2ஜி வழக்கில் விடுதலைத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ.யும் அமலாக்கப் பிரிவும் மேல்முறையீடு செய்த நிலையில், ஆ.ராசாவின் "2ஜி அவிழும் உண்மைகள்' தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மார்ச் 21 அன்று நடந்தது.
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, தி.க. தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். விழாவில் சுப.வீ. பேசும்போது, ""வழக்கில் மேல்முறையீடு செய்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, மேல்முறையீடு செய்யாமல் விட்டுவிடுவதற்கு இது என்ன சங்கரராமன் கொலை வழக்கா?'' என்றார் அரங்கம் அதிர.
பத்திரிகையாளர் இந்து என்.ராம், ""2ஜி வழக்கில் எடுத்து கொண்ட சுறுசுறுப்பை பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேசத்தின் வியாபம் ஊழல் வழக்கில் மத்திய அரசு காட்டவில்லை. ஊழலுக்கு எதிரான வழக்குகள் நம் நாட்டில் எப்படி நடக்கிறது. யார் மூலம் நடத்தப்படுகிறது என ஆராய்ந்தால் நாம் அதில் தத்துவஞானியாக மாறிவிடும் அபாயம் உள்ளது'' என்றார்.
கவிஞர் வைரமுத்து, ""திராவிட இயக்கத்தை அழிப்பதற்காக ஊதி பெரிதாக்கியதே 2ஜி வழக்கு'' என்றார் அழுத்தமாக. 2010-லிருந்தே இதுதொடர்பாக பல மேடைகளை அமைத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வழக்கில் ஆ.ராசா பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டதுடன், விடுதலையான கனிமொழிக்கு சால்வை போர்த்தினார்.
ஆ.ராசா தன் ஏற்புரையில், ""என்னை விசாரித்தவர்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என தெரியவில்லை. அதை நான் விளக்கினாலும் புரியவில்லை. நீதிமன்றத்தில் நானே வாதாடினேன். நான் எழுதிய புத்தகத்திற்கு எதிரான கருத்துகளை இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. இதுவே என் புத்தகத்திற்கு கிடைத்த வெற்றி'' என அவர் கூறினார்.
"ராசா கைய வச்சா அது ராங்கா போனதில்ல' எனப் பாடி, தன் பேச்சைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், ""இது ராசாவின் விடுதலை மட்டுமல்ல, தங்கை கனிமொழியின் விடுதலை, கலைஞர் டி.வி.யின் விடுதலை, ஏன் இதை தி.மு.க.வின் விடுதலையாகவே பார்க்கின்றேன். தி.மு.க.வின் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியிருக்கிறது'' என்றார் நம்பிக்கையுடன்.
விழாவுக்கு சென்னை மாவட்ட தி.மு.க.வினர் மட்டுமின்றி, ஆ.ராசாவின் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்தும் நிறைய பேர் வந்திருந்தனர். மேல்முறையீட்டை அரசியல் ஆயுதமாக எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும்நிலையில், விடுதலைத் தீர்ப்புக்கான விழாவாக இதனை முன்னெடுத்துள்ளது தி.மு.க.
-சி.ஜீவாபாரதி
படம்: எஸ்.பி.சுந்தர்