உலகப்போட்டியில்ஒரு தமிழ் ஹீரோ!
"ஆரண்ய காண்டம்', "காக்கா முட்டை', "விசாரணை', "லென்ஸ்', "ஒரு கிடாயின் கருணை மனு', "அருவி' என்று தமிழ்த் திரைப்படங்கள் உலக திரைப்பட விழாக்களில் பரிசு பெறுவது நமக்குப் பழகிய செய்தியாகிவிட்ட நிலையில்... சமீபத்தில் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் "சிறந்த நடிகருக்கான முதல்கட்ட தேர்வில் ஒரு தமிழ் நடிகரும் இடம்பெற்றுள்ளார்' என்ற செய்தி சற்று கவனிக்க வைத்தது. அவரை சந்திக்கலாம் என்று போனபோதுதான் தெரிந்தது, அவர் ஒரு ஒளிப்பதிவாளர், திடீரென்று நடிகராகியுள்ளார் என்பது.
சந்தோஷ் நம்பிராஜன்! கவிஞர் விக்ரமாதித்யனின் மகன். ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் "டுலெட்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் ஏற்கனவே கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் "சிறந்த இந்திய திரைப்படம்' என்ற விருதைப் பெற்றிருக்கிறது இந்தோனேஷியாவில் நடக்கவுள்ள "உலக மனித உரிமைத் திரைவிழா'விலும் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "டுலெட்' பற்றி சந்தோஷ் நம்பிராஜன் நம்மிடம் பேசியது...
ஒளிப்பதிவிலிருந்து நடிப்பு... முதல் படத்திலேயே உலக அங்கீகாரம் பெறும் வாய்ப்பு... எப்படி இது?
போன வருஷம்வரை நான் நடிப்பேன் என்பது எனக்கே தெரியாது. நான் சிங்கப்பூரிலிருந்தபோது திடீரென்று ஃபோன் செய்த செழியன் சார், "ஒரு படம் பண்ணப்போறேன், நீதான் நடிக்கிற' என்று கூப்பிட்டார். உடனே கௌம்பி வந்துட்டேன். வந்ததுக்கு அப்புறம்தான் தெரியும், நான்தான் ஹீரோனு. "என்ன சார்?'னு கேட்டப்போ, "இந்த கதாபாத்திரத்துக்கு உன் முகமும், உன் கண்ணும் தேவை. நீதான் இதைச் செய்யவேண்டும்' என்று சொன்னார். அவர் என் அண்ணன் மாதிரி... அவர் சொன்னதைச் செய்தேன்.
"டுலெட்' -சென்னையில் வாடகை வீடு பிரச்சனை பற்றிய கதையா?
ஹா... ஹா... எளிதில் கணிக்கக்கூடிய வகையில்தான் டைட்டில் வச்சிருக்கார். ஆனால், அந்த பிரச்சினையில் பேசியிருக்கும் விஷயமும், கோணமும் வேறு. லட்சக்கணக்கான வெளியூர் மக்களுக்கு வாழ்வளிக்கும் சென்னையில் இன்னும் எத்தனையோ பேர் தங்க வசதியில்லாமல் "சென்னைக்கு மிக அருகில்' என்று ரியல் எஸ்டேட்காரர்களால் சொல்லப்படும் வேறு மாவட்டங்களில் இருந்து வந்து போகிறார்கள். அது சம்பந்தமான ஒரு கதையைத்தான் பேசியிருக்கிறார் செழியன். பின்னணி இசை, பாடல்கள் உள்பட வணிக திரைப்படங்களுக்கான எந்த அம்சமும் இல்லாத, மிகஇயல்பான படமா இதை உருவாக்கியிருக்கார்.
கேமராவுக்குப் பின்னாடியிருந்து முன்னாடி வந்த அனுபவம்...?
