லங்கை கடற்கொள்ளையர்களும், கடற்படையினரும் சேர்ந்து கொண்டு தமிழக மீனவர்களைத் தாக்குவதும், கைதுசெய்வதும் தொடர்கதையாகி விட்டது. இரண்டு நாட்களில் மூன்று தாக்குதல்களும், ஒரு சிறைப்பிடிப்பும் நடத்தியிருப்பது தமிழக மீனவர் களை நிலைகுலையச் செய்திருக்கிறது.

tf

நாகையை அடுத்துள்ள செருதூர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை தனக்கு சொந்தமான பைபர் படகில் வழக்கம்போல ஆகஸ்டு 28-ஆம்தேதி தனது மகன் மணிகண்ட பிரபுவையும், உறவினர் கங்காதரனையும் அழைத்துக்கொண்டு மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார். கோடி யக்கரையின் தென்கிழக்கே 15 நாட்டிங்கல் தொலைவில் வலைவிரித்துவிட்டு சாப்பிடலாம் என பேசிக்கொண்டிருந்த போது மூன்று படகுகளில் சூறாவளியைப் போல வந்த 9 இலங்கை கடல் கொள்ளையர்கள் தங்கதுரையின் படகை மிரட்டும்தொனியில் வட்டமடித்து, தங்கதுரையின் கழுத்தில் கத்தியைவைத்து அறுத்துவிடுவதாக மிரட்டினர். மற்ற இரண்டு மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.

பிறகு தங்கதுரையின் படகிலிருந்த 4 லட்சம் மதிப்பி லான மீன்பிடி வலைகளையும், ஜி.பி.எஸ். கருவியையும், வாக்கி டாக்கி, செல்போன் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங் களையும் கொள்ளையடித்ததோடு, "இங்கயே பட்டினி கிடந்து சாகுங்கடா' என இருந்த உணவையும் கடலில் வீசிவிட்டு, படகின் இன்ஜினையும் கழற்றிக்கொண்டு சென்றுள்ளனர். கரைக்குச் செல்லமுடியாமல், உடைமை களைப் பறிகொடுத்து விட்டு கடலின் அலைபோன போக்கில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை, அந்த வழியே மீன்பிடிக்கச் சென்ற சக தமிழக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

Advertisment

இந்த சம்பவத்தின் சோகம் அடங்குவதற்குள் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவகுமாருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த 5 மீனவர்கள் 29-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். வேதாரண்யத்திற்கு கிழக்கே 16 நாட்டிங்கல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அதிவேகமாக வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் சரசரவென படகில் ஏறி மீனவர்களைத் தாக்கியதோடு அவர் களிடமிருந்த பல லட்சம் மதிப்புள்ள வலைகளை வெட்டியெடுத்துச் சென்றுள்ளனர். உயிர்பிழைத் தால் போதும் என்பதுபோல மீதமிருந்த வலை களை எடுத்துக்கொண்டு கரைக்குத் திரும்பியுள்ள னர். அவர்களிடம் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதேநாளில், நாகை செருதூர் மீனவ கிராமத் தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சந்திரன், ஆறுமுகம், மதுரை வீரன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இரண்டு படகுகளில் வந்த 7 பேர் கொண்ட கொள்ளையர்கள், படகுகளில் ஏறி ரப்பர் லத்தியால் சரமாரியாக அடித்து வலைகள், ஜி.பி.எஸ். கருவி, வாக்கி-டாக்கி, செல்போன், மீன்பிடி உப கரணங்களை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். செருதூர் மீன்பிடி தளத்திற்கு வந்த மீனவர்கள் "கடலுக்குப் போனாலே இலங்கைக் கடற்படை கைதுசெய்யுது, அவங்கவிட்டா இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குறாங்க, உசுரு மட்டும்தான் எங்ககிட்ட இருக்கு, எங்க உடமைங்களை அழிக் கிறாங்க, கேட்க நாதியத்தவங்களா ஆகிட்டோம்'' என கதறியுள்ளனர்.

tf

Advertisment

இதுகுறித்து தாக்குதலுக்குள்ளான மீனவர் சண்முகம் கூறுகையில், "இந்திய எல்லையில் விதிகளை பின்பற்றித்தான் மீன்பிடிக்கிறோம். இலங்கை கடற்படையும், கடற்கொள்ளையர்களும் எல்லைதாண்டி இந்திய எல்லைக்கு வந்து தாக்குறாங்க. நாங்க வைச்சிருக்கும் பொருட்களை கொள்ளையடிச்சிட்டு உசுரை மட்டும் மிச்சம் விட்டுட்டுப் போறாங்க. இரண்டு நாட்களில் மட்டும் மூன்று முறை இதுபோல் செஞ்சுட்டாங்க. கடலுக்குப் போகவே பயமா இருக்கு. இந்திய கடற்படை இதை துளியும் கண்டுகொள்வதில்லை. அதனாலேயே கொள்ளையர்கள் எங்களிடம் கொள்ளையடிக்கத் தயங்கமாட்டேங்குறாங்க. நடுக்கடலில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கான சூழல் இல்லாமல் போய்விட்டது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்திய கடற்படையினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க முன்வர வேண்டும்'' என்று கலங்குகிறார்.

இதற்கிடையில் நாகையைச் சேர்ந்த மீனவர் கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரே ஆண் டில் தமிழ்நாட்டு மீனவர்கள் 333 பேரை கைது செய்ததோடு, அவர்களின் 44 மீன்பிடி படகுகளை யும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக இலங்கை செய்தித்தாள்கள் கணக்கு தெரிவிக்கின் றன. "தமிழக முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு கண்டனங்களையும் பதிவுசெய்துவருகிறார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் கட்சி பாகுபாடில்லாமல் தங்களது கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவித்துவரு கின்றனர். ஆனாலும் மத்திய பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் பிள்ளையாகவே நினைத்து முடிவெடுக்க மறுக்கிறது.

