இந்த உலகத்தில் விநோதத் துக்கு குறைச்சலா என்ன? அதிலொரு விநோதம் இது. திமாரு ஹெரால்ட்டின் தாய் எலன் சாட்லர். இங்கிலாந்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த எலன், 1871-ல் ஒரு மிகப்பெரிய பிரச்சனையைச் சந்தித்தார். 11 வயதான எலன், அம்மாதம் மார்ச் 29-ஆம் தேதி தூங்கச் சென்றவர், மறுநாள் எவ்வளவு எழுப்பியும் எழவே இல்லை. மருத்துவர்கள் வந்து சோதித்துவிட்டு, ஒருவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் ஓரெக்சின் எனும் வேதிப்பொருள் எலனிடம் இல்லை. இதற்கு டிரிப்னோசோமியாசிஸ் எனப் பெயர் என்றனர். ஆனாலும் எலனை அவர்களால் குணப்படுத்த முடியவில்லை. எலனின் அம்மாதான், அவர் தூங்கும்போது உணவுகொடுத்துப் பாதுகாத்தார். கிட்டத்தட்ட 9 வருடங்கள் தூங்கி 20 வயதில் எழுந்திருக்கிறார் எலன். அதிர்ஷ்டவசமாக அதன்பின் அந்த நோயின் தாக்கம் எலனுக்கு இல்லை. மணமுடித்து இயல்பான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். கும்பகர்ண னுக்கும் ஓரெக்சின் பற்றாக்குறை இருந்திருக்குமோ!
ஐந்து மாநில தேர்தல் முடிந்தாலும் முடிந்தது, தினமும் பெட்ரோல் விலையை 80 காசுகள் உயர்த்தி 111 ரூபாயில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு. போதாதென்று, வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியிருக்கிறது. அதன்படி இருசக்கர வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழுக்கான கட்டணம் 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆட்டோக் களுக்கு 600 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக. இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கான கட்டணம் 2500 ரூபாயிலிருந்து 10000 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கான பதிவுச் சான்றிதழ் கட்டணம் 5000-லிருந்து 40,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தவிரவும் பதிவுச் சான்றிதழை புதுப்பிப்பதற்கு ஆகும் தாமதத்துக்கு நாளுக்கு 50 ரூபாய் அபராதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, வாகன உரிமையாளர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இது வரியா- வழிப்பறியா யுவர் ஹானர்!
"அம்னஸ்டி இன்டர்நேஷனல்' மனித உரிமை களுக்காகக் குரல்கொடுக்கும் சர்வதேச அமைப்பாகும். மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் எழும்போதெல்லாம் இவ்வமைப்பு குரல் கொடுத்ததை யடுத்து மத்திய அரசுக்கும் இவ்வமைப்புக்கும் உரசல் எழுந்தது. 2020-ல் இவ்வமைப்பின் முன்னாள் தலைவர் ஆகார் படேல், "சீனாவைவிட பெரிய எதிரி பா.ஜ.க.தான். சீனா நம்மை உள்ளிருந்து கெடுக்கப்போவதில்லை''’என விமர்சித்தார். அதுமுதலே பா.ஜ.க. அவர்மீது கண் வைத்திருந்தது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக இவ்வமைப்பு மீது சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆகாரின் பாஸ்போர்ட் முடக்கப்பட, குஜராத் நீதி மன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றார். அமெரிக்கா கிளம்பிய அவரை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள், தேடப்படும் நபராக சி.பி.ஐ.யால் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தில்லி நீதிமன்றத்தை அணுகி முறையிட்டார் படேல். வழக்கை விசாரித்த நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீஸை திரும்பப் பெறுவ தோடு, எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு போதாத காலம்!…
மத்தியப்பிரதேச எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லாவுக்கு எதிராக செய்தி வெளியிட்டதற்காக யூ டியூபில் செய்தி வெளியிடும் சுயேட்சை செய்தியாளர்கள், நாடக நடிகர்கள் 8 பேர் கைதுசெய்யப்பட்டு, அரைகுறை ஆடையில் நிறுத்தப் பட்டது சர்ச்சையாகியிருக்கிறது. சுக்லாவின் மகன் குருநாத் சுக்லா, தன் தந்தை குறித்து முகநூலில் இழிவான செய்தி வெளியிட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் நீரஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து முகநூல் செய்தியாளர் கனிஷ்க் திவாரி, நீரஜின் நாடக நண்பர்கள் இதற் கெதிராகப் போராடியிருக்கிறார்கள். அவர்களும் கைதுசெய்யப் பட்ட நிலையில், ஜட்டி யுடன் நிறுத்தி விசாரணை நடந்திருக்கிறது. இந்த ஜட்டியுடனான விசா ரணை விவரமும் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், "பாதிக்கப்பட்டவர்களை இதுபோல் விசாரணை செய்தவர்கள் யாரென விசாரித்து நடவடிக்கை எடுப்போம்' என போலீஸ் உறுதியளித் திருக்கிறது. இது சமூக ஊடகங்களின் காலம்!
காட்டுயிரிகளுக்கும் மனிதர் களுக்குமான மோதலில் பெரும்பங்கு தவறு மனிதன் மேல்தான். காட்டுப் பகுதியில் குடியேற்றங்களைச் செய்வது, வேட்டை நடவடிக்கைகள், காடுகள் சுருங்கிய படியே செல்வது போன்ற காரணங்களால் வன உயிரிகள் மனிதனின் எல்லைக்குள் வருகின்றன. அவற்றில் தமிழகத்தில் மிக மோசமாக பாதிக்கப்படும் உயிர் யானை. தமிழகத்தில் மட்டும் 3000 யானைகள் இருக்கின்றன. எனினும் மின்வேலி, தண்ணீருக்காக வெளியே வருவது, தண்டவாளங்களில் சிக்கி உயிரிழப்பது, தந்தத்துக்காக வேட்டையாடப்படுவது என, பல்வேறு காரணங்களினால் யானை கள் அதிகளவில் உயிரிழந்துவரு கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 600 யானைகள் உயிரிழந் துள்ளன. இந்த நிலையை மாற்ற உண்மையான அக்கறையுடன் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள் வன உயிர் ஆர்வலர் கள். ஆனையழிப்புக்கெதிரா ஆணை பிறப்பிக்கணும்!
-நாடோடி