பல்லாண்டுகளாகத் தங்களுக்கு இருந்த நெருடலான பாரத்தை, சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாகப் பார்த்து, "அங்கேயே' இறக்கி வைத்துவிட்டு, நல்லது நடக்கும் என்ற மனநிறைவோடு ஊர் திரும்பியுள்ளனர் மீனவப் பிரதிநிதிகள்.
1983-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் பிரச்சனையின் போது ஆரம்பித்து, 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் உயிரிழப்புகள், 500-க்கும் மேற்பட்ட படுகாயங்கள், 100-க்கும் அதிகமாக மூழ்கடிக்கப்பட்ட படகுகள் என இன்றுவரை, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நின்றபாடில்லை. எல்லை தாண்டி மீன்பிடித்த தாலேயே இப்படி ஆனதென்று காரணம் காட்டியது இலங்கை. இதனை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள், கண்டன அறிக்கை, பேச்சுவார்த்தைகள் என நடவடிக்கையெடுத்தாலும் மீனவர்களின் துயரத்திற்கு முற்றுப்புள்ளியே இல்லை.
இந்நிலையில், இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தார்கள் என்று கடந்த டிசம்பர் 18-ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 48 மீனவர்களைக் கைது செய்த இலங்கை, அவர்கள் பயணித்த 6 படகுகளையும் கைப்பற்றியது. அதேபோல், அடுத்த நாளான 19-ம் தேதி, மண்டபம் பகுதியைச் சேர்ந்த 2 படகுகளையும், 12 மீனவர்களையும், அதற்கடுத்த நாளில் ஜெகதாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 2 படகுகளையும், 13 மீனவர்களையும் கைது செய்து அராஜகத்தை மீண்டும் ஆரம்பித்தது இலங்கை. இதனால் கடுங்கோபமடைந்த தமிழக மீனவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் துவக்கிய நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியதையடுத்து, முதற்கட்டமாக சில மீனவர்களை மட்டும் இலங்கை அரசு விடுவித்தது.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், "இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்கள் 43 பேரையும் உடனடியாக விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்ததும், மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களது மீனவர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களைப் பொங்கல் பண்டிகைக்குள் விடுதலைசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட் டங்களை விலக்கிக்கொண்டு மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றோம். ஆனால் பொங்கல் பண்டிகைக்குப் பின்னும் மீனவர்கள் விடுவிக்கப் படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறையி லுள்ள அப்பாவி மீனவர்களின் குடும்பத்தினர் பசியும் பட்டினியுமாகத் தவித்து வருகின்றனர். மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதற்காகப் போராட் டத்தை அறிவித்தோம்'' என்றனர். மீனவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வருவாய்த்துறை, காவல்துறை, மீன்வளத் துறை அலுவலர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அமைதிப் பேச்சு வார்த்தை உடன்பாடு ஏற்படாமல் முடிவடைந்தது.
"இந்திய மீனவர்களுக்கும், இந்திய அரசுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்திவரும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு ரூ.6750 கோடி நிதியுதவி கொடுப்பது இந்திய மீனவர்களின் உணர்வு களை அவமதிக்கும் செயல். தற்போதுகூட சீன அரசுக்கு துறைமுகங்களைக் கொடுத்து இந்திய அரசுக்கு இராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இலங்கை. மேலும், நெடுந்தீவு, நயினா தீவு, அயின தீவு போன்ற தீவுகளில் நலத்திட்டங்கள் என்ற பெயரில் சீன ராணுவத்தை கொண்டு வரும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து சீனாவை வைத்து இந்தியாவை மிரட்டி நிதி உதவி என்ற பெயரில் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது'' என்கிறார் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளரான சின்னத்தம்பி.
பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்த ராமநாதபுரம் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மீனவர் சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, "உங்களது தற்போதைய பிரச்சனைகளுக்கும், நீண்டநாள் பிரச்சனைகளுக்கும் கண்டிப்பாக இந்த ஆட்சியில் முடிவு எட்டப்படும். அதற்கு நானும் இந்த அரசும் உத்திரவாதம்'' என சத்தியம் செய்ததோடு, துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தகவலைப் பரிமாற, தமிழக முதல்வரைச் சந்திக்க முடிவானது.
தமிழக முதல்வரோடான சந்திப்பு குறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரான சேசுராஜா கூறுகையில், "சென்னை, பழவேற்காடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா ஒரு மீனவப் பிரதிநிதி, ராமநாதபுரம் மாவட் டத்திலிருந்து மட்டும் நான்கு பிரதிநிதிகள் ஆகியோர் கடந்த 20-ம் தேதி முதலமைச்சரைச் சந்திப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் நால்வருடன், புதுக் கோட்டை மாவட்ட மீனவ பிரதிநிதி ஒருவரும் இணைந்து ஐவர் ஒரு குழுவாகவும், மீதமுள்ள ஆறு மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டு, காலை 10:15-10:30 மணிக்கு ஆறு நபர்கள் முதலமைச்சரைச் சந்தித்துவிட்டு வெளியேறியபின், 10.30 மணிக்கு நாங்கள் முதலமைச்சரைச் சந்தித் தோம். "நல்லா இருக்கீங்களா?' என நலம் விசாரித்த பின்னர்தான் அடுத்த வார்த்தையே பேச ஆரம்பித்தார். முதல்வருக்கு, முதலில் மீன்பிடி குறைவுக்கால நிவாரணத்தை ரூ.6000 ஆக உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்து விட்டு, பிடிபட்ட படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணமும், டீசல் விலையில் மானியமும் கோரினோம். அதன்பின் நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் வாங்கிய எங்களின் படகுகளுக்குத் தள்ளுபடியும் கேட்டு, எங்கள் மனதில் உள்ள அத்தனை உள்ளக்குமுறல்களையும் அவரிடம் வெளிப் படுத்தினோம். எங்களின் அத்தனை கோரிக்கைகள் குறித்தும், அதாவது, நாங்கள் பேச வந்ததை முன்கூட்டியே புள்ளிவிபரமாகத் தெரிந்து வைத்திருந்தார் முதலமைச்சர். அத்தனை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாகவும். நாங்கள் கூறிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாகவும் முதலமைச்சர் வாக்குறுதி தந்தார்'' என்றார்.
இந்த சந்திப்பையடுத்து, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தினைக் காத்திடும் பொருட்டு, "108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப் படகு உரிமை யாளர்களுக்கு தலா ரூ.1.50 இலட் சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும்' என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையிலுள்ள 56 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக சென்னையில் நடந்த சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்ததையடுத்து, தங்கச்சிமடத்தில் நடக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும், மேலும் விரைவில் மீனவ பிரதிநிதிகளை தமிழக அரசு சார்பில் டெல்லிக்கு அழைத் துச்சென்று வெளிவிவகாரத் துறை அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித் துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
படங்கள்: விவேக்
___________________________
படகுகளை ஏலம் விடும் இலங்கை!
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது நடவடிக்கைக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராடிவரும் சூழலில், தமிழக மீனவர்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட படகுகள் ஏலத்துக்கு விடப்படும் என்று இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் உள்ளது. இந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்தும்படி ஒன்றிய அரசை வற்புறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை, இலங்கையின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை, வரும் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவானது, மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏல அறிவிப்பு, தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் இலங்கை அரசுக்குத் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளதோடு, "ஏலம் விடப்படவுள்ள படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீட்டு வர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.