தமிழ் சினிமா ஸ்டிரைக் ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகிப்போச்சு. இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. கியூப் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து இந்த ஸ்டிரைக்கை பிப்ரவரி-01-ஆம் தேதி ஆரம்பிச்சதே தெலுங்கு சினிமா உலகம்தான். தெலுங்கு சினிமா உலகிற்கு ஆதரவாக மலையாள, கன்னட, தமிழ் சினிமாவும் ஸ்டிரைக்கில் குதித்தன. பெங்களூர், ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடந்த பேச்சுவார்த்தையில் கியூப்பிடம் தயாரிப்பாளர்கள் கேட்ட சர்வீஸ் சார்ஜில் 25% கன்சஷனுக்கு 18%-க்கு மூன்று மொழி தயாரிப்பாளர்களும் ஒத்துக் கொண்டனர். தமிழ் சினிமா ஸ்டிரைக் மட்டும் ஜவ்வாக இழுத்துக்கொண்டே போகிறது.
இதற்கெல்லாம் ஒட்டுமொத்த காரணமே நடிகர்சங்கச் செயலாளராகவும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் இருக்கும் விஷால்தான். யார் சொல் பேச்சையும் கேட்காமல், தான் சொல்வதுதான் சரி என வீம்பு பண்ணுவதால்தான் இம்புட்டு அக்கப்போரும் என முக்கால்வாசித் தயாரிப்பாளர்கள் முனகிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் மூணு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் விஷால். இந்தப் பேச்சுவார்த்தைக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் தியேட்டர் அதிபர்களின் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் மட்டும் வரக்கூடாது என வீம்பு பண்ணியிருக்கிறார் விஷால். இதனால் டென்ஷனான தமிழக தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர்கள் ரோஹிணி பன்னீர்செல்வம், பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம் எனச் சொல்லிவிட்டார். வலிந்து அழைத்திருக்கிறார் விஷால். ஆனால் முடிவே எட்டப்படாமல் மூணு சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
""ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்து, வேட்புமனுவே டிஸ்மிஸ் ஆனபோது, எடப்பாடியையும் அமைச்சர்களையும் சகட்டுமேனிக்கு விளாசியவர் விஷால். ஆனா இப்ப எங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது வார்த்தைக்கு வார்த்தை, மாண்புமிகு அய்யா முதல்வர் எடப்பாடி அவர்கள், மாண்புமிகு அய்யா அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள்னு பம்முனாரு. இப்ப விஷாலின் வீம்பினாலும் முரட்டுப் பிடிவாதத்தாலும் வருமானத்துக்கு வழியே இல்லாமல் சீரழிவது சினிமா தொழிலாளர்கள் தான்''’என ரொம்பவே நொந்து பேசினார் அந்த தியேட்டர் அதிபர்.
தியேட்டர்காரர்கள், "ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பியாச்சும் பொழச்சுக்குறோம், அதுக்கு பெர்மிஷன் கொடுங்க'ன்னு போலீஸிடம் கெஞ்சும் நிலைக்குப் போய்விட்டார்கள்.
நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது, தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், கியூப் நிறுவனத்தினர் ஆகிய முத்தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருக்கிறாராம் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.
சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க விஷால்.