போராட்டக்களத்தில் வேகமும் ஆவேசமும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினருக்கு இயல்பான ஒன்று. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து அரசுக்குச் சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 45 சுங்கச்சாவடிகளில் ஒரே நேரத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென முடிவெடுத்தார் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்.
ஏப்ரல் 1-ஆம் தேதியன்று உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு காலை 10 மணி முதலே த.வா.க. தொண்டர்கள் குழுமத் தொடங்கி
போராட்டக்களத்தில் வேகமும் ஆவேசமும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினருக்கு இயல்பான ஒன்று. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து அரசுக்குச் சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 45 சுங்கச்சாவடிகளில் ஒரே நேரத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென முடிவெடுத்தார் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்.
ஏப்ரல் 1-ஆம் தேதியன்று உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு காலை 10 மணி முதலே த.வா.க. தொண்டர்கள் குழுமத் தொடங்கினர். த.வா.க. மா.செ. ராஜேஷ், ந.செ. சந்தோஷ், இளைஞரணிச் செயலாளர் கோபி ஆகியோர் தொண்டர்களைப் பெருமளவில் திரட்டியிருந்தனர். எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். 50-க்கும் மேற்பட்ட வாகனங்களோடு வந்த வேல்முருகன், சரசரவென சுங்கச்சாவடிக்குள் நுழைந்தார்.
தொண்டர்களோ கண்ணிமைக்கும் நேரத்தில் வரிவசூல் பூத்துகளின் கண்ணாடி, கேமராக்களை உடைத்துத் தள்ளினர். சில நிமிடங்களுக்கு அந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தது. சுங்கச்சாவடி ஊழியர்கள் தப்பித்தால்போதுமென ஓட்டம்பிடித்தனர். எல்லோரையும் மறித்து போலீஸ் வேனில் ஏற்றியது காவல்துறை. மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி வேல்முருகன் வேனில் ஏறினார். அனைவரையும் உளுந்தூர்பேட்டை அன்பு திருமண மண்டபத்தில் அடைத்தது போலீஸ்.
""மத்திய அரசு தமிழக நலனைத் தொடர்ந்து புறக்கணித்துவருகிறது. புயல்மழை போன்ற பாதிப்புகளுக்குகூட உரிய நிதி கொடுப்பதில்லை, தமிழகத்தை இந்திய மாநிலங்களில் ஒன்றாகவே கருதாத மத்திய அரசு யாரிடம் கேட்கிறது வரி? அதனால்தான் இந்த அதிரடிப் போராட்டம்'' என்றனர் கோரஸாக.
வேல்முருகனை சந்தித்தபோது, “""மத்திய அரசும் பிரதமர் மோடியும் தமிழகத்தை பாலைவனமாக்க முடிவுசெய்துள்ளனர். நியுட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு, கூடங்குளம் அணு உலை என மக்களுக்கு எதிரான திட்டங்களை தமிழகத்தில் தொடங்கப்பார்க்கிறது. தமிழகத்தில் காவிக் கும்பலால்,… பி.ஜே.பி.யால் ஒருபோதும் காலூன்றமுடியாது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அலட்சியமாக உள்ளது. அதனால்தான் இப்படிப்பட்ட போராட்டத்தில் இறங்கினோம்''’என போராட்ட நியாயங்களைப் பேசினார்.
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் திரண்ட த.வா.க.வினர் அந்த வழி வந்த யாரும் கட்டணம் செலுத்தாதபடி பார்த்துக்கொண்டதால், வாகனங்கள் கட்டணமின்றி கடந்துசென்றன. சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம்மூலம் மத்திய அரசை மட்டுமல்ல, தமிழக அரசியல்கட்சித் தலைவர்களையும் யோசிக்கவைத்துள்ளார் வேல்முருகன்.