பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள நகரான பேஷ்வரில் வெடித்த குண்டு உலகையே அதிரச் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட 100 உயிர்களைப் பறித்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை காயங்களுடன் போராட விட்டிருக்கிறது குண்டு வெடிப்பு. இந்தக் குண்டுவெடிப்புக்கு ஒரு தலிபான் தற்கொலைப் படை வீரனே காரணம் எனக் கூறப்படுகிறது. ஜனவரி 30-ஆம் தேதி மதியம் தொழுகைக்கு வந்தவர்கள் நடுவே, குண்டை மறைத்துவைத்துக்கொண்டு தொழுகையின்போது வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்கு பாகிஸ் தானிலுள்ள தலிபான் கிளையான தெஹ்ரிக் -இ -தாலிபான் காரணமென கண்டறியப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் தளபதியான உமர் காலித் குர்சானி யை ஆகஸ்டில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் காலிசெய்தது. அதற்கான பதிலடியாகத் தான் இந்த தற்கொலைக் குண்டுவெடிப்பு எனச் சொல்லப்படுகிறது. காவலர்கள், பாது காப்புப் படை வீரர்கள் வசிக்கும் பகுதி யிலுள்ள மசூதி என்பதால் இதில் பலியானவர் கள் பலரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு பவர்களே. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரிப், "பாகிஸ்தானை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவர்களைத் தாக்குவதன் மூலம் பயத்தை உண்டுபண்ண தீவிரவாதிகள் விரும்புகின்றனர். அது நடக்காது'’என தெரிவித்துள்ளார். தொழுகையை அழுகையா மாத்திட்டாங்களே!
கடலில் மீன்பிடித் தொழில் செய்வது எளிதல்ல. ஒருபுறம் கடுமையான பருவநிலை கள் உயிராபத்தை விளைவிக்கும். இன்னொரு பக்கம் சர்வதேச எல்லையைக் கடந்து செல்லும்போது வெளிநாட்டு ராணுவம் சிறைப் பிடிக்கும் அபாயம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ்குமாருக்கு நேர்ந்த அபாயம் இந்த இரண்டும் அல்ல. சவுதி அரேபியாவின் கத்திப் பகுதியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களான பிரிட்டோ, செபாஸ்டின், கபிலன், துரைராஜ் ஆகியோருடன் ஜனவரி 21-ஆம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றார் ராஜேஷ்குமார். இவர்கள் கலாம் ஹஸ்ஸான் என்பவரின் விசைப்படகை இரவல் வாங்கிக் கொண்டு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடித்துக்கொண் டிருந்தபோது, கடல்கொள்ளையர்கள் அவர்களை நெருங்கி துப்பாக்கியால் சுட்டனர். அதிலிருந்து தப்பிக்க மீனவர்கள் படகுக்குள் ஒளிந்துகொண்டு தப்பிக்கமுயன்றனர். பின் படகில் நுழைந்து கையில் கிடைத்த பொருட் களை திருடிச்சென்றனர் கொள்ளையர். இதில் ராஜேஷ்குமாருக்கு கண்ணில் குண்டடி பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் தங்கி அந்நாட்டுக்காக மீன்பிடித்துத் தரும் தமிழக, கேரள மீனவர்கள் 6000 பேர் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும்வரை மீன் பிடிக்கமாட்டோம் என வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். வழி பிறக்கட்டும் வலி தீரட்டும்!
பெரிய தில்லாலங்கடி வேலையா இருக்கேனு கேட்டிருப்பீங்க! பார்த்திருக்கீங் களா? மத்தியப்பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிங்க் தேவாங்கன். இவர் 36 ஆண்டுகள் சௌத் ஈஸ்டர்ன் கோல் பீல்டில் வேலைபார்த்து இறந்துவிட்டார். வங்கியிலிருந்த பணங்களை மனைவி பெற்றுக்கொள்ள, ஓய்வூதியத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என தாயுடன் தகராறு செய்தார் நரசிங்கின் மகன். இரண்டு பேரும் தகராறு செய்ததில்தான் நரசிங்கின் குட்டு வெளிப்பட்டிருக்கிறது. நரசிங்கும், ததாய் ராமும் நண்பர்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனது பதிவு அட்டையை புதுப்பிக்கச் சொல்லி நண்பர் நர்சிங்கிடம் தந்திருக்கிறார் ததாய். அத்தோடு அதை மறந்துவிட்டார். சில மாதங்களுக்குப் பின் ததாய்க்கு வேலைவாய்ப்பு வர, அதை மறைத்து ததாய் ராமின் பெயரில் ஆவணங்கள் தயார்செய்து கொடுத்து பணியில் சேர்ந்திருக் கிறார் நர்சிங்க். இந்த விஷயமே 75 வயதான ததாய் ராமுக்கு இப்போதுதான் தெரியவந்திருக்கிறது. அம்மாவும் மகனும் அடித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால், 36 வருஷம் வேறொருத்தர் வேலையைப் பார்த்து சம்பளம் வாங்கிய நரசிங் கின் மோசடி வெளியில் வராமலே போயிருக்கும். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!”
இதெல்லாம் கலிகாலம் என்றால் அவர் பழைய தலைமுறை ஆள்! கணினி காலம், சமூக ஊடகங்களின் காலம் என்றால் அவர் புதிய தலைமுறை ஆள்! இப்போது காவல் துறையும் புதிய தலைமுறையினரின் நடைமுறைகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டுவருகிறது. மும்பை போலீசார், ட்விட்டரில் மும்பை மக்கள் தொடர்புகொள்வதற்காக ஒரு ட்விட்டர் கணக்கை உருவாக்கியுள்ளது. அப்பக்கத்தில், “பிரச்சினையை எதிர்கொள்ள நேரும்போது உடனடியாக 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்’என பதிவிட்டிருந்தது. இதைப் பார்த்த கான் என்பவர், சந்திரனில் விண்வெளி உடையுடன் நிற்பதுபோல படம்போட்டு, "நான் இங்கு சிக்கியுள்ளேன்' என்று பதிவிட்டார். இதற்கு மும்பை போலீஸார், “"இது எங்கள் எல்லை யில் வராது. ஆனாலும், சந்திரனுக்கும் நாங்கள் வருவோம் என்று நம்பியதற்கு நன்றி!'” என சாமர்த் தியமாகப் பதிவிட்ட னர். "ஜோக்"கா டீல் பண்ணியிருக்காங் களே மேட்டரை!
-நாடோடி