அதலபாதாளத்தில் கிடப்பவரை எவரெஸ்டின் உச்சத்தில் நிறுத்தும் வல்லமையுள்ளது அதிர்ஷ்டம். அதற்கான உதாரணம்தான் மலீஷா கார்வா.
குஜராத்திலிருந்து தாராவி குடிசைப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்தவர் மலீஷா. ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாப்மேன் வடிவில் வந்தது மலீஷாவின் அதிர்ஷ்டம். இந்தியாவில் இசை ஆல்பமொன்றுக்கு வந்த ஹாப் மேனுக்கு கொரோனா தொற்று வர, அவர் குணமாகும்வரை இந்தியாவில் தங்கநேர்ந்தது. அப்போது குடிசைப்பகுதியைச் சேர்ந்த மலீஷா அறிமுகமாக, தனது துணிச்சல், நடனம் உள்ளிட்டவற்றால் ஹாப்மேனைக் கவர்ந்தார். மலீஷாவுக்காக இன்ஸ்டாகிராம் மூலம் நிதிதிரட்டி, சமூக ஊடகங்களிலும் அறிமுகம் செய்தார்.
அதன்விளைவாக இரண்டு ஹாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்ததோடு, பாரஸ்ட் எசென்ஷியல் எனும் அழகு சாதன நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் நியமிக்கப்பட்டார் மலீஷா.
சர்வதேச மாடலாக, மலீஷாவின் வெற்றிக் கதை தொடங்கிவிட்டதாக இப்போதே ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
சுடராயிருந்தாலும் தூண்டுகோல் வேண்டும்!
கேரள மாநிலத்தையே அதிர வைத்திருக்கிறது ஒரு இளம்பெண்ணின் கொலை. 2022 ஜனவரியில் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு பெண் காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தபோது இப்படி யெல்லாம் நடக்குமா என காவல்துறையே திகைத்தது. அவர் கொடுத்த புகாரின் சாராம்சம், “எனது கணவர் ஷினோ மேத்யூ. அவரும் அவரது நண்பர்களும் டெலிகிராமில் "கப்புள்ஸ் மீட்ஸ் கேரளா' என்றொரு குழுவை வைத்திருக்கிறார்கள். இவர்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா கிளம்பிவந்து சந்திப்பார்கள். அப்போது அவர்கள் தங்களின் மனைவி களை மாற்றிக்கொள்வார்கள். எனக்குச் சம்மதமில்லாதபோதும் என் கணவர் என்னை
இதில் ஈடுபடுத்தினார். சில முறை நான் சீரழிக்கப்பட்டேன்” என்பதுதான். கேரள காவல்துறை இதில் நடவடிக்கை எடுத்து 9 பேரைக் கைதுசெய்தது. இந்நிலை யில் அந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் கணவரைப் பிரிந்து தனியே வாழ்ந்துவந்த அந்தப் பெண் சில தினங் களுக்கு முன் வீட்டு முன் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடக்க, சந்தேகத்தில் அவளது கணவனை போலீஸ் தேடிப்போக, அவனோ விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தான். இந்த வழக்கை விடாமல் விசாரித்து வருகிறது கேரளா போலீஸ்!
சினிமாவைவிட பயங்கரமா இருக்கே நிஜம்!
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற பெருவெற்றி கட்சியின் வீச்சை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே பா.ஜ.க.வின் தீபக் ஜோஷி, பிரதீப் லாரியா ஆகியோர் காங்கிரஸுக்குத் தாவியுள் ளனர். இந்நிலையில் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவிய ஜோதிராதித்ய சிந்தியா, அக்கட்சி யின்மேல் அதிருப்தியில் உள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மோடி யின் படத்தையும், பா.ஜ.க.வின் பெயரையும் நீக்கியுள்ளது ஊகங்களைக் கிளப்பியுள்ளது. அதற்கேற்ப காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமண்சிங், “"ஜோதிராதித்யா நல்ல பேச்சாளர்... திறமையான அரசியல்வாதி'’என பொடி வைத்துப் பாராட்டியுள்ளார். இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஜோதிராதித்யா, காங்கிரஸுக்குத் தாவுகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பதிலடியாக பா.ஜ.க.வும், இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் சீக்கியருக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களில் கமல்நாத் பெயரைத் தொடர்புபடுத்தி சி.பி.ஐ. மூலம் அந்தக் குற்றப் பத்திரிகையில் அவரது பெயரை இடம்பெறச் செய்து, அவரை தேர்தலுக்கு முன்பே குறிவைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதில் விவேகானந்தர் பாறையும் 133 அடி திருவள்ளுவர் சிலையும் முக்கிய பங்கை வகிக்கின்றன. இதில் கடல்நீர் மட்டம் தாழ்வான காலங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகுகள் இயக்கப் படுகிறது.
எனவே இந்த இரு இடங்களையும் இணைத்து பாலம் அமைக்கவேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் எதிர் பார்ப்பாக உள்ளது. இதனைப் பூர்த்தி செய்யும்வண்ணம் ரூ.37 கோடியில் கண்ணாடி இழைப் பாலம் அமைய வுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கண்ணாடி நடை பாலத்தை அமைக்க உள்ளது. 77 மீட்டர் நீளமும் 7 மீட்டர் உயரமும் 10 மீட்டர் அகலமும் உடைய பாலமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்துக்கான துருப்பிடிக்காத கம்பிகள் ஜெர்மனில் இருந்து வரவழைக்கப்பட உள்ளதாம். இவ்விரு இடங்களுக்கும் கடலை ரசித்தபடி பாலத்தில் சென்றுவரலாம் என்பதால் இந்தப் பாலம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லா வலுவா கட்டுங்கப்பா!
-நாடோடி