கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக சுமார் 600 இந்திய (தமிழக) மீனவர்களை சுட்டும் அடித்தும் கொன்று குவித்த ரத்தவெறி பிடித்த இலங்கை கடற்படைக்கு இன்னும் தமிழர்களின் ரத்தம் குடிக்கும் வெறி அடங்கவில்லை. இப்போது 4 மீனவர்கள் சென்ற படகை இடித்து மூழ்கடித்து கொன்றிருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால்தான் மேலும் மேலும் தமிழக மீனவர்களை அச்சமின்றி கொல்கிறார்கள் இலங்கை கடற்படையினர் என்கிறார்கள் விபரம் அறிந்த பலரும்.
18ந் தேதி கோட்டைப் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 214 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அடுத்த நாள் 213 படகுகள் கரை திரும்பின. ஒரு படகு மட்டும் காணவில்லை. அப்போதுதான் சக மீனவர்கள்... ""இலங்கை கடற்படை கப்பலை நம் மீனவர்களின் படகின்மீது இடித்து மூழ்கடித்து விட்டார்கள். ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா(30), வி.நாகராஜ்(52), என்.சாம்(28), எஸ்.செந்தில் குமார்(32) ஆகிய 4 மீனவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர். சிறிதளவு மனிதாபிமானம் கூட இல்லாத இலங்கை கடற்படை, அவர்களை நம் மீனவர்கள் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக படகு மூழ்கிய பகுதியிலேயே சுற்றி வந்தனர். அதனால் யாராலும் 4 மீனவர்களையும் காப்பாற்ற முடியவில்லை'' என்றார்கள்.
காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி உறவினர்களும் மீனவர்களும் போராட்ட குரல் கொடுத்த நிலையில், இலங்கை அரசு மூலம் தேடுவதாக சொன்னது நமது அரசுத் தரப்பு. ஆனால் இலங்கை கடற்பகுதியில் முதலில் இரு சடலங்களும் பிறகு ஒவ்வொரு சடலமாக 4 சடலங்களும் மீட்கப்பட்டன. ஆனால், மீனவர்கள் நலமாக இருப்பதாக இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களிடம் தவறான தகவலைக் கொடுத்தது.
இந்த நிலையில், காணாமல் போன மீனவர்களின் படகை இடித்து மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி கோட்டைப்பட்டினம், ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் மீனவர்கள் மறியல் போராட்டமும் செய்தனர்.
தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதலால் இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்க கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். உத்தரவையடுத்து உடனே நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் இறந்த மீனவர்களின் சடலங்களை ஒப்படைக்கும் வரை கடலுக்கு செல்லமாட்டோம் என்று மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் 23ந் தேதி கோட் டைப்பட்டினம் மீனவர்களின் இரு படகுகளில் இந்திய கடற்படை அதிகாரிகள் சென்று சர்வதேச எல்லையில் 4 மீனவர்களின் உடல்களை பெற்று கோட்டைப்பட்டிணம் வந்தனர். மீனவர்களின் உடல்களை பெற்றுச் செல்ல அவர்களின் உறவினர்கள் அமரர் ஊர்திகளுடன் வந்து காத்திருந்தனர்.
மதியம் 2.30 மணிக்கு கரைக்கு கொண்டுவரப்பட்ட மீனவர்களின் உடல்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், அறந்தாங்கி தொகுதி ரெத்தின சபாபதி எம்.எல்.ஏ, அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு மீனவர்களின் உடல்களை உறவினர் பெற்று சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்றனர்.
உடல்களை பெற்றுக் கொள்ள வந்த மீனவர்கள் கூறும் போது... ""இலங்கை கடற் படையால் நாங்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறோம். இதுவரை 600 மீனவர்களின் உயிர்களை பறித்துக் கொண்ட பிறகும் இலங்கையின் ரத்த வெறி அடங்கவில்லை. தமிழன் என்றதுமே தாக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்தியாவில் ஆளும் அரசுகள் கண்துடைப்புக்காக கண்டனம் தெரிவிப்பதோடு சரி. அதன் பிறகு கண்டுகொள்வதில்லை. அதனால் தான் நாங்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறோம். இப்பக்கூட இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளதால் இலங்கையில் விசாரணைக்குழு அமைக்கப் பட்டுள்ளதாக சொல்றாங்க. கொல்லச் சொன்னவர்களே விசாரித்தால் எப்படி நீதி கிடைக்கும்? சம்பவம் நடந்த அன்று இலங்கை கடற்படை கப்பலில் இருந்த சிங்கள கடற்படையினரை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும். இந்தியாவில் விசாரணை நடக்க வேண்டும் அப்போது தான் மீனவர்களுக்கு நீதி கிடைக்கும்'' என்றனர்.