news

வந்த செய்தி: துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் பெயரில் கலெக்டரின் பி.ஏ.வுக்கு மிரட்டல்.

ravinadhவிசாரித்த உண்மை: கடந்த வாரம் கிருஷ்ணகிரி கலெக்டர் கதிரவனின் பி.ஏ.குமரேசனை செல்ஃபோனில் தொடர்பு கொண்டது ஒரு குரல். "நான் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத் பேசுறேன். என்னோட நண்பர் ஒந்தியம்புதூர் தமிழ்த்தென்றல் உங்களைப் பார்க்க வருவார். அவரின் சகோதரிக்கு சத்துணவு அமைப்பாளர் வேலைபோட்டுக் கொடுங்கள்'’எனச் சொல்லிவிட்டு லைன் கட்டாகியது. அந்தக் குரல் சொன்னது போலவே மறுநாள் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஆறுமுகம் என்பவர் குமரேசனைச் சந்தித்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட குமரேசன், அந்தப் பார்ட்டியிடம் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்ததும், "டெபுடி சி.எம். மகன் சொல்லியும் என்னை சந்தேகப்படுறியா?' என சவுண்டைக் கொடுத்ததும், போலீசுக்குப் போனைப் போட்டார் குமரேசன். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் ஆறுமுகத்தை அள்ளிச்சென்று விசாரித்ததில், டுபாக்கூர் பார்ட்டி எனத் தெரிந்ததும் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டனர்.

Advertisment

-அருண்பாண்டியன்

வந்த செய்தி: தமிழக ரேசன் கடைகளைக் கைப்பற்ற யோகா சாமியார் பாபா ராம்தேவ் திட்டம்.

Advertisment

babaramdevவிசாரித்த உண்மை: தமிழக ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய் தவிர வெளிச் சந்தையில் விற்கப்படும் மளிகைப் பொருட்களும் விற்கப்படுகிறது. ரேசன் கடைகளுக்கு வரும் பயனாளிகளிடம் இந்த மளிகைப் பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவார்கள் ஊழியர்கள். இதைக் கணக்குப் போட்டு காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறார், மோடிக்கு நெருக்கமான யோகா சாமியார் பாபா ராம்தேவ். "பதஞ்சலி ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் ஏகப்பட்ட மளிகைப் பொருட்களை விற்றுவரும் ராம்தேவ், தமிழக ரேசன் கடைகளில் தனது பிராண்ட் சரக்கை விற்க, ஆந்திர தொழிலதிபர் ஒருவரைப் பிடித்து, அவர்மூலம் முதல்வர் எடப்பாடியைச் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டுள்ளார். கோட்டையில் உள்ள உயர்அதிகாரி ஒருவர், இதற்குப் பாலமாக செயல்பட்டு வருகிறார்.

-இளையர்

வந்த செய்தி: ஆலோசனைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பே மதுரையில் வெடித்துக் கிளம்பிய தி.மு.க. உள்குத்து.

thalapathiவிசாரித்த உண்மை: தி.மு.க. கள ஆய்வுக் கூட்டம் பிப்ரவரி 01-ஆம் தேதி தொடங்கும் நிலையில்... பிப்.22-ஆம் தேதி மதுரை மாநகர் தெற்கு, வடக்கு மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் ஸ்டாலின். "அதுவரை பொறுக்க முடியாது' என்ற முடிவோடு இப்போதே களத்தில் குதித்துவிட்டனர் மேற்படி மாவட்டங்களின் உ.பி.க்கள். மதுரை மாநகர் தெற்கு மா.செ. தளபதி, வடக்கு மா.செ. வேலுச்சாமி ஆகியோர் மீது ஏகப்பட்ட அதிருப்தியில் இருக்கிறார்கள் உ.பி.க்கள். எப்படியாவது மா.செ. பதவியிலிருந்து இருவரையும் தூக்கிவிட வேண்டும் என கங்கணம் கட்டியதன் விளைவு, இப்போது பொறுப்பில் இருக்கும் தளபதி, வேலுச்சாமி ஆட்கள், ஆளும் கட்சி பொறுப்பில் இருப்பவர்களுடன் கூடிக்குலாவுவதை செல்போனில் போட்டோ எடுத்து பிரிண்ட் போட்டு, "இப்படி இருந்தா எப்படி, -இப்படிக்கு கழகத்தின் உண்மை விசுவாசி' என்ற பெயரில் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். விவரம் கேள்விப்பட்ட மா.செ.க்கள் இருவரும் திக்... திக்... மனநிலையில் இருக்கிறார்கள்.