இலங்கை அரசோ, கடற்கரையோரம் அதிகம் இருக்கும், இலங்கைத் தமிழர்களை தொப்புள் கொடி உறவுகளான தமிழக மீனவர்கள் மீது ஏவிவிடுவதோடு, தமிழக மீனவர்களின் மீன்களை கடலில் கொட்டுவதும் வலைகளை அறுத்தெறி வதும், படகுகளைச் சேதப்படுத்துவதும், சிறை யில் அடைப்பதும், வழக்குப் போடுவதையும் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். தமிழக அரசு உரிய நேரத்தில் தலையிட்டு ஒன்றிய அரசை நிர்பந்திப்பதும், மீனவர்களை மீட்பதுமாக இருந்தாலும், இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது. நடப்பதெல்லாம் பார்க்கும்போது, தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம்தானா என கேள்வி எழுகிறது.

tf

இந்தியாவின் நட்பு நாடு இலங்கை எனக் கூறப்பட்டாலும் அதன் நடவடிக்கைகள் அவ்வாறு இல்லை. சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை மொத்தமாக அழித்துவிட்டது. அரசு அவர்களின் படகுகளை மீட்டாலும், இனி பயன்படுத்தமுடியாதபடி போய்விட்டது. மீனவர்களை பொருளாதார ரீதியாக முடக்குவதே மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது''’ என்கிறார்கள் மீனவர்கள்.

இலங்கையிலிருந்து இந்திரா காலத்தில் தமிழகம் வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தமிழர்கள் பெரும்பாலானோர் விவசாயிகளும், மீனவர்களும்தான். விவசாயிகள் நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் சரித்திர காலத்திலேயே தாய்நாட்டின் தொடர்பை இழந்துவிட்டனர். ஆனால் மீனவர்களோ பகல்முழுவதும் ஒரே கடலுக்குள், தொழில் செய்ததால் 1948 வரையில் அவர்களுக்கு இரண்டு நாடு என்கிற பேதமே மூளையில் ஏற மறுத்து விட்டது.

எல்லை கடந்த திருமணங்கள், கலாச்சாரக் கொண்டாட்டங்கள், உறவுகள் சர்வ சாதாரணமாக இருந்தன. கடலுக்கு அந்த பக்கம் ஒரு மனைவி, இந்த பக்கம் இன்னொரு மனைவி என்றிருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இருபுறமும் உள்ள கடலோரமுள்ள மக்கள் கடலில் ஒரே உணவைத் தான் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் இன்று அரசுகளின் சதியால் தமிழக மீனவர்கள் விசைப் படகுகளைக் கொண்டு அந்த பக்கத்து மீனவர் களின் கடல் வளத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று வெறுப்பை உண்டாக்கிவிட்டனர்.

உண்மையில் தற்போது தடைசெய்யப்பட்ட வலை களைக் கொண்டு அங்குள்ள மீன்வளத்தை தமிழக மீனவர்கள் அழிக்கிறார்கள் என்பது வேறு கதை. இரு நாட்டு ஒப்பந்தம் செய்யப் பட்டபோது இரு கரை மீனவர்களிடம் இருந்த உறவுகளை அங்கீகரிக்கும் உபவிதிகளைத் சேர்த்திருந்தால் இந்தநிலை வந்திருக்காது. இலங்கை மற்றும் இந்திய அரசுகளும் இதில் அக்கறை காட்டவில்லை. சர்வதேச எல்லை பற்றிய உடன்படிக்கை என்பதால் அந்தந்த பகுதியின் பிரதிநிதிகள்கூட தங்களின் இன உரிமை, வாழ்வுரிமை, தொழில்உரிமை பறிபோகிறது என்கிற வகையில் யோசித்து மனித உரிமை ஆணையத்திடம்கூட வாதாடவில்லை. இலங்கை அரசுடன் பேசுவதை கௌரவக் குறைவாக நினைத்தனர். அரசியல்வாதிகள் .பழைய தொடர்புகளை ஆணித்தரமாக எடுத்துரைத்திருந் தால் இந்தநிலை வந்திருக்காது.

எந்த சர்வதேச நடுவமும் எல்லைகள் எப்படிப் போனாலும் பரவாயில்லை மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என கூறியிருக்கும். எல்லை தாண்டிய விவகாரமோ கடல்கொள்ளையோ நடந்திருக்காது. ஏன் இந்த எல்லை தாண்டுதல் நிகழ்கிறது என்பதைக் காணவேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக, எல்லைக்கோடு ராமேஸ்வரத்திற்கு மிக அருகில் 5 கிலோமீட்டரில் செல்வதால் மீனவர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தனுஷ்கோடி முனையில் மிக நீண்டு உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னார் 50 கிலோமீட்டர். ஆனால் தனுஷ்கோடியிலிருந்து மன்னார் 25 கிலோமீட்டர் தான். இந்த குழப்பத்தால்தான் அப்பாவி தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு இரண்டு நாடுகளும் பேசி ஒரு தீர்வு காணவேண்டும். ஆனால் மத்தியில் ஆளும் அரசுகள் தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் கோணத்தில் பார்க்கின்றன. இலங்கை அரசோ கடலோரமுள்ள இலங்கை தமிழ் மீனவர்களை ஏவிவிட்டு இரு கரையோரமுள்ள தமிழர்களுக்குள் மோதலை உண்டாக்கி வெறுப்பை விதைக்கிறது. இந்த நிலை மாறும் வரை இந்த அவலம் தொடரத்தான் செய்யும்''”என்கிறார் விரிவாக.