parvai

சிலையை விற்கும் பூசாரி!-தமிழினி மாநிலச் செயலாளர் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை,விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தன் அர்ப்பணிப்புச் செயல்களாலும், கடின உழைப்பாலும், இன்று தமிழகத்தின் தலைசிறந்த இதழாக வளர்ந்திருக்கிறது நக்கீரன். "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என புலவர் நக்கீரனின் உறுதியோடு நின்று நமக்காகப் போராடும் இதழ் இது என்ற நம்பிக்கையை தமிழக மக்களிடம் பெற்றிருக்கிறது.

"உண்மை துணிவு உறுதி' என்னும் கொள்கை நெறியை தனது வழித்துணையாகக் கொண்டுள்ள இதழ். 1989 சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அன்று தொடங்கி, கருத்துக்கணிப்பு என்றால் நக்கீரனே மக்கள் மனதில் தோன்றுகிறது. சூடான செய்திகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை.

Advertisment

நக்கீரன் மீது ஏவப்பட்ட பழிவாங்கும் போக்குகளும், தொடுக்கப்பட்ட வழக்குகளும், நக்கீரனுக்கு உரமாகத்தான் மாறின.

2018, ஏப்ரல் 02-04 இதழ்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கோயில் சிலையை விற்கும் பூசாரி போல, காவிரி நீரை திருடும் "திருப்பணி'யை முதலமைச்சர் எடப்பாடி செய்துகொண்டிருக்கிறார். அட்டைப்படமும், அதற்கான செய்தியும் கொதிப்பூட்டுகிறது.

Advertisment

தமிழ்க்கொடி அசைக்கும் வைகோவின் முயற்சி, நியூட்ரினோ போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். ஸ்டெர்லைட் கட்டுரை தெளிவூட்டியது. "காவி நிறமாக்கப்படும் என்.ஐ.ஏ.' கட்டுரை பயங்கரவாதத்தின் அபாயத்தையும் தீர்வையும் சொல்லியுள்ளது.

வலைவீச்சு, காவிரி விவகாரத்தைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. மாவலியின் ஆன்மிக அரசியல், பல கோணங்களில் பயணிக்கத் தூண்டுகிறது.

வாசகர் கடிதங்கள்!

கவுன்சிலரின் கவுன்சிலிங்!

திருப்பூர் எம்.பி. சத்தியபாமா தனது இல்லற வாழ்வில் கணவர் வாசுவுடன் இணக்கமாக இல்லை. காரணம், அரசியல் இரசவாதம்தான். ஆரம்பத்தில் கவுன்சிலராக்கி அழகு பார்த்த கணவருக்கே தற்போது மனரீதியாக கவுன்சிலிங் கொடுக்கும் நிலைக்குப் பலவந்தமாக தள்ளிவிட்டுள்ளார் பாமா.

-பா.ஆனந்த், கிருஷ்ணகிரி.

மலிவான மரியாதை!

ஊர்க்காவல் படைக்கான பதவி அதிகாரத்தை பணம் கொடுத்து வாங்கிக்கொண்டவர்களிடமே பதவிக்கு உரியவர்கள் பரிதாப பணிகளில் ஈடுபடுத்தப்படுவது சட்டம்-ஒழுங்கிற்கான பேராபத்து. இது காவல்துறை மீது அரசாங்கம் வைத்திருக்கும் மலிவான மரியாதையைத்தான் வெளிப்படுத்துகிறது.

-கா.குமரவேல், சேலம்.