"தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., ஜெயேந்திரர் மறைவுக்குப் பிறகு சங்கரமடத்தை ஒரு கிளை அலுவலகமாகவே மாற்ற முடிவுசெய்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது' என்கிறார்கள் மடத்து விசுவாசிகள்.
ஜெயேந்திரரும் சுப்பிரமணிய சுவாமியும் நெருக்கமான நண்பர்கள். சு.சுவாமியை ஜெ.வுக்குப் பிடிக்காது. சு.சுவாமியுடன் நெருக்கமாக இருந்தார்கள் என்கிற காரணத்திற்காகவே தனது அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தினரை ஒதுக்கிவைத்தார் ஜெ. அவரது அண்ணன் ஜெயக்குமாரின் உதவியாளரை கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளினார். சங்கரராமனின் படுகொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை பெற்ற பிறகு சு.சுவாமியிடம் நெருக்கம் அதிகமானது. அவரை எம்.பி.யாக்க பா.ஜ.க. மேலிடத்திற்கு சிபாரிசு செய்தார் ஜெயேந்திரர். ஜெயேந்திரரின் சிபாரிசை ஏற்ற மோடி, ஜெ.வின் எதிர்ப்பை மீறி சு.சுவாமியை எம்.பி.யாக்கினார். சோனியா குடும்பத்தினர் மீதான சுவாமியின் எதிர்ப்பை காரணமாகச் சொல்லி எம்.பி. பதவி தரப்பட்டாலும் அவருக்கு மத்திய மந்திரி பதவி தரப்படவில்லை.
ஜெயேந்திரர் உடல்நலன் குறைய ஆரம்பித்ததும் பா.ஜ.க.வின் தமிழக வாய்ஸான ஆடிட்டர் குருமூர்த்தி, மடத்தில் வலுப்பெறத் துவங்கினார். மடத்திற்கு சு.சுவாமி வருகை குறைந்துபோனது. அப்படியே அவர் வந்தாலும் மடத்திலிருந்து அதை புகைப்படமாக வெளியிடமாட்டார்கள். சுவாமியும் குருமூர்த்தியும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டாலும் மட விஷயத்தில் சு.சுவாமி, ஜெயேந்திரர் பக்தராகவும், குருமூர்த்தி விஜயேந்திரர் பக்தராகவும் சாய்ந்தார்கள்.
ஜெயேந்திரர் மரணமடைந்தபோது வந்த குருமூர்த்தி, ""இனி மடத்தின் தலைவர் விஜயேந்திரர்தான். அவர் தனக்கான சிஷ்யரை தேர்ந்தெடுப்பார்'' என்றவரிடம், ""ஜெயேந்திரரின் நேரடி சிஷ்யரான மத்தூர் சுவாமிகள் என அழைக்கப்படும் ஞானப்பிரசுனேந்திர சரசுவதியை சிஷ்யரா கொண்டுவருவீர்களா?'' என கேட்டோம். ""அதெல்லாம் இல்லை'' என்பதைப்போல சிக்னல் காட்டிவிட்டுச் சென்றார். இதே குருமூர்த்தி, சங்கரராமன் கொலை தொடர்பாக போலீசில் வாக்குமூலம் அளிக்கும்போது, "சங்கரமடத்தை நாங்கள் கைப்பற்ற நினைப்பதில் என்ன தவறு?' என கேட்டார். அதை போலீஸார் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அன்று சொன்னதை இன்று நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டார் குருமூர்த்தி என்கிறார்கள் அவரைச் சார்ந்தவர்கள்.
விஜயேந்திரரை பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாற்ற முயற்சி நடக்கிறது. விஜயேந்திரரும், ஜெயேந்திரரின் ஆதரவாளர்களை ஒருவர்பின் ஒருவராக மடத்தைவிட்டு வெளியேற்ற ஆரம்பித்துவிட்டார். முதல்கட்டமாக ஜெயேந்திரரின் உளவாளிகளாக மடத்தில் இருந்த குல்பர்கா சங்கர், ஆதித்யா ஆகியோரை வெளியேற்றிவிட்டார் விஜயேந்திரர். ஜெயேந்திரர் ஆதரவாளர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக வசித்துவந்தனர். அவர்கள் அனைவரும் வெளியேறிவருகிறார்கள். அடுத்தகட்டமாக விஜயேந்திரரின் வாரிசாக பா.ஜ.க. ஆதரவு சன்னியாசியை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் குருமூர்த்தி. ""அந்த நியமனம் வந்துவிட்டால் ஜெயேந்திரர் காலத்தில் அவ்வப்போது வெளிப்பட்ட இந்துத்வா கருத்துகள் இருபத்திநான்கு மணி நேரமும் ஒலிக்கும் இடமாக காஞ்சிமடம் மாறிவிடும்'' என்கிறார்கள் மடத்து விசுவாசிகள்.
-தாமோதரன் பிரகாஷ்