ஆளைக் கொன்று... மானைக் கொன்று...!
1998-ஆம் ஆண்டு... "ஹம் சாத் சாத் ஹைன்'’ எனும் இந்திப் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர்கள் சல்மான்கான், சயீப் அலிகான், நடிகைகள் தபு, நீலம் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்தனர்.
அக்டோபர் 1-ஆம் தேதியன்று ஜோத்பூரை அடுத்த கன்கானி காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தம் கேட்டு... அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களும், வனத்துறையினரும் வந்தபோது... ஜிப்ஸி ஜீப்பில் சல்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வந்துகொண்டிருந்தனர். சல்மானின் கையில் துப்பாக்கி இருந்தது. அபூர்வமான "சிங்க்காரா' மற்றும் "பிளாக்பக்' இனத்தைச் சேர்ந்த இரண்டு மான்கள் வேட்டையாடப்பட்டிருந்தது. (சிங்க்காரா மான் தொடர்ந்து தண்ணீர் அருந்தாமலே பல நாட்கள் வாழக்கூடிய அபூர்வமானதாம். மனுஷப்பயதான் தண்ணி அருந்தினாலே மிருகமாயிடுறானே...)
இதையடுத்து... வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி சல்மான் உள்ளிட்டவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஜாமீன் பெற்று வெளியில் இருந்தனர்.
கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் சல்மான் மீதான குற்றத்தை உறுதி செய்த ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தேவ்குமார் கத்ரி, ‘""சல்மான் பெரிய சினிமா நட்சத்திரம். அவரை லட்சக்கணக்கானோர் பின்பற்றுகிறார்கள். அப்படியிருக்கையில் சாதுவான விலங்குகளை வேட்டையாடியிருக்கிறார்''’ எனக் குறிப்பிட்டு... சல்மானுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 4-ந் தேதி தீர்ப்பளித்திருக்கிறார். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால்... சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம்.
தீர்ப்பையொட்டி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சல்மான், உடனடியாக கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
"இது இறுதித் தீர்ப்பு அல்ல. மேல் முறையீடு செய்யப்படும்' என்றாலும்... சல்மான் சிறைக்குச் சென்றிருப்பது... பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மானை மையமாக வைத்து பாலிவுட் சினிமாவில் செய்யப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் வர்த்தக முதலீட்டிற்கு தற்காலிக சிக்கல் வந்திருக்கிறது.
மும்பையில் நடைபாதையில் உறங்கியவர்கள் மீது காரை ஏற்றியதில் ஒருவர் பலியான வழக்கில் கீழமை நீதிமன்றம் சல்மானுக்கு தண்டனை விதித்தது. அப்பீலில் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு கொஞ்சநாட்கள் முன்பு, பிரதமர் மோடியை சல்மான் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதில் சல்மானுக்கு ஆதரவாக அரசியல் விளையாட்டு இருக்கலாம்... எனக் கருதி சமூக சேவகர் ஒருவர் மஹாராஷ்டிரா அரசிடம்... இந்த வழக்கு விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார். ‘தீ விபத்து ஒன்றில் அந்த வழக்கின் தஸ்தாவேஜ்கள் எரிந்துவிட்டதாக மஹாராஷ்டிரா அரசு பதில் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சல்மானால் வேட்டையாடப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்த மான்களை அப்போதே உடல் பரிசோதனை செய்து புதைத்திருக்கிறது வனத்துறை. மான்களின் உடல்பாக மாதிரியை ஹைதராபாத்திலுள்ள விலங்குகளுக்கான பரிசோதனை மையத்தில் கொடுத்து டி.என்.ஏ. டெஸ்ட் வாங்கியிருக்கிறார்கள். ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் உள்ள சிக்காரா மானின் ரத்த மாதிரியை எடுத்து டி.என்.ஏ. டெஸ்ட் செய்து... ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அப்போதே. அந்த அறிக்கையில்... "கொல்லப்பட்டது மிக அரியவகை மான்' என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்களாம். அந்த அறிக்கை... இந்த வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக விளங்கியதாகச் சொல்லப்படுகிறது.
மான்.... சல்மான்.... ஜாமீனை எதிர்நோக்கியிருக்கிறார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்