குரங்கணியாகும் கோத்தகரி!
தேனி மாவட்ட குரங்கணி மலையில், அநியாயமாக இருபது சகோதர-சகோதரிகளை தீத்தின்னக் கொடுத்தோம். இதற்குப் பிறகாவது தமிழகத்தின் மற்ற மலைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?அடுத்த விபத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு அருகிலுள்ள ஆடுபெட்டி மலைப்பகுதி.
இங்குள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட, மலையேற்ற ஓய்வுக்குடில்கள் அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து மலையேற்றப் பயிற்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இந்தக் குடில்களை ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாய் வாடகை கொடுத்து அதில் தங்கிப் பயிற்சி எடுக்கிறார்கள்.
மூட்டிய தீயின் வெப்பத்தில் நள்ளிரவு வரை ஆட்டம், பாட்டம், அமர்க்களம் நடக்கிறது. பகலில் கேத்தரின் வாட்டர்பால்ஸ் உச்சிவரை அழைத்துச் செல்வதற்கு, கோவையில் உள்ள முக்கிய இயற்கை அமைப்புகளின் ஆட்கள் வருகிறார்கள். வனத்துறை அதிகாரிகளுக்கும் இவர்களுக்கும் நல்ல பண நெருக்கம். ப்ளூஹில்ஸ் ஹோட்டல் நிர்வாகம், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி, பர்லியார், மரப்பாலம் பகுதிகளில் அடர்வனங்களில் பல குடில்களை அமைத்துள்ளன.
""சுற்றுலாப் பயணிகள் மேலே மேலே ஏறிச்செல்வதற்கு மரங்கள், கம்பிகள், கயிறுகளால் பாலம் அமைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் காடுகளுக்கு கேடு விளைவிக்கும் செயல். ட்ரெக்கிங் என்ற பெயரில் நடக்கும் இந்த விதிமீறல்களை, விபத்துக்களுக்கு வழிவகுப்பவைகளை அரசு தீவிரமாய்த் தடுக்க வேண்டும்'' என்கிறார் குன்னூர் நுகர்வோர் சங்க செயலாளர் மனோகரன்.
-அருள்குமார்
விவசாயிகளை அலட்சியம் செய்த கலெக்டர்!
காந்தி படத்தை அரசு அலுவலகங்களில் மாட்டி வைத்துவிட்டு, அவர் சொன்ன கிராம முன்னேற்றத்தை குப்பைக் கூடையில் போட்டுவிட்டார்கள் அதிகாரிகள்.
2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு, இழப்பீடு தொகையை, இதுவரை வழங்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தையும், நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் கண்டித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தமிழ் விவசாயிகள் சங்கம். இதனைத் தொடர்ந்து, கோரிக்கை மனு கொடுப்பதற்காக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்தைச் சந்திக்கச் சென்றார்கள். அவர்களைக் காத்திருக்கச் சொன்ன ஆட்சியரின் தனி உதவியாளர், ஆட்சியர் சிவஞானத்திடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்க வந்திருக்கும் விவரத்தைக் கூறியிருக்கிறார். "இன்று விவசாயிகளைச் சந்திப்பதற்கு நேரம் இல்லை'’ என்று சிவஞானம் கூறிவிட, விவசாயிகளை வெளியேறச் சொன்னார் அந்தத் தனி உதவியாளர்.
ஆட்சியர், தங்களை அலட்சியம் செய்து, அவமானப்படுத்தியதால் வெகுண்ட விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியேறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, சாலை மறியலைக் கைவிட்டு, மனு கொடுப்பதற்கு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் விவசாயிகள் நுழைந்துவிடக் கூடாது என்ற திட்டத்தோடு, மெயின் கேட்டைப் பூட்டியிருந்தனர். தங்களுக்கு எதிரான மாவட்ட ஆட்சியரின் நிலைப்பாட்டை அறிந்த விவசாயிகள், "போங்கடா... நீங்களும் உங்க மாவட்ட நிர்வாகமும்'’என்று வெறுத்துப்போய் கோஷமிட்டு, கோரிக்கை மனுவை அங்கேயே கிழித்தெறிந்தனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மட்டுமல்ல... இந்திய தேசமே, விவசாயிகளின் கண்ணீருக்கும், போராட்டத்துக்கும் மதிப்பளிக்காததால், உரிய கவனம் செலுத்தாததால் அவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருக்கிறது.
-சி.என்.இராமகிருஷ்ணன்
ருக்குவின் அநியாயச் சாவு!
ஆயிரக்கணக்கானோரின் அஞ்சலிக்குப் பிறகு, 22-3-18 மாலை மூன்று மணிக்கு ருக்குவை திருவண்ணாமலை கோயிலின் வெளிப்பிரகார வடக்கு வீதியில் அடக்கம் செய்தார்கள். இதற்கு அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரியையும் அடக்கம் செய்தார்கள்.
ருக்கு 30-04-1988 அன்று பிறந்தது. ருக்கு தந்தை ஒயில்டு டஸ்கரும் தாய் பாமாவும் முதுமலையில் இருக்கின்றன. ருக்குவின் அண்ணன் அடங்காத ஆணவம் பிடித்த வாசிம் கும்கியாக பயிற்றுவிக்கப்பட்டு வனத்துறையின் செல்லப்பிள்ளையாக இருக்கிறான்.
""1994-ல் திருவண்ணாமலை கோயிலில் இருந்த சுந்தரவடிவுக்கு மதம் பிடித்துவிட்டது. அதை முதுமலை வனத்துறையிடம் ஒப்படைத்து, பதிலுக்கு ஒன்றைக் கேட்டோம். ஏழு வயதான ருக்குவைத் தந்தார்கள். ருக்குவுக்கு பயம் காட்டியே வளர்த்திருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளிடம் ரொம்பப் பிரியமாக நடந்துகொள்ளும். ஆசி கேட்டு வரும் குழந்தைகளின் கன்னத்தை தனது கையால் வருடி முத்தம் கொடுக்கும். நோய் நொடியென ஒரு நிமிடம் கூட படுத்ததில்லை. இரவு நேரத்தில் எப்படி அங்கே நாய்கள் வந்ததோ?'' கண்கலங்கினார் அண்ணாமலையார் கோயில் முன்னாள் மணியம் சாமிக்கண்ணு.
""21-ஆம் தேதி சாயந்தரம் நாயைக் கண்டு பயந்த ருக்குவை ஐந்தாம் பிரகாரத்தில் இருந்த அதே ஷெட்டுக்கு கூட்டிப்போய் கட்டிப் போட்டாங்க. அது மேலயிருந்த தகரத்தில் ஏழெட்டு முறை முட்டிக்கொண்டது. டாக்டர் வந்து பார்த்து மருந்து போட்டுவிட்டுப் போனார். நள்ளிரவில் கயிற்றை அறுத்துக்கொண்டு பாய்ந்த ருக்கு, அங்கேயிருந்த மரத்தில் பலமுறை முட்டிக்கொண்டு சரிந்தது. அதன் உயிர் அப்போதே போய்விட்டது'' கோயில் ஊழியர்கள் வேதனையோடு சொன்னார்கள்.
முப்பது வயதேயான ருக்கு, ஹார்ட்அட்டாக்கில் இறந்ததாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அண்ணாமலையாரின் பக்தர்களோ, ""கோயில் யானை தனது வலிமை தெரியாமலே இறந்துவிட்டதே'' என்று பரிதாபப்படுகிறார்கள்.
-து.ராஜா