நக்கீரனின் கடந்த 15 வருட தொடர் வாசகன் என்கிற வகையில் எனக்கு ஒரு பெருமை. இன்று நான் தொடர்ந்து படிக்கும் இதழில் பார்வை பகுதியில் எனக்கு எழுதும் வாய்ப்பு என்பது இன்னும் கூடுதல் பெருமை. வாசகனின் அங்கீகாரம் -நக்கீரன்.
கோடிக்கணக்கான ரூபாய் மானநஷ்டஈடு கேட்டு வழக்கை எதிர்கொண்டிருப்பவர் அண்ணன் நக்கீரன்கோபால். ஆட்சி அதிகாரத்தால் அடக்குமுறையை ஏவினாலும் உண்மை, துணிவு, உறுதியினை கொண்டு வருவது நக்கீரன் இதழ். குரலற்றவரின் குரலாய் இருப்பதே நக்கீரனின் வெற்றி.
2018, மார்ச் 27-29 இதழ்:
"கழட்டிவிட்ட அப்பல்லோ! சசி வெளியிடும் புது வீடியோ' ஜெ.வின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைப் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் நடக்கும் நிகழ்வுகள், அப்பல்லோ மருத்துவமனையில் நடப்பவை என அனைத்தும் ஆண்டவர்களுக்கும், ஆளுகின்றவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பதிவு.
ஸ்டெர்லைட் ஆலையின் செய்தியை, செய்தியாகக்கூட பிரசுரிக்கத் தயங்கும் இதழ்களுக்கு மத்தியில் "காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா?' என்ற செய்தி, நச்சு ஆலையை வேரடி மண்ணோடு அப்புறப்படுத்த வேண்டும் என்பது முத்துக்குளித்த தூத்துக்குடியில் போராடும் மக்களின் நியாயத்தை நிலைநாட்டுவதாக அமைந்தது.
"கருவறையில் காமக்களியாட்டம்' ஆடிய அர்ச்சகரின் கட்டுரை, ஆன்மிகப் போர்வையில் ஆபாசமாக நடப்போருக்கு சவுக்கடி.
ஆர்டர்லி அவலத்தை கம்பீர காக்கிக்கு களங்கமாக, ஆதாரத்துடன் எடுத்துரைத்த விதத்தில் நக்கீரன் கம்பீரமாக நிற்கிறது.
பக்கத்திற்கு பக்கம் பக்காவாக செய்திகள் வந்தாலும் கூத்து பக்கத்தில் வைக்கும் செய்தி நறுக்காகவும், சுருக்காகவும் இருக்கிறது.
பலரின் பேச்சே வலைவீச்சாக வரும் மீம்ஸ் செய்திகளும் காலத்தின் கண்ணாடியாக அமைகிறது.
வாசகர் கடிதங்கள்!
கறையான்கள் களையெடுப்பு!
ரஜினி மக்கள் மன்றத்தில் தம்புராஜின் மா.செ. பதவி முறிப்பு நிகழ்ந்திருக்கிறது. இது அமைப்புக்குத் தீங்கு செய்வோர் மீதான களையெடுப்பு என்றால் மகிழ்ச்சி. மாறாக, மன்றத்தையே உளுத்துப்போகச் செய்வதற்கான கறையான்களின் தொண்டூழியமாக இருந்துவிடக்கூடாது.
-ஆ.தேவா, உடுமலைப்பேட்டை.
மரண விளையாட்டு!
"எனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை' என வங்கி மேலாளர் ராமசுப்பிரமணியன் கடிதம் எழுதி வைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி, வங்கியில் நடந்த கடன் மோசடி உள்விளையாட்டைப் புதுப்பிக்கிறார். இவற்றில் எது உண்மை? பணம் பத்தும் செய்யும். ஆமாம், ஐந்து வயது குழந்தையையும் பாதாளத்தில் தள்ளியிருக்கிறது.
-என்.கலா நவநீதன், குளித்தலை.