நீதியரசர்களில் இவர் வேறுபட்டவர். சட்டப்படியான நீதியை நிலைநாட்டுகிறவர்கள் மத்தியில் சமூகநீதியை நிலைநாட்டுகிறவராக இருந்தார். அதனாலேயேதான் அவரது மரணத்தின்போது, இறுதி மரியாதை செலுத்த வந்தவர்கள் அத்தனைபேரும், தங்கள் சொந்த குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல உணர்ந்திருந்தனர்.

rathavelpandianதிருநெல்வேலி மாவட்டத்தில், திருப்புடை மருதூர் கிராமத்தில் பிறந்த ரத்னவேல் பாண்டியன், சென்னை சட்டக்கல்லூரியில் பட்டம்பெற்றார். ஓ.பி.சி. வகுப்பிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல்நபர் என்ற பெருமையைப் பெற்றவர். திராவிட இயக்கத்திலும் சமூகநீதியிலும் மிகுந்த பற்றுக் கொண்டவர்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய நீதிபதிகள் குழுவில் இடம் பெற்றிருந்தார். அந்தத் தீர்ப்பில் பெரியாரின் பெயரைக் குறிப்பிட்டு சமூகநீதிக்கான அவருடைய பங்களிப்பை பதிவு செய்திருந்தார். மாநில உரிமைகள் குறித்தும் அக்கறைகொண்டவர் ரத்னவேல் பாண்டியன். அவருடைய சுயசரிதை புத்தக வெளியீட்டின்போது பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, “"எஸ்.ஆர்.பொம்மை ஆட்சிக் கலைப்பு தொடர்பான வழக்கில் வெளியான வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பில் ரத்னவேல் பாண்டியனின் பங்கும் முக்கியமானது'’என குறிப்பிட்டிருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தேசிய பிற்பட்டோர் நல வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். தென்மாவட்டங்களில் சாதிப்பூசல்களைத் தகர்த்து, தொழில் வாய்ப்புகள் பெருக இவர் முன்வைத்த பரிந்துரைகள் முக்கியமானவை.

சட்டநீதியை சமூகநீதிக் கண்ணாடியுடன் அவர் பார்வையிட்டதற்கு காரணம், திராவிட இயக்கத்துடனான நெருக்கமான தொடர்புதான். பெரியார் -அண்ணா -கலைஞர் ஆகியோரின் அன்பைப் பெற்ற ரத்னவேல் பாண்டியன், நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலரும் வழக்கறிஞர் பயிற்சியில் ரத்னவேல் பாண்டியனின் ஜூனியர்கள். வைகோ அதில் முதன்மை சீடராக அன்பைப் பெற்றிருந்தார்.

Advertisment

rathavelpandian

கணவன் தாக்கல் செய்த வழக்கில், ஆட்கொணர்வு மனுவுக்கு ஆஜராகாத மனைவியை காவல்துறையினர் கோர்ட்டில் கொண்டுவந்து நிறுத்தியபோது, நீதிபதி ரத்னவேல் பாண்டியனே நேரடியாக விசாரணை நடத்தினார். கோர்ட்டுக்கு வரக்கூட முடியாத அளவுக்கு தன்னுடைய பொருளாதாரச்சூழல் தனது கணவன் தரப்பால் பாதிக்கப்பட்டதை அந்தப் பெண் எடுத்துச் சொன்னபோது, கருணை உள்ளத்துடன் உதவிசெய்தவர் நீதியரசர்.

சட்டஅறிவை சமூகநீதி அடிப்படையில் செயல்படுத்திய நீதியரசர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

Advertisment

-ஆதனூர் சோழன்