உண்மையைத் துணிவுடனும் உறுதியுடனும் தெரிவிக்கும் ஆற்றல் கொண்டது நக்கீரன். அதை தெரிவிப்பதில் மட்டுமல்ல, செயல்படுத்துவதிலும் சரியாகவும், உறுதியாகவும் பயணிக்கிறது. 1992-ல் ஜெ. ஆட்சிக் காலத்தில் நக்கீரன் இதழை முடக்குவதற்காகச் செய்த அராஜகத்தில் அய்யா கணேசனை இழந்தோம். கோபியில் நக்கீரன் இதழ் விற்பனை செய்யக்கூடாது என்பதற்காக எங்கள் கடை உடைக்கப்பட்டது. நான் தாக்கப்பட்டேன். உலகமே யார் இந்த வீரப்பன் என கேட்டு நின்றபொழுது, இவர்தான் வீரப்பன் என உலகிற்கு காட்டியது நக்கீரன். அதனால் நக்கீரன் அடைந்த துன்பங்கள் ஏராளம். எத்தனை தடைகள் வந்தாலும் நக்கீரன் என்றும் நேர்மையின் பக்கமே.
ஒரு செய்தியை நுனிப்புல் மேயாமல் அதன் அடிஆழம் வரை சென்று உண்மையை நாட்டுக்கு உரைத்தது நக்கீரன். செய்தி மட்டுமல்ல நக்கீரனில் வெளிவந்த தொடர் கட்டுரைகளும் வரலாற்றின் கல்வெட்டுகள். ஆட்டோசங்கர், வீரப்பன், ஜெ. தொடர்பான கட்டுரைகள் மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுபவை. வலம்புரிஜான் எழுதிய "வணக்கம்', ஆசிரியர் நக்கீரன்கோபால் சந்தித்த சவால்கள், சின்னகுத்தூசியின் "புதையல்', தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத சான்றுகள்
2018, பிப்.19-21 இதழ்:
"காவிரியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது ஏன்?' உச்சநீதிமன்ற தீர்ப்பு முதல்வரால் கூட சரியாக புரிந்துகொள்ள முடியாததை, எளிய மக்களும் புரிந்துகொள்ளும்படி இந்த அரசு நாளுக்கு ஒரு வழக்குரைஞரை மாற்றியதால் தமிழர்களின் வாழ்வாதாரத்தை இழந்தோம் என தெளிவாக உணர்த்தியது.
உயர் கல்வித்துறையில் கோவை பல்கலைக்கழக துணைவேந்தர் செய்த ஊழலை அவர் வாயால் சொல்ல மறுத்ததை நக்கீரன் அழகாக, அதிரடியாக தன் எழுத்தால் சொல்லிவிட்டது. ஊடகங்களில் புஷ்பவனம் குப்புசாமியின் கோபமான பேட்டியின் முழு காரணமும் நக்கீரனில் செய்தியாக படித்தவுடன், தகுதி பேசும் மனுதர்மவாதிகள் இசைப்பல்கலைக் கழகத்தில் என்ன தகுதி பார்த்தார்கள் என்று புரிகிறது.
திரிபுராவில் பா.ஜ.க.வின் அயோக்கியத்தனமும், மோசடிப் பேர்வழிகளுடன் மோடியின் கூட்டும் சரியான செய்திகள்.
வாசகர் கடிதங்கள்!
ஸ்கூட்டி "சேஃப்டி!'
உச்சநீதிமன்றம் அளித்த காவிரி தீர்ப்பில், தமிழகத்திற்கு கர்நாடகம் தரவேண்டிய 177.25 டி.எம்.சி. தண்ணீர் எப்படி உத்தரவாதம் இல்லையோ... அதேபோலத்தான் மகளிர் ஸ்கூட்டிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 200 கோடியும் முழுசா பயன்படுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
-ஆர்.கருணாகரன், திருப்பூர்.
கலகலப்பான இறுக்கம்!
"சுப.வீ. முன்னெடுத்த இந்துக்களைப் பாதுகாக்கும் மாநாட்டுத் தீர்மானங்கள் சமூக ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கான காலத்தின் தேவைகள். இதில், நடிகர் சத்யராஜின் "தேர்தல் கமெண்ட்' மாநாட்டின் இறுக்கத்தைக் குறைத்து கலகலப்பை மூட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-வி.பி.சுரேஷ், திண்டுக்கல்