போலீஸில் ரவுடிகள் ராஜ்ஜியம்!

cm

கசாப்புக் கடையில் மட்டன் வெட்டுகின்ற அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டினான் ரவுடி பினு. பினுவின் பார்ட்டியில் கலந்து கொண்ட எழுபத்தைந்து ரவுடிகளை கொத்தாகத் தூக்கி வந்தது சென்னைப் பெருநகர போலீஸ். இது காலரை தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டிய செயல்தான். சென்னையில் வலம் வரும் மற்ற தாதாக்களையும் பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

தவக்களை பிரகாஷ் என்பவன் முக்கியமான ஒரு ரவுடி, தாதா சி.டி.மணியின் கூட்டாளி. இவனுடைய அண்ணன் கணேசனை ஒரு குற்ற வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார் தேனாம்பேட்டை ஆய்வாளர் கிரி. அடுத்த அரைமணி நேரத்தில் ரவுடி தவக்களை பிரகாஷிடமிருந்து போன். ""யோவ் இன்ஸ்பெக்டர்! என் அண்ணன்னு தெரிஞ்சே அரெஸ்ட் பண்ணிட்டே இல்ல. நீ தைரியசாலிதான். உன் ஸ்டேஷன்ல பெட்ரோல் குண்டு வீசுனதை இவ்ளோ சீக்கிரம் மறந்திட்டியே சார்'' நக்கலாக மிரட்டியிருக்கிறான். இதற்குப் பிறகு தவக்களையின் தோஸ்துகளும் ஆய்வாளரை மிரட்டியிருக்கிறார்கள். ஆய்வாளருக்கும் அந்தக் காவல் நிலையத்திற்கும் 24 மணி நேர பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது.

Advertisment

s

சேலம் கண்ணங்குறிச்சி ஆய்வாளர் கருணாகரனுக்கு ரவுடி சுசீந்திரனிடமிருந்து மிரட்டல் ஏதும் வரவில்லை. 16.02.18 அன்று தனது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆய்வாளருக்கு அழைப்பு விடுத்தான் அந்த ரவுடி.

இரண்டு கொலை வழக்குகளின் ஹீரோவான சுசீந்திரனின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஆய்வாளர், பார்ட்டியில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார். கேக்கின் ஒரு துண்டை எடுத்து, பாசத்தோடு அந்த ரவுடியின் வாயில் ஊட்டினார்; அதுவும் சீருடையோடு.

Advertisment

சேலம் ரவுடிகளோ ""ரவுடி சுசீந்திரன், துணை முதலமைச்சருக்கு வேண்டியவன் தான். முதலமைச்சர் எடப்பாடியாரே சுசீந்திரனுக்கு பொன்னாடை போர்த்தினாரே... இதோ ஆதாரம்'' என்று புகைப்படத்தைக் காட்டுகிறார்கள்.

-சி.என்.ராமகிருஷ்ணன்

மக்களை வதைக்கும் தனியார் துறைமுகம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாகப்பட்டினம் வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும், ஆகா இந்தப் பாழாய்ப்போன அரசாங்கத்தால் தீர்க்க முடியாத நமது பிரச்சினையை ஆளுநர் போக்கிவிடுவார் என்று நம்பினார் முன்னாள் எம்.எல்.ஏ.வும் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளருமான நிஜாமுதீன்.

ex-MLAநாகை மாவட்டம் நாகூர் அருகே மார்க் என்ற பெயரில் தனியார் கப்பல் துறைமுகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நிலக்கரி மற்றும் ரசாயன உரங்களை இறக்குமதி செய்கிறார்கள். திறந்தவெளியில் மலைபோல் கொட்டி, அதை லாரிகளில் ஏற்றுவதால் அவற்றின் துகள்கள் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்களுக்கு ஆஸ்துமா, மாரடைப்பு மற்றும் தோல் நோய்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆளுநர் வாயிலாக இந்த "நோய்' துறைமுகத்திற்கு விடிவு ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஏரியா மக்களும் நம்பினர். ஆளுநரிடம் மனுகொடுக்க அனுமதி வேண்டுமென்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

""ஆளுநர் அந்தத் துறைமுகத்தை ஆய்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி, ஆளுநர் கழுத்தில் நிலக்கரி மாலை போடுவோம்'' என்று அறிவித்தார் நிஜாமுதீன்.

மறுநாள் காலையில், முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீனை போலீஸ் கைது செய்தது.

கைதான நிஜாமுதீன் நம்மிடம், ""நாங்கள் துறைமுகத்தை மூட வேண்டும் என்று கூறவில்லை. நிலக்கரி இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறோம். ஆளுநர் ஆய்வு செய்வார் என்று நம்பினோம். ஆனால், அவரோ கோயில் கோயிலாக சாமி தரிசனம் செய்துகொண்டு, மற்ற அதிகாரிகளைப் போலவே எங்களை ஏமாற்றிவிட்டார்'' என்றார்.

-க.செல்வகுமார்

கவர்னர் வருகை கடையடைப்பு!

bandh

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

3 லட்சத்து 85 ஆயிரத்து 45 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநர் வருகிறார் என்றதுமே, ஆளுநரின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதிர்ப்புக் குரலையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தத் தயாராகிவிட்டது சிதம்பரம் நகரம்.

சிதம்பரத்தை ஒட்டியோடுகின்ற கொள்ளிடம் மற்றும் வெள்ளாறுகளின் வழியாக கடல்நீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீரை உப்புமயமாக்கிவிட்டது. ஆகையால் இந்த ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். சிதம்பரத்தில் இரண்டு ஆண்டுகளாக தரமற்ற முறையில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளால் அனைத்துச் சாலைகளும் நடப்பதற்குக்கூடத் தகுதியற்றவையாக மாறிவிட்டன. இவைகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆளுநர் இங்கு வந்த நாளில் கடையடைப்பு நடத்தினார்கள்.

இன்னொருபுறம், ""பல்கலைக்கழக ஊழல் பட்டியல் இதோ. நடவடிக்கைக்கு உத்தரவிட்டு உள்ளே வா'' என்று அண்ணாமலை பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு சிதம்பரம் நகரம் முழுக்க ஒட்டிய சுவரொட்டிகள் போலீசாரை பாடாய்ப்படுத்தின.

எந்தப் போராட்டமும் ஆளுநர் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை. பட்டமளித்தார். விருந்தினர் மாளிகையில் சுக்கு காபி சாப்பிட்டார். நந்தனார் மடத்திற்கும் சகஜானந்தா மடத்திற்கும் சென்றார். நடராஜர் கோயிலில் நடந்த நாட்டியாஞ்சலியை ரசித்தார். திருக்கடையூர் அமுதகடேஸ்வரர் ஆலயத்திற்குப் புறப்பட்டு போய்விட்டார்.

-அ.காளிதாஸ்