தென்னமெரிக்க நாடான பிரேசில் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ தோல்வியுற்று, லூலா டா சில்வா வெற்றிபெற்றதற்கு எதிராக, முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கியது உலக நாடுகளை கவலையுறச் செய்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவில் 2020-ல் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை யடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தை ட்ரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டது உலக அளவில் பேசுபொருளானது. அதே வரலாறு பிரேசிலில் திரும்பவும் நடந்துள்ளது. போலீஸ் காவலையும் மீறி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றத்தில் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். காவலர்களுக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் மோதல் நிகழ்ந்ததோடு, அதிபருக்கு எதி ராக கோஷங்களும் எழுந்தன. இதற்கிடையில் ராணுவம்... பெல்லட் குண்டுகள், பெப்பர் ஸ்ப்ரே, கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்ஸ்னோரா மறுத்துள்ளார். தோல்வியின் கசப்பையும் ஏத்துக்கத்தான் வேணும்!
தைவானைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் எவர்க்ரீன் மரைன் கார்ப்பரேஷன். இந்நிறுவனம் 150 கப்பல்களுடன் சரக்குகளை உலகெங்கும் கொண்டுசேர்க்கும் பணியை மேற்கொண்டுவருகிறது. இதற்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்துள்ளது. இந்நிறுவனம் வழக்கமாக தனது ஊழியர்களுக்கு சிறப்பான போனஸ் வழங்கும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போனஸை அறிவித்தது. குறைந்தபட்சமாக தனது ஊழியர்களுக்கு 45 மாத ஊதியத்தையும், சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 52 மாத ஊதியத்தையும் வழங்கி ஊக்குவித்தது. அந்த வகையில் கடைநிலை ஊழியருக்கே ரூ.70 லட்சம் வரை கிடைத்திருக்கிறதாம். மேல்மட்ட ஊழியர்களுக்கோ அது சில கோடி வரை கிடைத்திருக்கிறதாம். “உக்ரைன் போரால் பல நிறுவனங்களின் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை சீரானால் கப்பல் போக்குவரத்து அதிகரிக்கும். அப்போது போனஸ் இன்னும் அதிகமாக இருக்கும்” என எவர்க்ரீன் மரைன் தெரிவித்துள்ளதாம். கம்பெனியில கப்பல் தள்ளுற வேலை இருந்தாலும் சொல்லுங்க சார்!
நாடு என்ற பிரிவினைக் கோடு உருவாகும்போதிலிருந்தே அகதிகளும் உருவாக ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியா தற்போது எதிர்கொள்ளும் அகதிகள் பிரச்சனை குகி-சின் பழங் குடிகள் பிரச்சினையாகும். வங்கதேசத் திலும், மியான்மரிலும் குகி-சின் மக்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். மியான்மரில் பெரும்பான்மை மக்க ளான பாமர்கள் இவர்களை விரட்டுவ தாலும், வங்க தேசத்தில் குகி-சின் மக்கள் தனி மாகாண கோரிக்கையுடன் ஆயுத மேந்திப் போராடுவதாலும் இந்த இரு நாடுகளிலும் இருந்து இவர்கள் அருகிலுள்ள மிசோரத்தில் தஞ்சம் புகுகின்றனர். ஏற்கெனவே மியான் மரில் ஏற்பட்ட நெருக்கடியால் இந்தியாவில் 40,000 குகி-சின் மக்கள் அகதிகளாக தஞ்சம்புகுந்துள்ள நிலை யில், வங்கதேச பிரச்சனையால் மக்கள் அடைக்கலம் நாடிவருவது இந்தியா வை கவலையடையச் செய்துள்ளது. மிசோரத்தில் 156 முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப் பிரச்சனைக்கு மனிதாபிமான அடிப் படையில் உதவிசெய்தபோதும், இரு நாடுகளும் அரசியல் தீர்வுகாணும்படி இந்நாடுகளின் தலைவர்களை இந்தியா வலியுறுத்தி வருகிறது. அகதிகளை உருவாக்காத அரசியல் வளரட்டும்!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஆயிரம் அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், அரங்கு எண் 286 பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது. இது எந்தப் பதிப்பகத்துக்கும் சொந்தமான அரங்கு அல்ல. மாறாக, புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களிடமிருந்து புத்தகங்களைத் தானமாகப் பெற்று சிறைகளில் உள்ள நூலகத்துக்கு தானமாக அனுப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கு. கண்காட்சி தொடங்கி ஐந்து நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இதுவரை 1000 புத்தகங்கள் பார்வையாளர்களால் வாங்கி தானமாக அளிக்கப்பட்டுள்ளன. தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஜ் பூஜாரியின் முன்முயற்சியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சிறையின் மூடிய கதவுகளுக்கு அப்பால் வெளியுலகைக் காட்டும் ஒரு ஜன்னலாக புத்தகங்கள் அமைய முடியுமென்பதால், நீங்களும்கூட சிறைவாசிகளுக்கு ஒரு ஜன்னலைத் திறந்துவைக்க முடியும்! எத்தனை ஜன்னல்களை உங்களால் திறக்கமுடியும்?
-நாடோடி