உருப்படாத கழுதைனு திட்டப் போறீங் களா?…அதுக்கு முன்னால கொஞ்சம் யோசிங்க. பேரரசி கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்து தன் அழகைப் பாதுகாத்ததாக ஒரு கதை உண்டு. ஆட்டுப் பால், மாட்டுப் பாலையெல்லாம்விட உச்ச விலையில் விற்கிறது கழுதைப் பால். சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் கழுதைப் பால் ரூ.2000. குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுத்தால் பல்வேறு நோய்களும் தீருமென இந்தியாவில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
அதன் அறிவியல் உண்மை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறது. கழுதைப் பால் சர்வரோக சஞ்சீவினியென நம்ப கிராமங்களில் ஆளிருக்கிறார்கள். இதனால் பால் கறக்கும் கழுதைகளை ஊர்விட்டு ஊர் கொண்டு சென்று, அந்த ஊர்க் காரர்கள் முன்னாலேயே கட்டிக் கறந்து 25 மி.லி. பால் 50 ரூபாய்க்கு விற்கிறார்கள். சலவைத் தொழில், மலைப்பகுதிகளில் சுமை யேற்றப் பயன்படுத்தப்படுவது குறைந்துபோனதால், கழுதை களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள் ளது. அதிலும் பால் சுரக்கும் கழுதைகள் இன்னும் குறைவு. அதோடு பாரம்பரிய நம்பிக் கையும் சேர்ந்து கொள்ள... கழுதைப் பாலுக்கு இவ்வளவு மவுசாம்.ஆவின் பால் வாங்கவே பட்ஜெட் போதலை!
தஞ்சாவூர் மாவட் டத்தில் இடையிலேயே படிப்பை நிறுத்தும் மாணவர் களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் கணக்கிட்ட போது 1700 பேர் நிறுத்தியிருந்தது தெரியவந்தது. அதில் 80 பேர் மேலஉளூர் கிராமத்தில் நின்றிருப்பது தெரியவர, என்னவென விசாரித்திருக்கிறார். மேலஉளூர் அருகில் நரிக்குறவ குடியிருப்பு இருந்துள்ளது. அங்கிருந்து படிக்கவந்த குழந்தைகள், பிற சமூகக் குழந்தைகளால் அவர்களது பேச்சு, பழக்க வழக்கங்கள் கிண்டலுக்கு உள்ளானதால் படிப்பை நிறுத்தியிருக்கின்றனர். இதையடுத்து அவர்கள் 80 பேர் மட்டும் படிக்க வசதியாக ஒரு தற்காலிக ஆரம்பப் பள்ளியை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான பள்ளியையும், நரிக்குறவர் சமூகத்தையும் அதிகாரிகள் குழு சென்று பார்வையிட்டுள்ளது. இதனால் நரிக்குறவ மாணவர்கள் மட்டும் பயிலும்படி தனிப்பள்ளி விரைவில் அப்பகுதியில் தொடங்கு மெனத் தெரிகிறது. நல்ல காரியம்தான்!
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது பாகிஸ்தான். ஓய்வு பெற்றவர்களுக் கான பணிக்கொடையைக் கூட வழங்க முடியாத நிலை. அரசுப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் தர தடுமாறும் நிலையில் தத்த ளித்துவருகிறது. அத்தோடு இந்தப் பொருளாதார நெருக்கடியால் தேவைக்கேற்ப கேஸை நிரப்பும் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய கேஸ் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துள்ள தால், சிலிண்டர் விற்பனை செய்பவர்கள் அதன் விநியோகத்தைக் குறைத்துள்ளனர். இதனால் கைபர் பக்துங்வா மாகாணத்தில், எரிவாயுவை பிளாஸ்டிக் பைகளில் அடைத்துக் கொடுக்கின்ற னர். சிறிய பைகளில் கேஸை நிரப்பி, இறுக்கமாக வால்வால் அடைத்துக் கொடுக்க நேரமும் அதிக மாக ஆகிறது. இத்தகைய பைகளை எடுத்துச் சென்று அதிலிருந்து மின்சாரத்தில் இயங்கக்கூடிய உறிஞ்சு குழாயைப் பயன்படுத்தி அதனை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். மக்கள் பிளாஸ்டிக் பையில் கொண்டுசெல்லும் எரிவாயு கசிந்தாலோ, தீவிரவாதி களின் கையில் இத்தகைய பை கிடைத்தாலோ அத னால் பெரிய ஆபத்துகள் ஏற்படுமென பலரும் எச்ச ரித்துவருகின்றனர். கேரி பையில சமையல் கேஸா?
ஆந்திராவின் கோதாவரி பகுதி சேவல் சண் டைக்குப் பெயர் பெற்றது. மகர சங்கராந்தி அன்று ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும். வெறுமனே சேவல் சண்டை என்பதோடு மட்டுமல்லாமல், போட்டி நடக்கும் இடங்களில் பந்தயமும் பட்டையைக் கிளப்பும். ஆனால் இந்தச் சண்டைக்கு காவல்துறையின் தடையும் கெடுபிடியும் அதிகம். பார்த்தார்கள், போட்டி நடத்து பவர்கள், தொழில்நுட் பத்தின் உதவியோடு வலைத்தளத்தை ரக சியமாகத் தொடங்கி, அதில் பந்தயத் தொகையைப் பெறுவ தோடு சேவல் சண் டையையும் ஒளிபரப் பத் திட்டமிட்டு வருகிறார்கள். இதனால் போட்டி நடக்கும் இடங்களில் மக்கள் கூடவேண்டியதில்லை. அது போலீஸின் கவனத்தை ஈர்க்கவும் தேவை யில்லை. சேவலுக்குச் சொந்தக்காரர்கள் மட்டும் பங்குபெற, மூடிய அரங்கில் நடைபெற்றால் போலீஸ் கண்டுபிடிப்பது சிரமம். ஆன்லைனில் சேவல் சண் டையை ஒளிபரப்பி, இந்தியா முழுக்க உள்ளவர் களும் பார்க்க, பந்த யம் கட்டுவதற்கான வசதியை ஏற்பாடு செய்தால் கல்லாவும் கட்டலாம், காவல் துறை கண்ணில் மண் ணையும் தூவலாம் என் பது திட்டமாம். அப்ப ஆன்லைன் "ஆடு களம்' ரெடியாகுது!
-நாடோடி