ஆளுங்கட்சி -எதிர்க்கட்சி மஞ்சுவிரட்டு!
நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பழனியப்பனை 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இன்றைக்கும் தொகுதியில் விஜயபாஸ்கருக்கு டஃப் ஃபைட் கொடுத்துக்கொண்டிருக்கிறார் பழனியப்பன்.
அரசியலில் மட்டுமின்றி தொகுதியிலும், தொகுதி தாண்டியும் மஞ்சுவிரட்டிலும் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இருவரும்.
ஏற்கெனவே செவலைக்காளை, மயிலைக்காளை என இரண்டு மஞ்சுவிரட்டுக் காளைகளைப் பராமரிக்கும் அமைச்சர், சமீபத்தில் கொம்பன்காளை ஒன்றையும் வாங்கியிருக்கிறார். அமைச்சர் குடும்பம் போலவே பழனியப்பன் குடும்பமும் மஞ்சுவிரட்டு மாடுகள் வளர்க்கும் குடும்பம். அவர் வீட்டிலும் வலுவான நான்கு காளைகள் உள்ளன.
எந்த மஞ்சுவிரட்டுக்குச் சென்றாலும், அமைச்சரின் காளைகளை, அடக்குவதற்கென்றே பழனியப்பனும், பழனியப்பனின் காளைகளை அடக்குவதற்கென்றே அமைச்சரும் மாடுபிடி வீரர்களை அனுப்புவார்கள்.
மதுரை -அலங்காநல்லூர் மஞ்சுவிரட்டில் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் அருகில்தான் விஜயபாஸ்கர் உட்கார்ந்திருந்தார்.
""இதோ அமைச்சர் விஜயபாஸ்கரின் செவலைக்காளை வருகிறது'' என்று அறிவித்து, தொழுவிலிருந்து வாடிவாசலில் மாட்டை விட்டார்கள். அடுத்த நொடியே... ""இந்தக் காளையை அடக்குவோருக்கு ஐயாயிரம் ரொக்கம், வெள்ளிக்காசு, கோத்ரெஜ் பீரோ, சைக்கிள், கட்டில்... என அறிவித்தது பழனியப்பன் தரப்பு. மாடு பிடிபட்டது. பழனியப்பன் ஆட்கள் விசிலடித்து அமைச்சர் தரப்பை வெறுப்பேற்றினார்கள்.
அடுத்து அறிவிப்போடு அமைச்சரின் கொம்பன்காளை களமிறக்கப்பட்டது. பழனியப்பனும், பரிசுகளை தாராளமாக அறிவித்தார். ஆனால், கொம்பன்காளையை யாராலும் அடக்க முடியவில்லை. இந்தமுறை அமைச்சரின் ஆட்கள் பழனியப்பனை வெறுப்பேற்றினார்கள்.
இந்த "மஞ்சுவிரட்டு' மோதல் அலங்காநல்லூரோடு முடியவில்லை. மற்ற ஊர்களிலும் தொடர்கிறது.
-செம்பருத்தி
பழனியில் நாறும் பஞ்சாமிர்தம்!
தைப்பூசத்திற்கு பழனி சென்றுவந்த முருகபக்தை லட்சுமி நம்மிடம், ""வீட்டிற்கு வந்து பார்த்தால் அத்தனை பஞ்சாமிர்தமும் கெட்டுப் புளிச்சவாடை வருது. உற்றார் உறவினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிவந்தேன். அத்தனை டப்பா பஞ்சாமிர்தத்தையும் குப்பையிலதான் போட்டேன். திருப்பதி லட்டு பலநாள் ஆனாலும் கெடுவதில்லை. பழனி பஞ்சாமிர்தம் மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகிறது? என் வீட்டில் உள்ளவர்கள் "நுகர்வோர் கோர்ட்டில் கேஸ் போடலாம்' என்றார்கள். நான்தான் "வேண்டாம்' என்றேன். அந்த பழனியாண்டவர் தண்டிக்கட்டும்'' என்று சாபம் கொடுத்தார்.