"கல்லூரி'யில் ஆரம்பித்து செழியன் சார்கூட சில படங்கள் அசிஸ்டென்ட்டாகவும், "கருப்பம்பட்டி', "கத்துக்குட்டி' படங்களில் ஒளிப்பதிவாளராகவும் வேலை செய்திருந்தாலும் ஒரு சீன்ல கூட கேமரா முன்னாடி வந்ததில்லை. அந்த எண்ணமே இருந்ததில்லை. "நீயா மட்டும் இரு'னு சொல்லி சார் கூப்பிட்டதால வந்தேன். ஒரு சின்னப்பையனுக்கு அப்பாவா நடிச்சிருக்கேன். ஷாட்டுக்கு முன்னாடி வரைக்கும் "அங்கிள்'னு கூப்பிட்டுட்டு, ஷாட்ல "அப்பா'னு கூப்பிடணும் அவன். படத்தில் அப்பா-மகன் நெருக்கம் தெரிய வேண்டுமென்பதற்காக ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் சுற்றினோம். இப்படி, நடிப்பு எனக்கு சவாலாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. "இனி வாய்ப்பு வந்தால் நடிக்கலாம்'னுதான் தோணுது.
"டுலெட் ஒரு இண்டிபெண்டன்ட் மூவி' என்கிறார்கள்... "மனைவியின் நகையை அடகு வைத்து எடுத்தேன்' என்று செழியன் கூறியுள்ளார். இதுபோன்ற படங்களுக்கு இன்னும் அந்த நிலைதான் இருக்கா?
ஆமா... இப்பவும் சிறிய படங்களை தயாரிக்க பலரும் தயாராக இல்லை. இத்தனைக்கும் இப்போதெல்லாம் பெருசா, பொழுதுபோக்கா, மசாலாவா எடுக்கப்படுகின்ற பல படங்கள் தோல்வி அடைகின்றன. அதுல அவர்களுக்கு நஷ்டமும் பெரியது. அப்படி ஒரு படம் எடுக்குற பணத்தில் ரெண்டு, மூன்று சிறிய படங்களை எடுக்கலாம். வியாபாரமும் நன்றாகத்தான் இருக்கும். நஷ்டமானாலும் பெரிதாக இருக்காது. இப்போ, இண்டிபெண்டன்ட் படங்களுக்கு உலகத் திரைப்பட விழாக்கள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் என்று வியாபார ரீதியாகவும் ஓரளவு வாய்ப்புகள் இருக்கு. தமிழ் சினிமாவின் எதிர்கால வடிவம் இதுவாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களென்று போற்றப்பட்ட சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்றோரை "ஓவர் ஆக்சன்' என்றும், "கெட்-அப் சேஞ்ச்' மட்டும்தான் என்றும் சமூக வலைத்தளங்களில் உலக சினிமா ஆர்வலர்கள் சிலர் விமர்சிக்கிறாங்களே?
நான் ஆரம்ப நிலை நடிகன்தான். என்னைப் பொறுத்தவரை, அவர்களின் படங்கள்தான் நான் படித்த பாடங்கள். அவுங்க கெட்-அப் மாற்றிய படங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் அவர்கள் சிறந்த நடிகர்கள்தான். "நவராத்திரி' படத்தில் சிவாஜி நடிப்பும், "மகாநதி'யில் கமல் நடிப்பும் யாருமே மறுக்க முடியாதது.
வரும் பிப்ரவரி 17 அன்று லண்டனில் நடக்கவுள்ளது ஒஎஎ 2018 திரைப்பட விழா. "டுலெட்', திறமையான அறிமுக படைப்பாளி (இயக்குநர் செழியன்), சிறந்த நடிகர் (சந்தோஷ் நம்பிராஜன்), சிறந்த படத்தொகுப்பு (ஸ்ரீகர் பிரசாத்) ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்துக்குப் பிறகு போட்டி பிரிவில் தேர்வாகியுள்ள தமிழ்ப் படம் இதுதான். விருதுகளை வென்று, வியாபாரத்திலும் வெல்ல வாழ்த்துகள்!
-வசந்த்