இலங்கையின் அரசியலிலும் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ள அம்சங்கள் இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறார், மனித உரிமை செயற்பாட்டாளரான சண் மாஸ்டர்.
சிறீலங்காவுக்கான சீன தூதர் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததன் நோக்கம் என்ன? அவருக்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமான பாதுகாப்பை சிறீலங்கா அரசு வழங்கியது?
தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்புக்கு துணை நின்றதோடு அந்தக் குற்றத்திலிருந்து சிறீலங்காவை உலக அரங்கில் பாதுகாத்து வரும் தன் நீண்ட கால மற்றும் நிரந்தர நண்பனான சீனாவின் தூதருக்கு பிரம் மாண்டமான பாதுகாப்பை வழங்கியதில் வியப்பென்ன இருக்கிறது?
சீனத் தூதர் சிறீலங்காவின் வடக்குப் பகுதிக்கு சென்றுள்ளார். நல்லூர் கந்தசாமிக் கோயிலில் மேலாடை இல்லாமல் நிற்கிறார்; யாழ் நூலகத்தைப் பார்வையிட்டு லேப் டாப் தருகிறார். தமிழ் மீனவர்களுக்கு வலை கொடுக்கிறார். தென்னிலங்கையில் அம்பந்தோட்டா துறைமுகமும், கொழும்பு துறைமுகப் பட்டினமும் சீனாவிடம் உள்ளது. துறைமுகங்களில் கால் பதித்த சீனா, நல்லூர் கோயிலில் அடியெடுத்து வைத் திருப்பது வெறும் பச்சைக் கண்களில் பார்த்தால் சாதாரண நிகழ்வாகத் தெரிய லாம். ஆனால், புவிசார் அரசியல் இராஜ தந்திரக் கண்களில் பார்த்தால், ”இலங்கை யில் தனது வெற்றிக் கொடியை நாட்டி விட்டேன்” என்று சீனா, முருகப்பெருமானுக்கும் அவ ரது நாடான இந்தியாவுக்கும் சொல்லும் அறிவிப்பாகும். அவர் தன் கையை நீட்டி, "இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம்?' என்று கேட்டது, ’"இதோ நாங்கள் தொட்டுவிடும் தூரத்தில் நெருங்கிவிட்டோம்'’என்று சொல்வ தன்றி வேறென்ன? இந்தியாவின் ஆயிரமாயி ரம் ஆண்டு கால வரலாற்றில் அதன் தென் முனையில் இருந்தொரு படையெடுப்பு நடந்ததே கிடையாது. தமிழர்களின் அழிவை இந்தியா வேடிக்கைப் பார்ப்பது தன் கையால் தன் கண்களைக் குத்திக் கொள்வதற்கு ஒப்பாகும் என்பது இப்போது புரிந்திருக்கக் கூடும். இந்தியா தமிழர்களைக் கைவிட்டது, சீனா தமிழ்க் கடவுளைக்கூட கைப்பற்றி விட்டது. வென்றது சிங்களர் அல்ல, சீனா. தோற்றது தமிழர்கள் அல்ல, இந்தியா என்பதற்கு இதுவே சாட்சி.
தமிழ்க் கட்சிகள் சேர்ந்து 13-ஆவது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசை வலியுறுத்துமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைப்பதற்கான நகர்வுகள் இடம் பெறுவதாக அறிய முடிகிறதே?
