fblovers

முகநூலில் நட்பு காதலாகி எல்லைமீறிச் சென்று... கொலையில் முடிவதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. அய்யனார் உயிர்பறிப்பு காதல் ரகத்தில் சேர்த்தி அல்ல.

Advertisment

யார் இந்த அய்யனார்?

ராஜபாளையத்தில் உள்ள ஏஞ்சல் கல்வியியல் கல்லூரியில் பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவர் அய்யனார். பலகுரல் மன்னனான இவர் அச்சு அசலாகப் பெண் குரலில் பேசி அசத்துவார். இந்த மிமிக்ரி கலையை பலரிடமும் விளையாட்டாகச் செய்தார். பெண் குரலில் பேசி வந்ததாலோ என்னவோ, தன்னை ஒரு பெண்ணாகவே பாவித்து, ஆண்களிடம் போனில் பேசவும் ஆரம்பித்தார். இந்தக் காதல் விளையாட்டுக்கு, முகநூல் அவருக்கு வசதியாக இருந்தது.

Advertisment

fbloversஅய்யனாரின் சொந்த கிராமமான விருதுநகர் மாவட்டம் -வத்திராயிருப்பு -கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். சென்னை எண்ணூர் காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறார். பெண் பெயரில் தனது முகநூல் பக்கத்தை வைத்திருந்த அய்யனாருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார் கண்ணன். அய்யனாரைப் பெண்ணென்று நம்பிய கண்ணன், காதல் தீவிரத்தை சாட் மூலமாக வெளிப்படுத்தினார். அய்யனாருக்கு பெண் குரலில் பேசுவதுதான் கைவந்த கலையாயிற்றே. கண்ணனுடன் மணிக்கணக்கில் பேசி காதலி(?) ஆகிவிட்டார்.

கண்ணனுக்கோ, தன் காதலியின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று அத்தனை தவிப்பு. ஆசையைத் தெரிவிக்கிறார். யாரோ ஓர் அழகிய பெண்ணின் போட்டோவை, தன் போட்டோவாக, அய்யனாரும் முகநூல் பக்கத்தில் பதிவேற்றுகிறார். தன்னுடன் தொடர்பில் இருப்பவர் இத்தனை அழகாக இருக்கிறாரே என்று காதல் பரவசத்தில் திளைக்கிறார் கண்ணன். இந்த கிறக்கத்தில் இருக்கும் கண்ணனிடம், அவ்வப்போது பணம் கறக்கிறார் அய்யனார். போட்டோவில் பார்த்த காதலியை நேரிலும் பார்த்தாக வேண்டும் என்ற துடிப்பு கண்ணனுக்கு ஏற்படுகிறது. டிமிக்கி கொடுத்தார் அய்யனார்.

தன்னை மணப்பதற்குத் தயார் நிலையில் இருப்பதாகச் சொல்லும் காதலி நேரில் சந்திப்பதற்கு ஏன் தயங்குகிறார்? என்று பரிதவிக்கிறார் கண்ணன். காதலியை நேரில் சந்தித்துவிடும் முயற்சியில் இறங்குகிறார். ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒருகட்டத்தில், தன் ஊர்க்காரரான அய்யனார்தான், இத்தனை காலமாக, காதல் என்ற பெயரில் தன்னை மோசடி செய்து வந்தார் என்பது தெரிய வருகிறது. காதல் கோட்டை தகர்ந்துவிடுகிறது. தனக்குத்தானே அவமானத்தால் நொறுங்கிப்போன கண்ணன், விஷம் குடிக்கிறார். தற்கொலைக்கு முயன்ற கண்ணனை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். சிகிச்சையில் குணமடைந்து விடுகிறார்.

"காதல்ன்னு நம்பவச்சு என்னை ஏமாத்துனது நம்மஊரு அய்யனார்தான். நான் ஏன் உசிரோடு இருக்கணும்? ரொம்ப கேவலமா இருக்கு. அய்யனாரை சும்மா விடக்கூடாது'’என்று தன் சகோதரர் விஜயகுமாரிடம் கண்ணன் புலம்ப... அவரது நண்பர்கள் டென்சிங், தமிழ் ஆகியோர் அய்யனாரை முடித்துவிட திட்டம் தீட்டியிருக்கிறார்கள். கண்ணன் பெயரைச் சொல்லி, அய்யனாரை போகர்குளம் கண்மாய்க்கு அழைத்து வருகிறார் டென்சிங். அங்கு அய்யனாரை அரிவாளால் வெட்டிச் சாய்க்கிறார்கள்.

inspectorகொலையான அய்யனாரின் தந்தை தெற்குமலைக்கு மகனின் நடவடிக்கைகள் தெரிந்தே இருக்கின்றன. வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தபோது, "அய்யனார் பண்ணுனது தப்புத்தான். பிரச்சினை வரும்னு பயந்தோம். எங்க பிள்ளைங்கிறதால, இந்த விஷயத்தைப் போலீஸ்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தயங்கினோம். இப்ப எங்க பிள்ளையைக் கொன்னுட்டாங்க'’என்று அழுதிருக்கிறார்.

வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ஜஸ்டின் பிரபாகரனிடம் பேசினோம். ""கொலையில் சம்பந்தப்பட்ட யாரும் சிக்கவில்லை. தேடிக்கிட்டிருக்கோம். கண்ணன் பிடிபடும்போதுதான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும். கண்ணனிடமிருந்து, அய்யனார் எப்படி பணம் பெற்றான் என்ற விபரம் தெரியவில்லை. அய்யனாரின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவேண்டும். மற்றவர்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள் என்பதற்காக, அய்யனாரை திருநங்கை என்று சொல்லிவிட முடியாது. மீசை, தாடி இல்லை என்பதற்காக ஓர் ஆணை திருநங்கை என்றோ, மீசை வளர்கிறது என்பதற்காக ஒரு பெண்ணை ஆணென்றோ தீர்மானித்துவிட முடியாது. தங்கள் மகன் அய்யனார் விவகாரத்தை, மனசாட்சிக்குப் பயந்து, முன்கூட்டியே போலீசாரிடம் அவனது பெற்றோர் சொல்லியிருந்தால், கொலை வரை போயிருக்காது''’என்றார்.

வத்திராயிருப்பைச் சேர்ந்த ஆனந்த் ""இந்தக் காலத்தில், வீட்டில் பெண் பார்த்து, தீர விசாரித்து, திருமணம் செய்துகொள்பவர்களே, விவாகரத்து பெற்று பிரிந்துவிடுகிறார்கள். காதலியை முகநூலில் தேடுவதெல்லாம் கொடுமையானது. பார்க்காமல் காதலென்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். நடைமுறை வாழ்க்கைக்குப் பெரும்பாலும் ஒத்துவராது. அதுவும், ஆணைப் பெண்ணென்று நம்பி, காதலை வளர்த்துக்கொள்பவர்கள் முகநூலில் பெருகிவிட்டார்கள்''’என்று தலையிலடித்துக்கொண்டார்.

காதலுக்குக் கண் இல்லை.. இருந்தாலும் அதை பயன்படுத்துவதில்லை, முகநூல் மோகத்தில் இருப்பவர்கள்.

-சி.என்.இராமகிருஷ்ணன்