திருநங்கைகள் என்றாலே பிச்சையெடுப் பவர்களாகவும், பாலியல் தொழில் செய் பவர்களாகவுமே பலரின் சிந்தனை செல்லும். ஆனால் உரிய வாய்ப்பும் பயிற்சியும் வழங்கினால் அவர்களும், சமூகத்தில் மற்ற மனிதர்களைப்போல் வேலை, தொழில் செய்து பிழைக்கக்கூடியவர்கள்தான். "அரவாணி ஆர்ட் புராஜெக்ட்' என்ற அமைப்பு திருநங்கைகளுக்கு சுவரோவியப் பயிற்சி வழங்கி, அதை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறது.
இதில் பயிற்சிபெற்ற காஞ்சனா வெங்கடேசன், “"இந்த அமைப்புடன் இணைந்து 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இங்கு பயிற்சி பெற்றவர்கள் திருவான்மியூர் ரயில் நிலையம், கண்ணகி நகர் குடியிருப்பு, பள்ளிகள், தமிழ்நாடு தாண்டி டெல்லி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் வரை ஓவியம் வரைந்துள்ளார்கள். துவக்கம் என்ற அமைப்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சுவரோவியம் வரையும் வாய்ப்பை வழங்கியுள்ளது''’என்கிறார் உற்சாகமாக. புதிய பாதைதான்!
மருத்துவ அறிவியலாளர் களின் பார்வை சமீபகாலமாகவே நீண்ட ஆயுள் குறித்துத் திரும்பி யுள்ளது. ஒருவருக்கு வய தாவதற்கு ஸோம்பி செல்கள் எனப்படும் செல்களே காரணம். இவற்றை மருந்துகளைப் பயன் படுத்தி அகற்றும்போது, அவர் 120 முதல் 150 வயது வரை தளர்ச்சி யின்றி வாழ முடியு மென பிரிட்டிஷ் அறிவியலாளரான டாக்டர் ஆண்ட்ரூ ஸ்டீல் நம்புகிறார். மற்றொருபுறம் பனிப்பிரதேச விலங்குகள், உக்கிரமான பனிக்காலங்களில் பல மாதங்களை ஓரிரவு போல உறங்கிக் கழிப்பதின் மீது அறிவியலாளர்களின் பார்வை குவிந்துள்ளது. அந்த ரகசியம் வெளிப்படும்போது நீண்ட ஆயுளுக்கு மருந்து கிடைக்கலாம் என நினைக்கிறார்கள். இவை தவிர வேறு பல ஆய்வுகளும் நடந்துவருகின்றன. இன்னும் பத்திருபது ஆண்டுகளில் நிச்சயம் வயதாகும் வேகத்தைக் குறைக்கும் மாத்திரைகள் வந்துவிடலாம். ஆனால் இந்த மாத்திரைகளின் விலை ஆரம்பகட்டத்தில் தாறுமாறாக இருக் கும். அதைச் சம்பாதிப்பதற்குள் நமக்கு வயதாகிவிடக்கூடாது! சாகாவரம் மெடிக்கல் ஷாப்புலே கிடைச்சுடுமா!
ஜி.டி.எல். இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் என்னும் தனியார் நிறுவனம் சென்னிமலை காவல் நிலையத்தில் ஒரு விநோதமான வழக்கைப் பதிவுசெய்துள்ளது. தமிழகம் முழுவதும் அந்நிறுவனத்தின் 600 மொபைல் டவர்கள் காணாமல் போயுள்ளதாம். அத்தனை பெரிய மொபைல் டவர்களை எப்படித் திருடிச் செல்லமுடியும்? கோவிட் காலகட்டத்தில் ஊரடங்கு காரண மாக, டவருக்கான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் படவில்லை. எனவே நீண்ட காலம் கவனிக்காம லேயே இருந்து விட்டார்கள். சில வாரங் களுக்குப் பின் டவரைப் பராமரிக்க வந்தபோது சென்னிமலையில் மொபைல் டவர் காணாமல் போயிருக்கிறது. இதையடுத்து மற்ற இடங்களையும் ஆராய்ந்ததில் தமிழகம் முழுக்க 600 டவர்கள் காணவில்லையாம். அவை காணாமல்போன இடத்திலுள்ள காவல்நிலையங்களில் புகார் தரப்பட்டுள்ளதாம். 600 மொபைல் டவர்களை சும்மா சில்லறைத் திருடர்கள் கழற்றி அபேஸ் பண்ணுவது சாத்தியமில்லை. யாரப்பா அந்த டவர்விழுங்கி மகாதேவன்?