இலங்கை அரசியல் சட்டத்தில் 1987-இல் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தம் இந்திய -இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாகும். அதன்வழி ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான அரசியல் தீர்வை எட்ட முடியும் என்று இந்தியா எதிர்பார்த்தது. ஆனால், அப்படியான ஒரு தீர்வு சாத்தியம் என கருதியது தவறு என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அப்போது இலங்கைக்கு தூதராக இருந்த ஜே.என். தீட்சித், தனது ’"அசைன்மெண்ட் கொழும்பு'’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “இலங்கை தமிழருக் கும் சிங்களவருக்கும் இடையே அரசியல் பொருளாதார -சமூக காரணிகளையும் தாண்டி அவற்றிற்கும் அப்பால் ஆழமான உளவியல் ரீதியானதும், உணர்ச்சிவசம் கொண்டதுமான அதலபாதாள வேறுபாடு இருப்பதை புரிந்துகொள்ளத் தேவையான அளவு அறிவு அவரிடமும் (திரு.ராஜீவ் காந்தி) மற்றும் அவருக்கு ஆலோசனை கூறிய எங்கள் அனைவரிடமும் இருக்கவில்லை.
பகைமையின் அளவே தீர்வின் அளவைத் தீர்மானிக்கிறது. முன்னாள் சிங்களப் பிரதமர் பண்டாரநாயக்கா 1958-ல், தமிழர்களுடன் ஒப்புக்கொண்ட உடன்படிக்கையை சுமார் 300 பௌத்த துறவிகள் முன்பு கிழித்தெறிந்தார். முன்னாள் சிங்கள அதிபர் சந்திரிகா முன் வைத்த இனப் பிரச்சனைக்கான தீர்வு திட்டத்தை, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கே 225 நாடாளுமன்ற உறுப் பினர்கள் முன்னிலையில் கிழித்தெறிந்தார். முள்ளி வாய்க்கால் இன அழிப்புப் போர் முடிந்தவுடன் "13-ஆவது திருத்தத்தைவிடவும் மேம்பட்ட அரசியல் தீர்வைக் கொடுப்போம்' என்று ஐ.நா.வில் பேசினார் மகிந்த இராசபக்சே. ஆனால், கடந்த அதிபர் தேர்தலின்போது, "மாகாணங்களைக் கலைப் போம்'’என்ற வாக்குறுதியை முன்வைத்து கோத்தபய வெற்றி பெற்றார். "ஒற்றையாட்சியில் இருந்து ஓரங்குலம்கூட இறங்கிவர எந்த சிங்களத் தலைவரும் முன்வரவில்லை' என்பதே வரலாற்று உண்மை. மேலும் 13-ஆவது திருத்த சட்டம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பையும் தடுத்து நிறுத்த வில்லை. அதேநேரம் இலங்கையில், சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதிக்கத்தையும் தடுக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்வதும் அவசியமாகும்.
இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண முடியும் என்று நம்புவார்களாயின், அது பற்றிய பேச்சுவார்த்தை என்பது தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிப்பது, வடக்கு, கிழக்கை தமிழர் தாயகமாக அங்கீகரித்து இணைப்பது, அந்த மாகாணங்களுக்கு காணி, காவல் அதிகாரத்தை உறுதிசெய்வது மற்றும் அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் சிங்களப் படையை வெளியேற்றுவது என்பதில் இருந்துதான் தொடங்க முடியும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு சாத்தியமில்லை, பொதுவாக் கெடுப்பின் வழி அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையின் நியாயத்தை நிறுவ முடியும்.
தமிழரின் கண்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் அச்சம் தெரிவித் துள்ளனரே?
