பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவிகித மானியம் வழங்கப்படுமென்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார் ஜெ. தன் வாக்குறுதியை செயலாக்கம் செய்யும்முன் மறைந்துபோக, தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின், ஜெ.வின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதியன்று முதற்கட்டமாக 1 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம்வாங்க மானியம் வழங்கப்படுமென எடப்பாடி அரசு அறிவித்தது.
அறிவிப்பு வெளியானது முதலே ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கத்துக்கு மாறான இந்தக் கூட்டத்தால் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலுள்ள அனைவருமே இந்த வேலைகளில் மட்டுமே கவனம்செலுத்தும் நிலை உருவானது. பல இடங்களில் கூட்டத்தை சமாளிக்குமளவு ஆளில்லையென புலம்பும் நிலை நிலவியது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 5-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்கள்மீது பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் களஆய்வு நடத்தப்பட்டு பிப்ரவரி 15-ல் மாவட்டவாரியாக பயனாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது
இதையடுத்து பிப்ரவரி 5 அன்று தமிழகமெங்கும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அரசு அலுவலகங்களில் பெண்கள்கூட்டம் அலைமோதியது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அன்னை தெரசா மகளிர் மன்றத்தின் முன்பும் பெண்கள் திரளாக காத்துநின்றனர். இத்திட்டத்தின்கீழ் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் சென்னையில்மட்டும் 16,938 பேர் பதிவுசெய்துள்ளனர்.
தோசையைக் கொடுக்காமலே காசைப் பிடுங்கும் அரசியல் எத்தர்கள், மானியவிலை ஸ்கூட்டர் என்ற தோசையை கையில்வைத்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா? பல்வேறு இடங்களில் மானிய விலை ஸ்கூட்டர் பெறுவதற்கு கமிஷன் கேட்பதாக புகார்கள் எழுந்தன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மானியஸ்கூட்டர் பயனாளியாவதற்கு லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. தவிரவும், 50% மானிய விலை ஸ்கூட்டர் என்பதை இலவச ஸ்கூட்டர் என நிறைய பெண்கள் புரிந்துகொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் தெர்மாகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாநகராட்சி 75-வது வார்டில் நியாய விலைக் கடையொன்றைத் திறந்துவைத்து பேசும்போது, ""அரசுத் திட்டங்களில் ஆதாயங்களைப் பெற அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை பெற்றிருப்பது அவசியம்'' என திருவாய் மலர்ந்தருளினார். இதனால் எதிர்க்கட்சிகள் செல்லூர் ராஜுவையும் அ.தி.மு.க.வையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்க, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., செல்லூர் ராஜு பேசுவது அவரது சொந்தக் கருத்து என சமாளித்தார். தகுதியுள்ளவர்களுக்கு முறையாக ஸ்கூட்டி கிடைக்குமா என்ற பதற்றம் பெண்களிடம் அதிகரித்துள்ளது.
மானிய ஸ்கூட்டி திட்டம் என்பதாலோ என்னவோ, ஸ்டார்ட்டிங் ட்ரபுளுடன்தான் தொடங்கப்பட்டிருக்கிறது.
-அ.அருண்பாண்டியன்