கடலோரக் காவல் படை சப்-இன்ஸ்பெக்டரான காளிதாஸ், ராமேஸ்வரம் கடற்பகுதியில் தனது வழக்கமான ரோந்தை மேற்கொண்டபோது கோதண்டராமர் கோவிலருகே ஒரு இக்கட்டைச் சந்திக்க நேர்ந்தது. கடற்கரையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு முதிய தம்பதிகள் நினைவின்றிக் கிடந்தனர். தண்ணீருக்குள் ஆம்புலன்ஸைக் கொண்டு செல்ல முடியாத நிலையில், இந்திய கடலோரக் காவல்படையின் மிதவை மூலம் கரைக்குக் கொண்டுவர முயற்சி யெடுத்தார். போதிய உணவில்லாமல் மயங்கிக் கிடந்த அவர்களுக்கு க்ளுகோஸ் கொடுத்து நீர்ச்சத்து இழந்துவிடாமலும் பார்த்துக்கொண்டது காவல் படை. மீட்கப்பட்ட அந்தத் தம்பதி ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் முதியவருக்கு நினைவுதிரும்ப, அவர்கள் மன்னாரைச் சேர்ந்த சிவம், பரமேஸ்வரி எனத் தெரியவந்தது. “"சாப்பிட எதுவுமின்றி கடல் நீரைக் குடித்தோம், பசியில் நினைவிழந்தோம்''’ எனத் தெரிவித் திருக்கிறார். இருவரும் கூடுதல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இலங்கையின் பொருளாதாரச் சிக்கலால் அடைக்கலம் தேடி இந்தியா வந்திருக்கிறார்களாம். என்று விடியும் இலங்கைத் தமிழருக்கு?
ரேபான் குளிர் கண்ணாடி யைத் தெரியாதவர் கள் வெகு குறை வாகவே இருப்பார்கள். இந்த நிறுவனத்தைத் தொடங்கிய லியனார்டோ டெல் வெக்கியோ, இத்தாலி யின் இரண்டாவது பெரிய பணக்காரர். அவர் தனது 87 வயதில் முதுமை காரணமாக மரணமடைந்திருக்கிறார். இவரது கதையும் வழக்கமானதுதான். துளியிலிருந்து கடலாக வளர்ச்சியடைந்தவர். 1932, மே 22-ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்த லியனார்டோ, தொடக்கத்தில் கண்ணாடி நிறுவனங்களுக்குத் தேவையான ப்ரேம், நட்டு, ஸ்க்ரூ போன்றவற்றை தயாரித்துக் கொடுப்பவராக இருந்தார். எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பதென 1961-ல் சொந்த நிறுவனத்தைத் தொடங்கிய அவர், விரைவிலேயே இத்தாலியின் பெயர் பெற்ற கூலிங் கிளாஸ் நிறுவனமாக வளர்ச்சியடைந்தார். அதே வேகத்தில் உலகச் சந்தையையும் கைப்பற்றினார். கல்லறையில ரெண்டு மூன்று குளிர் கண்ணாடி வெச்சு விடுங்க, சொர்க்கத்துக்கு மாட்டிட்டுப் போகட்டும்! அமைதியில் உறைக!
-நாடோடி