தொல்லியலானது, கடந்த காலங்களில் நிகழ்ந்த கலாச்சாரப் பழக்கம் மற்றும் மனித நடத்தை பற்றிய ஆய்வாக இருக்கும்போது, விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளின் ஓடுகள் கிடைத்துள்ளன. அதனைத் திட்டமிட்டே பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு சேதப் படுத்தியிருக்கின்றனர். ஏன் தெரியுமா?

த.மு.எ.க.ச. மாநிலக்குழு உறுப்பினரான நித்தியானந்தம் நடந்ததை விவரிக்கிறார்...

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ் சாலையின் மேல்புறத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும் விழுப்பனூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட எல்லையில், பழமையான முதுமக்கள் தாழிகள் நிறையப் புதைந்திருப்பது தெரிய வந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் தெரிந்தன. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தினர் முன் முயற்சியெடுத்து, பேராசிரியர் களை வரவழைத்து, இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது.

agal

Advertisment

இப்பகுதியில் பல இடங்களிலும் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு, அவற்றின் மீது கற்பாறைகள் அடுக்கப்பட்டுள்ளன. அங்கங்கே மூன்றுவிதமான ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. முதுமக்கள் தாழிகளின் ஓடுகள், சுமார் 2 அங்குலம் கனத்தில் செம்மண் மற்றும் கரிசல் மண் கலந்து இரண்டு அடுக்குகள் கொண்டதாக உள்ளன. ஒரு அங்குலம் இரண்டு அங்குலம் கனம்கொண்ட வண்ணம் தீட்டப்பட்டு, பூ வேலைப்பாடுகளுடன் மெருகேற்றப்பட்ட ஓடுகள் இந்தப் பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. இங்கு கிடைத்த சில கற்கள், 300 கிராமிலிருந்து அரை கிலோ வரை, அதிக எடை கொண்டவையாக இருக் கின்றன. அவை, இரும்புத்தாது கலந்து சுட்ட மண்ணால் செய்யப்பட்டவை போல் உள்ளன. அந்தக் காலத்தில், இந்தப் பகுதியில் உலோக ஆலைகள் இருந்திருக்கக்கூடும். அதன் அடையாளங் களை இங்கே காண முடிகிறது.

இந்தப் பகுதியில், 4.05 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.3 கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில், புதிய வட்டார போக்குவரத்துக் கழக அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையானது, கடந்த மார்ச் 3-ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த இடத்தில், முதுமக்கள் தாழி ஓடுகள் கண் டெடுக்கப்பட்ட நிலையில், அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதனால், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வந்தனர். ஆனால், அந்தப் பகுதியை முழுவது மாகப் பார்வையிடவில்லை. காரணம் - ஆட்சியாளர்கள் தந்த நெருக்கடிதான்.

அகழ்வாராய்ச்சி நடத்தும் அளவுக்கு விவகாரம் பெரிதாகிவிட்டால், கட்டடம் கட்ட முடியாமல் போய்விடும் என்பதை அறிந்த ஒப்பந்தக்காரர்கள், அந்த இடத்தை வேகவேகமாக பொக்லைன் எந்திரம் கொண்டு சீர்திருத்தினார்கள். தொல்லியல் ஆதாரங்களைச் சேதப்படுத்தினர். ஆய்வு நடத்த வந்த தொல்லியல் துறை மண்டல உதவி (பொறுப்பு) இயக்குநர் சக்திவேல், "அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டுமென்றால், அந்த பூமி அப்படியே இருக்க வேண்டும். ஒருமுறை சீர்திருத்தம் செய்துவிட்டால், அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த முடியாது. அதனால், சீர்திருத்தம் செய்த இடத்தை விட்டுவிட்டு, மற்ற பகுதிகளை வேண்டுமானால், அகழாய்வுக்கு உட்படுத்துவோம்' என்று ஆட்சியாளர்களின் எண்ண ஓட்டத்தையே பிரதிபலித்தார்.

இங்கு மம்சாபுரம் குறவன் கோட்டை, மங்காபுரம், கிருஷ்ணன் கோவில், விழுப்பனூர், காவத்தோப்பு பேச்சியம்மன் கோவில் மற்றும் வடசேரி கண்மாய் பகுதிகளில் முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தொல்லியல் ஆதாரங்கள் பெருவாரியாகப் புதைந்து கிடக்கின்றன. எனவே, இந்தப் பகுதியில் விரிவான முறையில் அகழாய்வு செய்வதன் மூலம், ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர் களின் தொல் நாகரிகத்தையும், பண்பாட்டையும் வெளிக்கொண்டுவர முடியும். அதனால், இந்த விஷயத்தை தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரனிடம், வலுவான கோரிக்கையாக நேரில் முன்வைப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது த.மு.எ.க.ச.’’ என்றார்

சிந்துவெளி நாகரிகம் மட்டும்தானா? வைகை கரையிலும் நாகரிகம் இருந்திருக்கிறது. தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், கீழடி அகழாய்வில் சான்றுகள் கிடைத்துள்ளன. அகழாய்வு மேற்கொள்ள வேண்டிய நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளும் உள்ளன.

“புதிதாக வட்டார போக்குவரத்துக் கழக அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வேறு இடமா இல்லை? அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திலா கட்ட வேண்டும்?’’ என்பது இங்கு ஆய்வு நடத்திய பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

-ராம்கி