல்வியடைந்தது. பட்ட காலிலே படும்கிறது இதுதானோ!