நீடாமங்கலம் -மன்னார்குடி சாலை விரிவுபடுத்தும் திட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. நிழலின் அருமை இந்த அக்னி நட்சத்திர வெயிலில் நன்கு தெரிந்திருக்கும். சாலையோர மரங்களை வீணே வெட்டி அப்புறப்படுத்துவதற்குப் பதில் அவற்றை அகழ்ந்து மீண்டும் சாலையிலே நடுவதில் க்ரீன் நீடா என்னும் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. கோவை -பொள்ளாச்சி சாலை விரிவுபடுத்தும் வேளையில் அப்போதைய பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரிகிருஷ்ணனின் முன்முயற்சியால் மரங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் நடப்பட்டு டஜன் கணக்கிலான மரங்கள் காப்பாற்றப்பட்டன. அவர் தற்போது திருவாரூர் கலெக்டராக இருப்பதால், விரிவுபடுத்தப்படும் 12 கிலோமீட்டர் சாலையிலுள்ள மரங்களை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் வழிகாட்டுதல் துணையுடன் அகழ்ந்து நட, க்ரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜவேலு கேட்டுக்கொண் டுள்ளார். சாலையும் வேணும் சோலையும் வேணும்!
வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களை எட்டிப்பிடித்தவர் என்று மலையேறுபவர்களைத்தான் சொல்லமுடியும். சிகரங்களைத் தொடுவதை எல்லா ராலும் சாதிக்கமுடியாது. 8000 மீட்டருக்கும் அதிக மான ஐந்து சிகரங்களில் ஏறி சாதனை படைத் திருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா மோஹித். மராட்டிய மாநிலத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த இவருக்கு சிறுவயதிலிருந்தே மலையேறுவதில் ஆர்வம் இருந்துவந்திருக்கிறது. இதற்குமுன்பு எவரெஸ்ட் சிகரம், இமயமலையிலுள்ள லோட்சே, மவுண்ட் மகாலு, அன்னபூர்ணா மலைச்சிகரங்களை ஏறி சாதனை படைத்திருந்தார் பிரியங்கா. இந்நிலையில் மே-5 ஆம் தேதி உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தை ஏறிச் சாதனை படைத்திருக்கிறார். உண்மையிலே இவங்க உச்சம்தொட்டவங்கதான்!
துரதிர்ஷ்டம் என்றால் என்னவென்று தெரியுமா? வேய்னே அக்ஸ்டெல்லிடம் கேளுங்கள் விளக்கமாகச் சொல்வார். ஸ்கூட்டர் ஒன்றைத் திருடிய வழக்கில் வேய்னேவைக் கைதுசெய்தது இங்கிலாந்து போலீஸ். வேய்னே, கையில் வைத்திருந்த அவரது செல்போனை நோண்டியிருக் கிறார். ஏதோ ஒருசமயத்தில் கால்ரிக்கார்டிங் மோடில் போட்ட வேய்னே, அந்த செட்டிங்கை மாற்றாமலே விட்டிருக்கிறார். அதனால் அவர் நண்பர்களுடன் பேசிய கால்கள் எல்லாம் போனில் பதிவாகியிருந்திருக்கிறது. அதில் சில அழைப்பு களில், தான் எப்படியெல்லாம், எதையெல்லாம் திருடினேன் என நண்பர்களிடம் தம்பட்டம் அடித்ததும் பதிவாகியிருந் திருக்கிறது. ஸ்கூட்டர் திருடிய வழக்கில் இரண்டொரு மாதம் சிறைசெல்லவேண்டிய வேய்னே, துரதிர்ஷ்டத்தால் ஐந்து வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார். தம்பட்டம் பேசப்போய் அம்பலமானது!
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரப்பிரதேச, பீஹார் அரசுகளிடம், கடந்த மார்ச் மாதம் வரை கங்கை ஆற்றில் வீசியெறியப்பட்ட பிணங்களுக்குக் கணக்குக் கேட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாம் அலையின்போது கோவிட் கிருமிகள் இந்தியாவில் ருத்ரதாண்டவமாடின. அப்போது மரண விகிதமும் அதிகமாக இருந்தது. கொரோனா தொற்று பயம், சுடுகாட்டில் இடம் கிடைக்காமை, விறகுகளுக்கும் எரிப்பதற்குமான செலவுகளுக்கு அஞ்சி பலர் இறந்த உடல்களை கங்கை நீரில் வீசவும், கங்கைக் கரையோரம் புதைக்கவும் தலைப்பட்டனர். இந்த விஷயம் வெளிவந்தபோது, கங்கையெங்கும் மிதந்த பிணங்கள் உலக அளவில் பேசுபொருளானது. பத்திரிகையாளர் சஞ்சய் சர்மா என்பவர் எத்தனை பிணங்கள் கங்கையில் வீசப்பட்டது, சடலங்களை அடக்கம் செய்வதில் முறையான வழிகாட்டு முறைகள் பின்பற்றப்பட்டதா என தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அரசியல் கணக்குகளைத் தாண்டி பிணக்கணக்கு வந்துவிடுமா?
திண்டுக்கல் எம்.வி.எம். நகரைச் சேர்ந்தவர் வக்கீல் லீனஸ். மகளைப் பார்க்க 2 மாதம் முன்பே அமெரிக்கா சென்றிருந்தார். பல நாட்களாகப் பூட்டியிருந்த அவரது வீட்டை நோ ட்டம்விட்ட மர்ம நபர்கள் மே 16-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் புக முயற்சித் திருக்கின்றனர். மாதக்கணக்கில் வெளிநாடு சென்ற தால், சி.சி.டி.வி. கேமரா, சென்சார் முதலிய ஏற்பாடு களைச் செய்திருந்ததால் லீனஸுக்கு சென்சார் எச்சரிக்கை செய்துவிட்டது. உடனடியாக வீட்டின் விளக்குகளை அமெரிக்காவிலிருந்தே எரியவிட்டு திகைக்கவைத்தார். அப்படியும் திருடர்கள் நகராததால், உள்ளூர் போலீஸுக்குத் தகவல்தர போலீசார் அவர்களைச் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். திருடனுங்களையே திக்குமுக்காட வெச்சிருக்காரே!
உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட மாவட்டம் தாருகா கிராமத்தில் உள்ளது பாலாஜி கோவில். முன்னூறு ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில் மே 9-ஆம் தேதி நுழைந்த திருடர்கள் 16 சிலைகளைத் திருடிக்கொண்டு போய்விட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. ஒரு வாரம் ஆனநிலையில், திருடர்கள் கோவில் பகுதியில் 14 சிலைகளைத் திரும்பக்கொண்டு வைத்ததுடன், ஒரு கடிதத்தையும் வைத்திருக்கின்றனர். சிலைகளைத் திருடியதிலிருந்து பயங்கரமான கனவுகள் வருவதாகவும், அதனால் நிம்மதியாக உறங்க முடியவில்லையெனவும் தங்களை மன்னித்து விடுமாறும் திருடியவர்கள் அதில் எழுதியிருந் தனர். பகவானின் லீலையை எண்ணி கிராம பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போயிருக்கின்றனர். திருட்டுப் போனது 16. திரும்ப வந்தது 14. அந்த 2 சிலைகளை வைத்துக்கொண்டால் பயங்கரக் கனவுகள் வராதா? பகவான் லீலையா? பயத்தோட வேலையா?
-நாடோடி