தமிழகத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருப்பதை காண முடிகிறது.
""எங்க வீட்டுப்பொண்ணு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு விட்டது. இங்கிலீஷ் டாக்டர்கள் கைவிட்டுவிட்டார்கள். திட்டக்குடி சித்தா டாக்டரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அங்கே தூக்கிக்கொண்டு ஓடினோம். அரைமணி நேரத்துக்கு ஒருமுறை அவர் கொடுத்த மருந்து நான்குமணி நேரத்தில் எழுந்து உட்கார வைத்துவிட்டது.
நாங்க அந்த சித்தாவுல இருந்தப்ப, மணிகண்டன் என்கிற மாணவனைத் தூக்கிட்டு வந்தாங்க. பெரம்பலூர்ல இன்ஜினியரிங் படிக் கிறவன். டெங்கு காய்ச்சல். தனியார் ஆஸ்பிடல்ல கைவிட்டுத்தான் அங்கே ராத்திரி 10 மணிக்கு கொண்டு வந்தாங்க. மூன்று மணி நேரத்துல எழுந்து உட்கார்ந்தான்'' உற்சாகத்தோடு சொல்கிறார் எழுத்தாளர் முருகேசன்.
சர்க்கரை நோயாளியான 68 வயதைக் கடந்த, ஓய்வுபெற்ற ராமசாமி நம்மிடம், ""என் நெருங்கிய நண்பர் ஒரு பத்திரிகையாளர். அவர் துணைவியாருக்கு ஆஸ்துமா. பாண்டிச்சேரி பீம்ஸ் மருத்துவமனை வரை பார்த்துவிட்டு, கடைசியில சித்த வைத்தியர் பாபுவிடம் பார்த்தார். இப்ப சராசரி பெண்களைப் போல சாதாரணமாகி விட்டார். 68 வயதில் நானே சித்த மருந்துதான் சாப்பிடுறேன். டூவீலர்ல போறேன்... வர்றேன். எங்க வீட்ல என் பேரப்பிள்ளைகள் உட்பட "சித்தா'தான்'' பெருமையோடு சொன்னார் ஆசிரியர்.
""கிட்னியில கல்லு. சித்தமருந்துலதான் கரைஞ்சது... இப்ப எல்லாத்துக்கும் சித்தாவுக்குத்தான் போறம்'' -இது பொன்னேரி கொளஞ்சியம்மாவின் வாக்குமூலம்.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சித்த ராஜ வைத்தியர் பாபு நம்மிடம், ""பல ஊர்களுக்கும் சென்று மருந்து கொடுக்கிறேன். சர்க்கரை நோய், அரிப்பு, படை, கிட்னி பாதிப்பு, கிட்னியில் கல், கல்லீரல், மண்ணீரல் பாதிப்புகள், பக்கவாதம்னு எல்லா நோய்களுக்கும் மருந்து கொடுக்கிறேன், சரியாகிறது. ஆனால் இதில் எல்லா நோய்களும் உடனடியா சரியாகிவிடும் என்று கருதக்கூடாது. அவசரப்படக்கூடாது. கொஞ்சம் தாமதமாக சுகமளிக்கும். ஆனால் முற்றிலுமாக நோயை அறவே நீடிக்கும்'' என்கிறார் பாபு.
தமிழக அரசு, மாவட்ட -வட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமன்றி சுகாதார நிலையங்களில் கூட சித்த மருத்துவப் பிரிவுகளை உருவாக்கியிருக்கிறது. மருத்துவர்களும் உதவியாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் மருந்துகள் இருப்பதில்லை.
