சாதனை செய்ய இப்படியும் ஒரு வழியிருக்கிறது எனக் காட்டியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த சிந்துமோனிகா. கடந்த 7 மாதத்தில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கியிருக்கிறார் இவர்.
எதிர்பாராமல் பிரசவத்தில் தாய் இறந்து விட்டாலோ, சிலசமயம் குழந்தை பெற்றபின்பு தாயின் உடல்நலக் காரணங்களாலோ பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காது. அத்தகைய குழந்தை களின் அவஸ்தை சொல்லிமாளாது. இதற்குத் தீர்வாக 2014-ல் "தாய்ப்பால் வங்கித் திட்டம்' நடைமுறைக்கு வந்தது. நன்றாகத் தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தைக்குப் போக கூடுதலாகச் சுரக்கும் பாலை இந்த வங்கிக்குத் தானம் செய்யலாம். பொறியியல் பட்டதாரியான சிந்து, கடந்த 7 மாதங்களில் 50,000 மி.லி. தாய்ப்பாலைச் சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியிருக்கிறார். இவரது சாதனை ஆசிய அளவிலான சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. வெல்டன் சிந்துமோனிகா!
டி-20 உலகக் கோப்பை போட்டியில் தகுதிச் சுற்றில் கோட்டைவிட்டு இலங்கை வெளியேற, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா மட்டும் உள்ளே போயிருக்கிறார்… ஆஸ்திரேலிய சிறைக்குள். நமீபியாவுடனான ஆட்டத்தில் காயமடைந்த குண திலகா, டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான இளம்பெண்ணுடன் சில நாட்களாகப் பழகிவந்தார். இந்நிலையில் சிட்னியில் ரோஸ் பே பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு அந்தப் பெண்ணைச் சந்திக்க அழைத்தார். அங்கு வந்த அவரை குணதிலகா பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியதாக அந்த இளம்பெண் ஆஸ்திரேலிய போலீஸில் புகாரளித்துள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலிய போலீஸ் குணதிலகாவை விசாரணை செய்து, புகாருக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்துள்ளது. மைதானத்தைவிட்டு எல்லா இடத்திலயும் ஆட்டம் போடுங்க!
அறிவியல் இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஆய்வகத்திலேயே ரத்தச் சிவப்பணுக்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து. அதாவது இது ஆய்வகத்திலேயே ரத்தத்தை தயாரிப் பதற்குச் சமம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தலைமை ஆய்வாளரான செட்ரிக் கெவார்ட், “"உலகிலேயே முதல்முறையாக ஆய்வகத்தில் வளர்த்தெடுத்த சிவப்பணுக்களை செலுத்தியுள்ளோம். இந்த சிவப்பணுக்கள் மனித உடலி-ருந்து பெறும் சிவப்பணுக்களைவிட கூடுதல் நாட்கள் நீடிக்கும். இதனால் ரத்தத்தை அடிக்கடி மாற்றவேண்டிய நோயுள்ளவர்களுக்கு இந்த ரத்தம் அளித்தால் ரத்தம் ஏற்றவேண்டிய எண்ணிக்கை குறையும். சிக்கில் செல், அரிய ரத்த வகையுடையவர்களுக்கு இந்தக் கண்டு பிடிப்பு ஒரு வரப்பிரசாதம்''’என்கிறார். முதல்கட்டமாக இரண்டே நபர்களுக்கு மட்டும் செலுத்தி, அதன் விளைவு களை ஆராய்ச்சி செய்துவருகின்றனர் ஆய்வாளர்கள். செயற்கை ரத்தம் பராக் பராக்!
தமிழ்நாட்டில் 9 இடங்களில் செயல்பட்டு வந்த போலி வங்கிகளைக் கண்டுபிடித்து அதை நடத்திய வரை, சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்தவரான சந்திரபோஸ், இங்கிலாந்தில் எம்.பி.ஏ. முடித்தவர். இவர் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் வங்கிகளை நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இது யாரின் கவனத் துக்கும் வராமல் இருந்துள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி இவரை கூட்டுறவு வங்கி நடத்த அனுமதித்ததுபோல் போலிச் சான்றிதழ் தயார்செய்து இந்த வங்கிகளை நடத்தியுள்ளார். தவிரவும் இந்த வங்கிகளில் 2 லட்சம் முதல் 7 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு பணியாளர்களை வேலைக்கு நியமித்திருக்கிறார். டெபிட் கார்டுகள், பாஸ்புக்குகள் உட்பட வங்கிக்குத் தேவையான அத்தனை யையும் அச்சடித்து, அதேசமயம், வாடிக்கை யாளர்களிடமிருந்து பெற்ற பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் முதலீடு செய்திருந்திருக்கிறார் இவர். சாயம் வெளுத்துப்போச்சு!
உலகின் மிக அழகான 10 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் தீபிகா படுகோனே. உலகின் முன்னணி பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவரான ஜூலியன் டி சில்வா, ஒரு அழகிகள் பட்டியலைத் தயாரித்தார். அதைக் கணிப்பதற்காக, ஜூலியன் டி சில்வா கிரேக்க முறையான "கோல்டன் ரேஷியோ ஆப் பியூட்டி' என்னும் முறையைப் பயன்டுத்தியுள்ளார். இந்தப் போட்டியில் ஜோடி காமர், ஜெண்டாயா, பெல்லா ஹாடித், தீபிகா படுகோனே, பியான்ஸ், அரியானா கிராண்டே, ஜோர்டான் டன், டெய்லர் ஸ்விப்ட், ஹோயோன் ஜங் ஆகியோர் முதல் பத்து இடங்களைப் பிடித்தனர். இந்த பத்துபேரில் தீபிகா 91.22 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடம் பிடித்தார். இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகை தீபிகா என்பது குறிப்பிடத் தக்கது. போதாக்குறைக்கு கூகுள் தேடு பொறியில், மிக அதிக அளவில் தேடப்பட்ட இந்திய நடிகைகளின் பட்டியலில் எட்டாவது இடத்தையும் தீபிகா பிடித்துள்ளார். பட்டியல்லயும் டாப்... பாலிவுட்லயும் டாப்!
-நாடோடி