அண்மையில் பாகிஸ்தானில் ஒரு சிங்கள இளைஞன், அங்குள்ள மதவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டார். அதற்கு அனுதாபம் தெரிவித்த பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி கண் மருத்துவர் நியாஸ் புரோகி, "இலங்கை நமக்கு 35,000 விழிகளைத் தானம் செய்திருக்கிறது, நாமோ பார்வை இழந்துவிட் டோம்''’என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசால் காணாமல் ஆக்கப்பட்ட 19,000-க்கும் மேற்பட்ட தம் உறவுகளை தேடியலைந்து வரும் தமிழர்கள், "தமது உறவுகளை படுகொலை செய்து பெற்ற கண்களாக இருக்குமோ?' என்ற மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
அவர்களின் இந்த அச்சம் நியாயமானதே. 2014-ஆம் ஆண்டு மாத்திரம் சீனாவுக்கு 1000 கண்கள் இலங்கையிலிருந்து அனுப்பபப்பட்டுள்ள தாக தரவுகள் காணப்படுகிறது. அதேநேரம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப் பின் 2019-ஆம் ஆண்டு அறிக்கையில், இலங்கையில் காணமலாக்கப்பட்டோர் ஆயிரக்கணக்கானோர், 2014-ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இராணுவ சித்திரவதை முகாமில் கொடுமைப் படுத்தி கொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள் ளது. எனவே இந்நிகழ்வுகளை தொடர்புபடுத்துகை யில், இலங்கை பேரினவாத அரசாங்கமும் அதன் ஒடுக்குமுறை கருவிகளும் காணாமலாக்கப்பட்ட எம் உறவுகளின் கண்களையே விலை பேசி விற்றி ருப்பார்கள் என்ற சந்தேகங்கள் மெய்ப்பிக்கப் படுபவையாகவே உள்ளது.
வரலாற்றில் கண் சார்ந்து அரசியலை இலங்கையின் பேரினவாதிகள் ஏற்கனவே அரங் கேற்றியுள்ளார்கள். 1983 ஜூலை கவரத்தின்போது சிறையில் அடைக்கப்பட்ட குட்டிமணியின் கண்களைத் தோண்டி காலால் மிதித்ததுதான் சிங்கள இனவெறி. இன்று ஈழத் தமிழர்களின் கண்களை கறுப்புச் சந்தைகளில் பரிமாறி பணம் சம்பாதிக்கவும் தயங்காது. பச்சிளம் பாலகன் என்றும் பாராமல் பாலச்சந்திரன்களைக் கொன்றது அது. இசைப்பிரியாக்களைச் சின்னாபின்னமாக்கிக் கொன்றது. தமிழ் போராளிகளின் கண்களைக் கட்டி பின் மண்டையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது, சானல் 4 காணொளிகளில் வந்தது. ’
சிங்களப்படை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்க அரசு பயணத் தடை விதித்திருப்பது தொடர்பாக?
சிறீலங்காவின் அரசியல் முழுக்க முழுக்க இராணுவமயமாகி வருகிறது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனஅழிப்புக் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை உயர்பதவிகளில் அமர்த்தி அவர் களைப் பாதுகாப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வரிசையில்தான், கடந்த திசம்பர் 9 அன்று பதினோரு தமிழர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வடமேல் மாகாண ஆளுநராக அமர்த்தினார் அதிபர் கோத்தபய. இப்படியான சூழலில், அமெரிக்க அரசு பன்னாட்டு மனித உரிமை மீறல் செய்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னிருவரை, தமது நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது. அதில் இருவர் சிறீலங்கா படைத்தளபதிகளாவர். மேலே சொன்ன 11 பேர் காணாமலாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 2000-ஆம் ஆண்டில் 8 தமிழர்களைப் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்று, பின்னர் அதிலிருந்து விடுவிக்கப் பட்ட இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகிய இருவருக்கு அமெரிக்கா தடை விதித் துள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் மிசேல் பசலே, சிறீலங்காவில் பன்னாட்டுச் சட்ட மீறல்களோடு தொடர்புடையவர்கள் மீது பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றை அனைத்துலக மேலுரிமை (universal jurisdiction) அடிப்படையில் மேற்கொள்ளுங்கள் என்று ஐ.நா. உறுப்பரசுகளுக்கு வலியுறுத்தியிருந்தார். கூடவே, சிறீலங்கா மீதான பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிவகுக்குமாறும் பரிந்துரைந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அரசு இனவழிப்புக் குற்றவாளிகள் மீது பயணத் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. இவர்களுக்கு தலைமை கொடுத்தவர்கள் மீதும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். "அமெரிக்காவைவிடவும் தமிழர்களின் நீதிக்காக செயல்பட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது' என்று நாங்கள் கருதுகிறோம்.