-ஷாகுல்

வந்த செய்தி: அமைச்சரின் கோபத்திற்குப் பயந்து மாஜி அமைச்சருக்கு போக்கு காட்டும் கலெக்டர்.

minister-veeramaniவிசாரித்த உண்மை: 2011-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒன்றரை ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து ஓரங்கட்டப்பட்டவர் டாக்டர் விஜய். வெறும் எம்.எல்.ஏ.வாக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வேலூர் மாநகராட்சியில் நீச்சல்குளம், பழைய, புதிய பேருந்து நிலையங்களில் கழிப்பிட கட்டடம், கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கட்டடம் என கட்டி முடித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அவை பயன்பாட்டிற்கு வராததால், கடந்த மாதம் வேலூர் கலெக்டர் ராமனைச் சந்தித்து, "ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து நான் கட்டிக் கொடுத்த கட்டடங்களை ஏன் திறக்காமல் இருக்கீங்க. நான் போராட்டம் பண்ணுனா இந்த ஆட்சிக்குத்தான் கெட்ட பேர்'’எனச் சிடுசிடுத்ததும் "திறப்பதற்கு ஏற்பாடு பண்றேன் சார்',’என சமாளித்த கலெக்டர் ராமன், இப்போது வரை மாஜிக்கு போக்கு காட்டி வருகிறாராம். கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது, "இப்போதைய அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் விஜய்க்கும் ஆகவே ஆகாது. அதனால அமைச்சர் கோவிச்சுக்குவார்னு கலெக்டர் பயப்படுகிறார்'’என்கிறார்கள்.

-து.ராஜா

வந்த செய்தி: டிமிக்கி கொடுத்த விக்ரம்பிரபு. விளக்கம் சொன்ன நிக்கிகல்ராணி.

nikilrani

விசாரித்த உண்மை: விக்ரம்பிரபு-நிக்கி கல்ராணி ஜோடிபோடும் படத்தின் பெயர் ‘"பக்கா.' இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த பத்தே நாளில் டைரக்டர் எஸ்.எஸ்.சூர்யாவை மாற்றச் சொல்லி தயாரிப்பாளர் டி.சிவக்குமாரிடம் அடம்பிடித்தார் விக்ரம்பிரபு. அப்பாவான பிரபுவிடம் பஞ்சாயத்து போனதும், அவர் விசாரித்த வரையில் டைரக்டர் சூர்யா, நல்ல திறமைசாலி எனத் தெரிந்து, மகனைக் கூப்பிட்டு கடிந்துகொண்டாராம். இதனால் மேலும் கடுப்பான விக்ரம்பிரபு, டைரக்டர் சொல்வதைக் கேட்காமல் அவர் இஷ்டப்படி நடித்து, டைரக்டரை டென்ஷனாக்கியுள்ளார். ஒரு வழியாக படம் முடிந்து, ஆடியோ ரிலீஸ்வரை வந்துவிட்டது. ஆனால் பழைய எரிச்சலில் ஆடியோ ஃபங்ஷனுக்கு வராமல் டிமிக்கி கொடுத்துவிட்டார் விக்ரம்பிரபு. விழாவுக்கு செமகிளாமரான காஸ்ட்யூமில் வந்து கலக்கிய ஹீரோயின் நிக்கி கல்ராணி, "அவரால வரமுடியல' என விக்ரம்பிரபு சார்பில் விளக்கம் சொன்னார்.

-பரமேஷ்