காங்கிரசின் அதிகார அமைப்புகளை மாற்றியமைத்து விட்டு அமெரிக்காவுக்கு சென்று விட்டார் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி. அந்த அதிரடி நடவடிக்கையில் நேரு குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர்களுக்கு கல்தா கொடுக்கப் பட்டிருக்கிறது. இதனால் அகில இந்திய காங்கிரசில் உள்கட்சி பூசல்கள் வெடிக்கத் துவங்கியிருக்கின்றன.

ss

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகியதோடு, நேரு குடும்பத்தினரல்லாத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுங்கள் என்பதை வலியுறுத்தினார் ராகுல்காந்தி. அவரின் கருத்துக்கு மூத்த தலைவர்களிடம் வரவேற்பும், இளம் தலைவர்களிடம் எதிர்ப்பும் இருந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்தது. இதனால் கடந்த ஒரு வருடமாக தற்காலிக தலைவராக இருந்து வருகிறார் சோனியா காந்தி.

இந்த நிலையில், ’கட்சிக்கு முழு நேர தலைவர் இல்லாதது காங்கிரசை பலகீனப்படுத்துகிறது; காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை இழந்து வருகிறது. கட்சியை மறுசீரமைப்புக்கு உள்ளாக்குங்கள்; காங்கிரசை பலப்படுத்த அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்துங்கள்; கட்சிக்கு உழைக்கும் ஒருவரை தலைவராக நியமிப்பதில் தீர்க்கமான ஒரு முடிவை எடுங்கள் என்கிற ரீதியில் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், கபில்சிபில், மல்லிகார்ஜுனகார்கே, மனிஷ் திவாரி, ஆனந்த சர்மா, வீரப்ப மொய்லி, சசிதரூர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 23 பேர் கையெழுத்திட்டு சோனியா வுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

Advertisment

அந்த கடிதம் ராகுலை எரிச்சலடைய வைத்தது. உடனே கட்சியின் செயற்குழு வான காரிய கமிட்டியை கூட்டி சமீபத்தில் விவாதித்தார் சோனியாகாந்தி. அப்போது, மூத்த தலைவர்கள் எழுதிய கடித வரிகளுக்கு மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, ராகுல் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக, கடிதம் எழுதிய தலைவர்களில் பலர், பா.ஜ.க.வுடன் மறைமுக தொடர்புகளை வைத்துக் கொண்டு காங்கிரசுக்கு துரோகம் செய்வதாக குற்றம் சாட்டினார் ராகுல். அந்த குற்றச் சாட்டு கட்சிக்குள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், கட்சியின் அதிகார அமைப்புகளை மாற்றியமைத்திருப்பதுடன், கட்சிக்கு அனைத்து விதத்திலும் ஆலோசனை வழங்க புதிதாக ஆறு பேர் கொண்ட குழுவை உருவாக்கியிருக்கிறார் சோனியா. அந்த குழுவில் உள்ள 6 பேரும் சோனியாவுக்கும் ராகுலுக்கும் மட்டுமே விசுவாசிகள். அந்த அட்வைஸிங் கமிட்டி, சோனியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய தலைவர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.

s

Advertisment

இதுகுறித்து ராகுலுக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, ""பாஜக தலைவர்களின் ஆசியுடன் காங்கிரசுக்குள் கலகத்தை ஏற்படுத்தி வருகின்றனர் மூத்த தலைவர்கள் பலர். அவர்களுக்கு தலைமை வகிப்பவர் குலாம்நபி ஆசாத். அவரது முயற்சியில்தான் சோனியாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அது அம்பலமானதால்தான் ராகுலுக்கு கடும் கோபம்.

படிப்படியாக அவர்களை புறக்கணிப்பது பற்றி மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணியுடன் ஆலோசித்தார் சோனியா. அவர்களின் ஒப்புதலின்படி, முதல்கட்டமாக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம்நபியை நீக்கியிருக்கிறார். சில மாதங்கள் கழித்து காரிய கமிட்டி பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்படுவார். மல்லிகார்ஜுனகார்கே, ஆனந்த் சர்மா ஆகியோர் காரிய கமிட்டியில் இருந்தாலும் அவர்களை ஓரங்கட்டும் வேலையும் நடந்து வருகிறது.

கபில்சிபில், மனிஷ்திவாரி, சசிதரூர் ஆகியோருக்கு காரிய கமிட்டியிலும், காரிய கமிட்டிக்கான நிரந்தர அழைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலிலும் அவர்களுக்கு இடமில்லை. புதிய பொதுச்செயலாளர்களாக முகுல்வாஸ்னிக், ஹரிஸ் ராவத், உம்மன்சாண்டி, தாரிக் அன்வர், பிரியங்கா காந்தி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, ஜித்தேந்திரசிங், அஜய்மக்கான், கே.சி.வேணுகோபால் ஆகிய 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 9 பேரும் ராகுலின் கண் அசைவில் இயங்குபவர்கள்.

கட்சியில் அனைத்து நிலைகளிலும் தனக்கு ஆலோசனை வழங்க, ஏ.கே.அந்தோணி, அகமதுபடேல், அம்பிகாசோனி, முகுல்வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகிய 6 பேர் கொண்ட அட்வைசிங் கமிட்டியை புதிதாக உருவாக்கியிருக்கிறார் சோனியா. இவர்கள் 6 பேரும் சோனியா-ராகுலின் மனசாட்சிகள். ஆக, அட்வைசிங் கமிட்டி, காரியகமிட்டி உறுப்பினர்கள், காரியகமிட்டியின் நிரந்தர மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள், மேலிட பொறுப்பாளர்கள், பொது தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் என புதிதாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதில் 99 சதவீதம் சோனியா குடும்பத்தின் விசுவாசிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. துரோகிகள் மெல்ல மெல்ல களை எடுக்கப்படுவார்கள்'' என்கின்றனர் .

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அளித்த நம்பிக்கை பொய்யானது என்பதை தேர்தல் முடிவுகளில் உணர்ந்து அதிர்ந்தார் ராகுல்காந்தி. அந்த விரக்தியால்தான், தலைவர் பதவியை ராஜினாமா செய்த துடன், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவருக்கு தலைவர் பதவி என்றார். அதேநேரத்தில், இதையே காரணமாக வைத்து பா.ஜ.க. மேலிடம், காங்கிரஸ் சீனியர்களுக்குள் ஊடுருவியதாக ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவுதான் இந்த மாற்றம். மீண்டும் ராகுல் தலைவர் பதவியேற்பதற்கு வசதியாக அனைத்து அமைப்புகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

-இரா.இளையசெல்வன்