""மூட்டுவலிக்கும், படை, தேமல் அரிப்புக்கும் நல்ல மருந்து சித்த மருந்துதான். அட நம்ம நிலவேம்புக் கஷாயம் எவ்வளவு விசேஷமானது. ஆனால் ஆஸ்பத்திரிக்குப் போனால் வியாதிக்கு வேண்டிய மருந்து இருக்காது. சித்தா, ஆயுர்வேதிக் தனியார் மருந்துக்கடைகள் ஒண்ணு ரெண்டுதான் இருக்கு. அவங்க கொடுக்கிறது சரியான மருந்துதான்னு எப்படித் தெரிஞ்சுக்கிறது. ரெண்டாவது, தனியார் கடைகளில் சித்தா மருந்து விலை யானை விலை, குதிரை விலை சொல்றாங்க'' என்கிறார் ஆர்.ஆர்.குப்பம் பன்னீர்செல்வம்.
உளுந்தூர்பேட்டை இளைஞர் வசந்தன் நம்மிடம், ""எங்க ஊர்ல ஒரு கர்ப்பிணிப் பெண், அரசு சித்தாவுக்குப் போனார். அங்கே கொடுத்த ஒரு பவுடரில் வண்டும் பூச்சியும் புடிச்சுப் போயிருந்துச்சாம். அதைப் பார்த்த டாக்டர், "இது வேண்டாம்மா... வெளிய எழுதித் தர்றேன், வாங்கிக்கொள்ளுங்கள்' என்று எழுதிக் கொடுத்துவிட்டார். முன்பெல்லாம் அரசு மருத்துவமனை சித்தா செக்ஷனுக்கு குறைஞ்சது 100 வகையான மருந்துகள் வரும். இப்ப வெறும் 25 வகைகள்தான் வருகிறதாம். அதுவும் பயனற்ற மருந்துகள்'' என்று நடந்ததைச் சொன்னார்.
தாலுகா அளவில் உள்ள அரசு மருத்துவமனை சித்தா பிரிவுகளில் தலா 127 நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டும், பார்க்கவேண்டும் என்கிறது அரசு. ஒரு நோயாளிக்கு தினமும் 7 ரூபாய் மதிப்புள்ள மருந்து கொடுக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. அப்படியானால் 127 பேருக்கு 875 ரூபாய்க்கான மருந்து தினமும் தேவைப்படுகிறது. மூன்று மாதத் திற்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் மருந்து ஒவ்வொரு மருத்துவமனைக் கும் தேவைப்படுகிறது. ஆனால் அரசு மூன்று மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் மருந்து தான் அனுப்புகிறது இயக்குநரகம்'' என்கிறார் விழுப்புரம் மாவட்டத்தி லுள்ள அரசு சித்த மருத்துவர் ஒருவர்.
நாம் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களின் மருத்துவமனைகளுக்குச் சென்று விசாரித்தோம்.
""மழைக்காலத்தில் இருமல், சளி, காய்ச்சல், மூட்டுவலி, இடுப்பு வலி, நோயாளிகள் அதிகம் வருவார்கள். கோடைக்காலத்திலோ, மூலநோய், பவுத்திரம், பேதி, வயித்துக் கடுப்பு நோயாளிகள் அதிகம் வருவார்கள். எங்கள் தேவைக்கான மருந்துகள் அடங்கிய பட்டியலை நாங்கள் அனுப்பினால் அதற்குரிய மருந்து வராது, வேறு மருந்துகளை அனுப்புகிறார்கள். அதுவும் தரமற்ற கம்பெனிகளின் மட்டமான மருந்துகளை அனுப்பு கிறார்கள். மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள்'' என்கிறார்கள் இங்கே பணிபுரியும் டாக்டர்களும் உதவியாளர்களும்.
அலோபதி என்னும் ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக, பல ஊர்களிலும் அதைக்காட்டிலும் அதிகமாக மக்கள் சித்த மருத்துவத்தில் நம்பிக்கை வைத்து வருகிறார்கள். அரசோ, இதற்குத் தகுந்தாற்போல சித்தாவிற்கு பக்கபலமாக நிற்கத் தயங்குகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அக்கறை காட்டினால் சித்தாவுக்கு ஊக்கம் கிடைக்கும்.
-எஸ்.பி.சேகர்