தஞ்சை பக்தர் ஆறுமுகமோ, ""மலைவாழைப்பழம் பயன்படுத்தினால் பஞ்சாமிர்தம் கெடாது. அதுபோல தரமான நாட்டு சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டும்.. டப்பாவைத் திறந்தாலே கெமிக்கல் வாடை வருது. கண்டதையும் போட்டு கலப்பட பஞ்சாமிர்தம்தான் தயாரிக்கிறார்கள்'' என்றார்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சோமசுந்தரத்திடம் இக்குற்றச்சாட்டுகளை கூறினோம்.
""உணவுக் கட்டுப்பாட்டுத் துறைக்கே இப்போதுதான் பஞ்சாமிர்தம் பரிசோதனைக்கு வந்திருக்கிறது. லேப் ரிப்போர்ட் வந்தபிறகுதான், பஞ்சாமிர்தத்தில் காலாவதி தேதி போடவேண்டும்'' என்றார்.
பழனிகோயில் இணையாணையர் செல்வராஜிடம் கேட்டபோது, ""பஞ்சாமிர்தம் எக்ஸ்பயரி தேதி போடும் நடைமுறையை இம்மாதத்திற்குள் (பிப்ரவரிக்குள்) கொண்டுவந்துவிடுவோம். ஏற்கெனவே டெல்லியில் நடந்த கண்காட்சியில் பழனி தேவஸ்தான பஞ்சாமிர்தம் பாராட்டையே பெற்றது'' என்றார் அவர்.
பழனி பஞ்சாமிர்தம் பஞ்சராகாமல் இருக்கவேண்டும்.
-சக்தி
கோயில் சொத்தை அரசியலாக்கும் அ.தி.மு.க.!
வாசுவி மகால், வசந்த மண்டபம், சுபிட்ஷா மஹால் என மூன்று திருமண மண்டபங்கள், பெரியகடை வீதியில் உள்ள 76 கடைகள் மற்றும் ஐந்துகோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள்... இத்தனைக்கும் உரியது சேலம் பெரியகடை வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில். இந்தக் கோயில் ஆரிய-வைசிய சமூகத்திற்கு உரியது.
ஒவ்வொரு வருடமும் இக்கோயில் தமிழக அரசுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரி செலுத்துகிறது. ஒரு திருமணம் நடந்தால் மாநகராட்சிக்கு 1500 ரூபாய் வரி செலுத்துகிறது. 76 கடைகளில் இருந்து ஆண்டுக்கு 40 லட்சம், கோயிலுக்கு வருமானம் வருகிறது.
1931-ஆம் ஆண்டு சேலம் மாவட்ட நீதிமன்றம் "ஆரிய வைசிய உறுப்பினர்கள் தேர்வு செய்து கொடுக்கும் பட்டியலைத்தான் இந்து அறநிலையத்துறை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.
ஆரிய வைசிய சமூக சபை உறுப்பினர்கள் தேர்வு செய்த ஐவர்தான் மேனேஜிங் டிரஸ்டி வேணுகோபால் தலைமையில் தற்போது கோயிலையும் கோயில் சொத்துகளையும் நிர்வகித்து வருகிறார்கள். இந்த மரபை உடைத்தெறிந்துவிட்டு, "தன்னையும் தனக்கு வேண்டிய சீனிவாசன், வெங்கடேஸ்வரன், முரளிதரன், அரவிந்தன் ஆகியோரையும் நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும்' என்று குறுக்கு வழியை நாடினார் அ.தி.மு.க. முன்னாள் மாநகர் மா.செ. பாலகிருஷ்ணன்.
நீதிமன்றமோ, "வழக்கம்போல்தான் நிர்வாகிகள் தேர்வு நடக்கவேண்டும்' என்றது.
நீதிமன்றத்தில் தோற்ற முன்னாள் மா.செ. பாலகிருஷ்ணன், ""ஆரிய வைசிய சபை தேர்தலை நிறுத்துங்கள்'' என்று முதலமைச்சர் எடப்பாடியிடம் மனு கொடுத்திருக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குச் சொந்தமான கோயிலையும், சொத்துகளையும் முன்னாள் மா.செ. அரசியலாக்க நினைப்பதும், அவருக்கு அறநிலைய அதிகாரிகள் ஆதரவளிப்பதும் வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.
-பெ.சிவசுப்பிரமணியன்