ஜார்க்கண்ட் மக்களின் உரிமைக்காகப் போராடி, தீவிரவாதி களுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டு டன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலேயே உயிரைவிட்ட சமூக செயற்பாட்டாளரான ஸ்டேன் சாமியின் கைதுக்குப் பின்னணியில் மிகப்பெரிய சதி நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவருக்கு மாவோயிஸ்டுகளின் தொடர்பு இருப்பதாக ஜோடிப்பதற்காக அவரது கணினியில் போலியான டாகுமென்டுகளை ஹேக்கர்கள் உதவியுடன் புகுத்தியிருப்பதை அமெரிக்க தடயவியல் நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டதில் குட்டு வெளிப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற் காகவும், அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும், மக்களோடு மக்களாக இணைந்து களப்போராட்ட மாகவும், நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டமாகவும் செயல்பட்டுவந்த போராளிதான் பாதிரியார் ஸ்டேன் சாமி. திருச்சி அருகே பூதலூர் பகுதியில் பிறந்து, தனது பணி நிமித்தமாக 1970ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் சென்றபோது, அங்குள்ள பழங்குடியின மக்கள், கார்ப்பரேட்டு களாலும், அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுவதை அறிந்து, அவர்களுக்கான உரிமைப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கடந்த 2018, ஜனவரி 1-ம் தேதி, பீமா கொரேகானில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், ஸ்டேன் சாமியை 2020, அக்டோபர் மாதத்தில், அவரது 83வது வயதில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் என்.ஐ.ஏ. அமைப்பு, கைது செய்து சிறையிலடைத்தது. "பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதைத் தவிர என்ன தவறு செய்தேன்?' என்று கேள்வியெழுப்பினார் ஸ்டேன் சாமி. கொரோனா உச்சத்திலிருந்த காலகட்டத்தில் சிறையிலிருந்த அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதோடு, முதுமையில் வரும் உடல் நடுக்க நோயாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உணவையோ, நீரையோ கையால் பிடித்து அருந்தவும் சிரமப்பட்டார். எனவே தண்ணீர் குடிக்க வசதியாக ஸ்ட்ரா கொடுக்கும்படி கேட்ட தற்கு அதையும் மறுத்தார்கள். அவரது உடல்நிலை மேலும் மோசமாக, உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஜாமீன் கோரப்பட்டது. அதற்கான விசாரணை நடக்குமுன்பாகவே 2021, ஜூலை மாதத்தில் பரி தாபமாக உயிரிழந்தார்.
ஸ்டேன் சாமியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தபோது, அவரது லேப்டாப்பில், மாவோ யிஸ்டுகளுடன் தொடர்புடைய 44 டாகுமென்ட்டுகள் இருந்த தாகக் குற்றம்சாட்டினார்கள். ஸ்டேன் சாமியின் வழக்கறி ஞர்கள் நீதிமன்றத்தில் வைத்த வாதத்தில், அவரது லேப் டாப்பை சோதனை செய்து பார்க்க அனுமதி கேட்க, நீதிமன்றம் இசைந்தது. அதன்படி, அமெரிக்காவிலுள்ள அர்சேனல் தடயவியல் நிறுவனத்திற்கு அவ ரது லேப்டாப்பை பரிசோத னைக்கு அனுப்பினார்கள். அவர் கள் அளித்த முடிவுகள்தான் தற்போது அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஸ்டேன் சாமியின் லேப்டாப்பில் கண்டெடுக்கப்பட்ட அந்த 44 ஆவணங்களும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. அந்த ஆவணங்களை, ஸ்டேன் சாமிக்கே தெரியாமல் ஹேக்கர் கள் மூலமாக அவரது லேப்டாப் பில் புகுத்தியுள்ளனர் என்றும், அந்த ஆவணங்களை ஸ்டேன் சாமி ஒருமுறைகூட திறந்து பார்க்கவில்லை என்றும் நிரூபித்துள்ளனர்.
இந்த ஆவணங்களை, கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக, கடந்த 2014,அக்டோபர் 19 முதல் ஜூன் 12, 2019-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஹேக்கர் கள் திணித்திருக்கிறார்கள். இந்த ஹேக்கர்கள் இந்திய அரசோடு தொடர்புடையவர்கள் என்பதற் கான ஆதாரம் எதையும் சொல்ல முடியாவிட்டாலும், இந்திய அரசுக்கு எதிராகக் களமாடிய சமூக செயற்பாட்டாளர்கள் பல ரின் கணினிகளிலும் இதேபோல ஹேக்கர்கள் மூலமாக சதி நடந் திருப்பதைப் பார்க்கையில், இதன் பின்னணியில் அதிகார வர்க்கம் இருப்பதாக உறுதியாக சந்தேகிக்க லாம்.
ஸ்டேன் சாமியின் லேப் டாப்பில் செய்த சதியைப் போலவே, சமூக செயற்பாட் டாளர் ரோனா வில்சனை 2018ஆம் ஆண்டு கைது செய்வ தற்கு முன்பாக, அவரது ஸ்மார்ட் போனில் இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக 49 முறை தாக்குதல்கள் நடத்தியிருக் கிறார்கள். அதேபோல் அவரது கணினியில், மாவோயிஸ்ட் தலைவர், நமது பிரதமர் மோடியை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டுவதாகக் குறிப்பிட்டு, 32 டாகுமென்ட்டுகளை ஹேக்கர்கள் இணைத்துள்ளனர். இதில் புனே போலீசாருக்கு தொடர்பிருப்ப தாகவும் தெரியவந்துள்ளது. இந்த பெகாசஸ் ஸ்பைவேரை இந்திய அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பிரபலங்கள் எனப் பலரையும் வேவு பார்க்கப் பயன்படுத்துவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த உண்மையை அர்சேனல் நிறுவனம் போட்டுடைத்துள்ளது. இவர்களைப் போலவே சமூக செயற்பாட் டாளரான வரவர ராவ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹனி பாபு, வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சமூக செயற்பாட்டாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டு, மாவோயிஸ்ட்டுகளுடன் அவர்களுக்கு தொடர்பிருப்பதைப் போன்ற டாகுமென்டுகளைப் புகுத்தியுள்ளனர். இப்படி மிக மோசமான ஹேக்கர் உத்தியைப் பயன்படுத்தி சமூக செயற்பாட்டாளர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யும் சதிச்செயலில் அதிகார வர்க்கம் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. "டிஜிட்டல் இந்தியா' என்பதை இப்படி மிகமோசமான முறையில் செயல்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
-ஆதவன்