"ஆளுநரின் வெற்று மிரட்டல்களுக்குப் பயந்து நடுங்கும் இயக்கம் தி.மு.க. அல்ல' என்று மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கை, தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

stalin

கடந்த 22-ஆம் தேதி திருவரங்கம் கோவில் பட்டர்கள் கொடுத்த பூரணகும்ப மரியாதையை ஏற்ற ஸ்டாலின், பட்டர்கள் அவருடைய நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்து பரபரப்பை ஏற்படுத்தினார். "அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அவர் திருவரங்கம் சென்றார்' என்கிறார்கள் லோக்கல் கட்சிக்காரர்கள்.

Advertisment

தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட கோவில் பக்கம் வராதவர் ஸ்டாலின் என்பதற்காகவே, "ரெங்கா ரெங்கா' கோபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் கட்சிக்காரர்களின் திருமணம் மற்றும் காதணி விழாக்களை அன்பில் மகேஷும், நகரச் செயலாளர் அன்பழகனும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆட்சியைப் பிடிக்க யாகம் செய்ய வேண்டும் என கே.என்.நேரு குடும்பத்தினர் மூலம் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட, அதன்படியே நடந்து, நிறைவு நேரத்தில் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

stalin

பட்டர்கள் நெற்றியில் வைத்த கோவில் குங்குமத்தை ஸ்டாலின் அழித்ததை பா.ஜ.க. அரசியலாக்கும் நிலையில், "அவரை இனிமேல் எந்தக் கோவிலிலும் நுழைய அனுமதிக்கக் கூடாது' என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அதே நேரத்தில், அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமையும் வாய்ப்புள்ளது என்பதால்தான், ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்ததுடன், ஸ்ரீரங்கத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் அடிமனை விவகாரத்தைத் தீர்த்து, தங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் ஸ்டாலினிடம் பட்டர்கள் கொடுத்திருக்கிறார்களாம்.

Advertisment

இதற்கிடையேதான், பா.ஜ.க. நியமித்த நிழல்முதல்வராக செயல்படும் ஆளுநரின் ஆய்வைக் கண்டித்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய நாமக்கல் தி.மு.க.வினர் வழக்கத்திற்கு மாறாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு ஸ்டாலினே தலைமை வகித்தார். பெருந்திரளாக கூடிய தி.மு.க.வினர் சைதாப்பேட்டையை திணறடித்தனர்.

stalin

தொடக்கத்தில் தனக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் சென்ற ஆளுநர், ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கடுமையாக ரியாக்ட் செய்தார். "ஆளுநர் நடத்தும் மாவட்ட ஆய்வுகளை எதிர்ப்போர் மீது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்படும்' என்று ராஜ்பவனே அறிவிப்பு வெளியிட்டது.

ஆளுநர் மாளிகையின் இந்தப் போக்கு மாநில சுயாட்சிக்கு வேட்டுவைக்கும் நடவடிக்கையாகும். 7 ஆண்டுகள் அல்ல, நிரந்தரமாக சிறைத்தண்டனை என்றாலும், தி.மு.க. இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாது. ஆளுநரின் ஆய்வுகளை எதிர்த்து தொடர்ந்து கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தும் என்று ஸ்டாலின், கலைஞர் பாணியில் கடுமையான அறிக்கையை வெளியிட்டார்.

ஆளுநரின் இந்த அறிக்கை, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு போட்டியாக இன்னோர் அரசாங்கத்தை நடத்த முயற்சிப்பதன் வெளிப்பாடு' என்றே பார்க்கப்படுகிறது. மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தி.மு.க., ஆளும் அ.தி.மு.க.வின் கையாலாகாத்தனத்தை அவ்வப்போது கண்டிக்கிறது. தொடர்ந்து கறுப்புக்கொடி போராட்டங்களை நடத்துகிறது. ஆளுநரின் திடீர் ரியாக்ஷன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

governorஆளுநரின் மிரட்டல் அறிக்கை அவருடைய ஆணவத்தையும் அதிகாரத் திமிரையும் வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக கண்டித்தார்.

மாநில அரசாங்கமோ, "மத்திய அரசையோ, ஆளுநரையோ கண்டிக்கிற ஆற்றலை இழந்துவிட்டது. அதுமட்டுமின்றி ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து பேரவையில் பேசக்கூட ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கிறது. "ஆளுநரைப் பற்றியோ, குடியரசுத் தலைவரைப் பற்றியோ பேரவையில் விவாதிக்க விதிகள் அனுமதிக்கவில்லை' என்கிறார் சபாநாயகர்.

"இதே பேரவையில் ஆளுநர் சென்னாரெட்டியைப் பற்றி விவாதிக்கப்பட்டு, அவரை நீக்கவேண்டும்' என்று ஜெயலலிதா ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வெளிநடப்புக்குப் பின் மீடியாக்களிடம் விளக்கினார் ஸ்டாலின்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ, மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலோ ஆளுநர்கள் அடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டுமே நிர்வாகத்தில் தலையிடுவது பா.ஜ.க.வின் திட்டமிட்ட சதி என்பது அம்பலமாகி இருக்கிறது. இந்நிலையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் மாநில சுயாட்சி விவகாரத்தை அழுத்தமாக கையில் எடுக்கத் தயாராகி வருகிறார். "பா.ஜ.க.வுக்கும் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கும் எதிராக எடுக்கும் நடவடிக்கைகளே எடப்பாடி ஆட்சியை அகற்றும்' என தி.மு.க. தலைமை நினைக்கிறது.

பா.ஜ.க. எதிர்ப்பில் உறுதி காட்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்வர்களையும், மற்ற கட்சித் தலைவர்களையும், மாநில சுயாட்சிக்கு ஆதரவான எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் ஒன்றுதிரட்டி மாநில சுயாட்சி மாநாட்டை கூட்டுவதற்கான திட்டம் தி.மு.க. தரப்பில் வேகம் எடுத்துள்ளது.

-ஜெ.டி.ஆர்., சோழன்